Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் விண்ணப்பம்
86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
2 கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
எனவே என்னைக் காப்பாற்றும்.
3 என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
4 ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
5 ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
8 தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
9 ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
நீரே, நீர் மட்டுமே தேவன்!
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
27 சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.
சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்கிறான்
10 சாமுவேல் சிறப்புக்குரிய எண்ணெய் இருக்கும் ஜாடியை எடுத்தான். அதனைச் சவுலின் தலையில் ஊற்றி, முத்தமிட்டுச் சொன்னான், “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக அபிஷேகித்திருக்கிறார். கர்த்தருடைய ஜனங்களை நீ கட்டுப்படுத்துவாய். அவர்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவாய். கர்த்தர் உன்னை அவருடைய ஜனங்களின் மேல் அரசனாக்கியுள்ளார். இது உண்மை என்பதை நிரூபிக்க ஒரு அடையாளம் உள்ளது. 2 இன்று நீ என்னை விட்டுப் போனதும் பென்யமீன் எல்லையில் செல்சாவில் ராகேலின் கல்லறை அருகில் இருவரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப் போன கழுதைகள் கிடைத்தன. உன் தந்தை கழுதைகளைப்பற்றிய கவலைகளை விட்டுவிட்டார். இப்போது அவர் உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். அவர், என் மகனுக்காக என்ன செய்வேன்?’ என்கிறார் என்பார்கள்” என்றான்.
3 மேலும் சாமுவேல் “பின்பு தாபோரிலுள்ள பெரிய சிந்தூர மரத்தடிவரை போவாய், அங்கே மூன்று பேர் உண்னை சந்திப்பார்கள். அவர்கள் பெத்தேலுக்கு தேவனை தொழுதுகொள்ளச் செல்பவர்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், மூன்றாமவன் ஒரு புட்டி திராட்சை ரசத்தையும் வைத்திருப்பார்கள். 4 அவர்கள் உனது நலனை விசாரிப்பார்கள். அவர்கள் இரண்டு அப்பங்களைத் தருவார்கள். நீ அவர்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 5 பிறகு நீ கிபியாத் எலோகிமுக்குப் போவாய். அங்கே பெலிஸ்தரின் கோட்டை உண்டு. நீ நகரத்துக்குள் போகும்போது தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்று வெளியே வரும். அவர்கள் ஆராதனை ஸ்தலத்திலிருந்து வருவார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அவர்கள் சுரமண்டலமும், தம்புரும், புல்லாங்குழலும், இரட்டை வால் யாழும் இசைப்பார்கள். 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய். 7 இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி.
8 “நீ எனக்கு முன்னால் கில்காலுக்கு இறங்கிப்போ. நான் பிறகு அங்கு வருவேன். நான் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவேன். ஆனால் நீ 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீ செய்ய வேண்டியவற்றைப்பற்றி நான் சொல்வேன்” என்றார்.
கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?
14 நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. 15 எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? 16 தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்.? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம்.
“நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன்.
அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.” (A)
17 “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள்.
அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம்.
நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்”. (B)
18 “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது மகன்களாகவும்
மகள்களாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்” (C)
என்று தேவன் கூறுகிறார்.
7 அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.
2008 by World Bible Translation Center