Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 146

146 கர்த்தரை துதி!
    என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
    ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
    அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
    தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
    குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
    விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
    சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

கர்த்தரைத் துதியுங்கள்!

ஏசாயா 59:9-19

இஸ்ரவேலரின் பாவம் துன்பத்தைக் கொண்டுவருகிறது

அனைத்து நேர்மையும், நன்மையும் போனது.
நமக்கு அருகில் இருள் மட்டுமே உள்ளது.
    எனவே, நாம் வெளிச்சத்துக்காக காத்திருக்கவேண்டும்.
நாம் பிரகாசமான வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம்.
    ஆனால், நம்மிடம் இருப்பதெல்லாம் இருள்தான்.
10 கண்கள் இல்லாத ஜனங்களைப்போன்றிருக்கிறோம்.
    நாம் குருடர்களைப்போன்று சுவர்களில் மோதுகிறோம்.
இருட்டில் இருப்பதுபோல இடறிக் கீழே விழுகிறோம்.
    பகலிலும்கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
    மத்தியான வேளையில் நாம் மரித்தவர்களைப்போன்று விழுகிறோம்.
11 நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம்.
    நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப்போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம்.
நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம்.
    ஆனால் இதுவரை நியாயமில்லை.
நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம்.
    ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
12 ஏனென்றால், நாம் நமது தேவனுக்கு எதிராகப் பல தீமைகளைச் செய்திருக்கிறோம்.
    நாம் தவறானவர்கள் என்பதை நமது பாவங்கள் காட்டுகின்றன.
    இவற்றையெல்லாம் செய்த குற்றவாளிகள் என்பதை நாம் அறிவோம்.
13 நாம் பாவங்கள் செய்து கர்த்தருக்கு எதிராகத் திரும்பினோம்.
    நாம் அவரை விட்டுத் திரும்பி அவரை விட்டு விலகினோம்.
நாம் தீயவற்றுக்குத் திட்டமிட்டோம்.
    தேவனுக்கு எதிராக இருக்கும் செயல்களுக்குத் திட்டமிட்டோம்.
நம்மிடம் இவற்றைப் பற்றிய எண்ணங்கள் உண்டு.
    நமது இதயத்தில் இவற்றைப்பற்றி திட்டமிட்டோம்.
14 நம்மிடமிருந்து நீதி திரும்பிவிட்டது.
    நேர்மையானது வெகு தொலைவில் உள்ளது.
உண்மையானது தெருக்களில் விழுந்து கிடக்கின்றது.
    நன்மையானது நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
15 உண்மை போய்விட்டது.
    நன்மை செய்யவேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.

கர்த்தர் பார்த்தார்.
    அவரால் எந்த நன்மையும் கண்டுகொள்ள முடியவில்லை.
    கர்த்தர் இதனை விரும்பவில்லை.
16 கர்த்தர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
    ஜனங்களுக்கு உதவி செய்ய ஒருவனும் நிற்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே, கர்த்தர் தனது சொந்த வல்லமயையும் நீதியையும் பயன்படுத்தினார்.
    கர்த்தர் ஜனங்களைக் காப்பாற்றினார்.
17 கர்த்தர் போருக்குத் தயார் செய்தார்.
கர்த்தர் நீதியை மார்புக் கவசமாக்கினார்.
    இரட்சிப்பைத் தலைக்குச் சீராவாக்கினார்.
தண்டனைகள் என்னும் ஆடைகளை அணிந்துகொண்டார்.
    உறுதியான அன்பைச் சால்வையாகப்போர்த்தினார்.
18 கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார்.
எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
    கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார்.
எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார்.
    கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
19 எனவே, மேற்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய நாமத்திற்கு மரியாதை தருவார்கள்.
    கிழக்கே உள்ள ஜனங்கள் அஞ்சி, கர்த்தருடைய மகிமைக்கு மரியாதை தருவார்கள்.
கர்த்தர் விரைவில் வருவார்.
    கர்த்தர் வேகமாகப் பாயும் ஆறு பலமான காற்றால் அடித்து வருவதுபோல் விரைந்து வருவார்.

அப்போஸ்தலர் 9:1-20

சவுல் மனம் மாறுதல்

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.

எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.

சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.

அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.

சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.

10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.

அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.

11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.

13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.

15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.

17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.

சவுல் தமஸ்குவில் போதித்தல்

சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center