Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 27

தாவீதின் பாடல்

27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
    யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
    எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
    என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
    போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
    ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
    இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
    கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”

ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
    அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
    அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
    அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
    மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
    கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.

கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
    என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
    கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
    உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
    என்னை விட்டு விடாதிரும்!
    என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10 என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
    ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11 கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
    எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12 எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
    என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
    என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13 நான் மரிக்கும் முன்னர்
    கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14 கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
    பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

மல்கியா 2:10-3:1

யூதா தேவனுக்கு உண்மையாக இல்லை

10 நாங்கள் அனைவரும் ஒரே தந்தையை (தேவன்) உடையவர்கள். அதே தேவன் எங்கள் ஒவ்வொருவரையும் படைத்தார். எனவே ஜனங்கள் தமது சகோதரர்களை எதற்கு ஏமாற்ற வேண்டும்? அந்த ஜனங்கள் தம் உடன்படிக்கையை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறார்கள். அவர்கள் நமது முற்பிதாக்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையை மதிக்கவில்லை. 11 யூதாவின் ஜனங்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றினார்கள். எருசலேமிலும் இஸ்ரவேலிலும் உள்ள ஜனங்கள் பயங்கரமான காரியங்களைச் செய்தனர். யூதாவிலுள்ள ஜனங்கள் கத்தருடைய பரிசுத்தமான ஆலயத்தை மதிக்கவில்லை. தேவன் அந்த இடத்தை நேசிக்கிறார். யூதாவின் ஜனங்கள் அயல் நாட்டு தேவதைகளை தொழுதிடத் தொடங்கினார்கள். 12 கர்த்தர் யூதாவின் குடும்பத்திலிருந்து அந்த ஜனங்களை நீக்குவார். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஆனால் அது உதவாது. 13 நீங்கள் அழமுடியும். கர்த்தருடைய பலிபீடத்தை கண்ணீரால் மூட முடியும். ஆனால் கர்த்தர் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் நீங்கள் கொண்டு வருகிற பொருட்களால் திருப்தி அடையமாட்டார்.

14 நீங்கள், “கர்த்தரால் எங்கள் காணிக்கைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த தீமைகளைக் கர்த்தர் பார்த்தார். அவர் உங்களுக்கு எதிரான சாட்சி. நீங்கள் உங்கள் மனைவியரை ஏமாற்றியதை அவர் பார்த்தார். நீ இளமையாய் இருக்கும்போதே அப்பெண்ணை மணந்துகொண்டிருக்கிறாய். அவள் உனது பெண் சிநேகிதியாய் இருந்தாள். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துக்கொண்டீர்கள். அவள் உனது மனையியானாள். ஆனால் நீ அவளை ஏமாற்றினாய். 15 தேவன் கணவர்களும் மனைவிகளும் ஒரே உடலாகவும் ஒரே ஆவியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர். ஏன்? அதனால்தான் அவர்கள் பரிசுத்தமான குழந்தைகளைப் பெறமுடியும். எனவே அந்த ஆவிக்குரிய கூடி வருதலை பாதுகாத்துக்கொள். உன் மனைவியை நீ ஏமாற்றாதே. அவள் உனது இளமைகாலம் முதற்கொண்டே உன் மனைவியாக இருக்கிறாள்.

16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், “நான் விவாகரத்தை வெறுக்கிறேன். நான் ஆண்கள் செய்யும் கொடூரங்களை வெறுக்கிறேன். எனவே உன் ஆவிக்குரிய கூடிவருதலை காப்பாற்று. உன் மனைவியை ஏமாற்றாதே” என்று கூறுகிறார்.

நியாயத்தீர்ப்புக்கான சிறப்பான காலம்

17 நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.

லூக்கா 1:5-17

சகரியாவும் எலிசபெத்தும்

ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் [a] சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.

தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். 10 ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். 12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். 13 ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. 14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். 15 கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.

16 “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். 17 கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center