Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 81

கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று

81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
    இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
    வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
    அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
    தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
தேவன் யோசேப்பை [a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
    எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
    உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
    நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
    மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”

“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
    அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
    இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
    நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
    நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
    நான் உன்னைப் போஷிப்பேன்.

11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
    இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
    இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
    என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
    இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
    அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
    அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.

எரேமியா 2:4-13

யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
    இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா?
    அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா?
உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
    அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள்.
உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
    கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார்.
கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார்.
கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார்,
    ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை.
    ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை,
ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்;
    எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.

கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
    பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும்,
    ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள்.
நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன்,
    ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.

“‘கர்த்தர் எங்கே?’
    என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை,
சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை,
    இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்;
தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
    அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”

எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
    நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.
10 கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
    கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு,
மிகக் கவனமாகப் பார்,
    எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
11 எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
    தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா?
அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல!
ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு,
    எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.

12 “வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
    திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
    அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள்,
    (நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்).
    அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள்.
    (அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்).
ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன,
    அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.

யோவான் 7:14-31

இயேசு எருசலேமில் உபதேசித்தல்

14 பண்டிகை பாதி முடிந்துவிட்டது. பிறகு இயேசு தேவாலயத்துக்குப் போய் அங்கே உபதேசம் செய்தார். 15 யூதர்கள் ஆச்சரியப்பட்டனர். “இந்த மனிதர் பள்ளியில் படித்ததில்லை. இவற்றை இவர் எவ்வாறு கற்றுக்கொண்டார்?” என்று கூறிக்கொண்டனர்.

16 “நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. 17 தேவனின் விருப்பப்படி செயல்புரிய ஒருவன் விரும்பினால், அவன் என் உபதேசம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்வான். அதோடு அவன், இந்த உபதேசம் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதையும் அறிந்துகொள்வான். 18 தன் சொந்தமான சிந்தனைகளை உபதேசிக்கிற எவனும் தனக்குரிய பெருமையை அடையவே முயற்சிக்கிறான். தன்னை அனுப்பினவரைப் பெருமைப்படுத்த முயற்சிக்கும் ஒருவன் எப்பொழுதும் உண்மையையே பேசுகிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை. 19 மோசே உங்களுக்குச் சில சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் இல்லையா? ஆனால் உங்களில் எவரும் அதற்குக் கீழ்ப்படிவதில்லை. என்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று இயேசு கேட்டார்.

20 “நீ பிசாசு பிடித்தவன். அதனால்தான் இப்படி உளறுகிறாய். நாங்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை” என்று மக்கள் பதில் சொன்னார்கள்.

21 “நான் ஓர் அற்புதம் செய்தேன். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 மோசே விருத்தசேதனம்பற்றிய சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஆனால் உண்மையில் மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைத் தரவில்லை. அது மோசேக்கு முற்காலத்திலேயே நமது மக்களிடமிருந்து வந்துவிட்டது) ஆகையால் சில வேளைகளில் ஓய்வு நாட்களிலும் நீங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23 மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஓய்வு நாளிலும் ஒரு குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. எனவே, நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனின் முழு சரீரத்தையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்? 24 வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள். சரி எது என்பதைக்கொண்டு அதன் மூலம் நியாயமாக முடிவு செய்யுங்கள்” என்றார் இயேசு.

இயேசுதான் கிறிஸ்துவா?

25 எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். 26 ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். 27 ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர்.

28 இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். 29 ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு.

30 இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை.

31 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர்.

யோவான் 7:37-39

பரிசுத்த ஆவியானவர்

37 பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும். 38 என்னில் நம்பிக்கை வைக்கிறவனுடைய இதயத்தில் இருந்து ஜீவத் தண்ணீருள்ள ஆறுகள் பெருக்கெடுக்கும், இதைத்தான் வேத வாக்கியங்கள் கூறுகின்றன” என்றார். 39 இயேசு பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இவ்வாறு பேசினார். இன்னும் மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஏனென்றால் இயேசு இன்னும் மரணமடையவும் இல்லை; மகிமையாக உயிர்த்தெழவும் இல்லை. ஆனால் பிறகு அவரிடம் விசுவாசம் வைக்கப்போகிற மக்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center