Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 17:1-7

தாவீதின் ஒரு ஜெபம்

17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
    எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
    எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
    உம்மால் உண்மையைக் காணமுடியும்.
நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
    இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
    நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
    உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
    எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
    உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.

சங்கீதம் 17:15

15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
    கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
    கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.

ஆதியாகமம் 31:1-21

யாக்கோபு பிரிந்து செல்லுதல்

31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர். யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான். கர்த்தர் யாக்கோபிடம், “உனது சொந்த நாடான, உன் முற்பிதாக்களின் நாட்டுக்கு திரும்பிப் போ. நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.

அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான். அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை. நான் உங்கள் தந்தைக்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்று உங்கள் இருவருக்குமே தெரியும். ஆனால் உங்கள் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என் சம்பளத்தைப் பத்து முறை மாற்றிவிட்டார். எனினும் லாபானின் எல்லாத் தந்திரங்களிலிருந்தும் தேவன் என்னைக் காப்பாற்றினார்.

“அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம்பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன. ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.

10 “ஆடுகள் எல்லாம் இணையும்போது நான் கனவு கண்டேன். அதில் இணைகிற ஆண் ஆடுகள் மட்டுமே புள்ளியும் வரியும் உடையவையாக இருக்கக் கண்டேன். 11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார்.

“‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.

12 “தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும் வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன். 13 நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.

14-15 ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும்பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார். 16 எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.

17 எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான். 18 பின் அவர்கள் அவனது தந்தை இருக்கும் கானான் தேசத்துக்குப் பயணம் செய்தனர். அவர்களுக்கு முன்னால் அவர்களது மந்தையும் கொண்டு செல்லப்பட்டது. பதான் அராமிலிருக்கும்போது அவன் வாங்கிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துக்கொண்டான்.

19 அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.

20 யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான். 21 யாக்கோபு தன் குடும்பத்தோடும் தனக்குரியவற்றோடும் வேகமாகச் சென்று ஐபிராத்து ஆற்றைக் கடந்து கீலேயாத் மலையை நோக்கிப் போனார்கள்.

மத்தேயு 7:7-11

தேவனிடம் கேட்டுப்பெறுதல்(A)

,“தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.

,“உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. 10 அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. 11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center