Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:33-40

33 கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும்,
    நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
34 நான் புரிந்துகொள்ள உதவும்.
    நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
35 கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும்.
    நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
36 செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது
    உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
37 கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும்,
    உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
38 ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது
    ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
39 கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும்.
    உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
40 பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
    எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.

லேவியராகமம் 6:1-7

மற்ற பாவங்களுக்கான குற்ற பரிகார பலிகள்

கர்த்தர் மோசேயிடம், “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம். ஒருவன் சிலவற்றைத் திருடியிருக்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை ஏமாற்றியிருக்கலாம். அல்லது ஒருவன் காணாமல் போனதைக் கண்டுபிடித்து விட்டு பின் அதுபற்றி பொய் சொல்லலாம்; அல்லது ஒருவன் ஒன்றைச் செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டு சத்தியத்தின்படி செய்யாமல் இருக்கலாம். அல்லது ஒருவன் வேறுவிதமான தவறுகள் செய்யலாம். ஒருவன் மேற்கூறியபடி ஏதேனும் ஒன்றைச் செய்வானேயானால் அவன் பாவியாகக் கருதப்படுகிறான். அவன் எதைத் திருடியிருந்தாலும் திரும்பிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏமாற்றிப் பொருளை எடுத்திருந்தாலும், பாதுகாப்புக்காக இன்னொருவன் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை எடுத்திருந்தாலும், எதையாவது கண்டுபிடித்து பொய் சொல்லியிருந்தாலும் அல்லது சத்தியம் செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தாலும் சரிசெய்துகொள்ள வேண்டும். அவன் அதற்குரிய முழுமையான விலையைக் கொடுக்க வேண்டும். அதோடு அவற்றில் மதிப்பில் ஐந்தில் ஒரு பாகத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். அத்தொகையை அதன் உண்மையான சொந்தக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். அவன் இவற்றையெல்லாம் கொண்டுவந்து தரும் நாளிலேயே குற்ற நிவாரண பலியைச் செலுத்த வேண்டும். அவன் தன் குற்றபரிகாரப் பலியை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். அது மந்தையிலிருந்து தேர்ந்தெடுத்த ஆடாயிருக்க வேண்டும். எல்லாவிதத்திலும் குறையற்றதாக இருக்கவேண்டும். ஆசாரியன் சொல்லும் விலைக்கு ஏற்றதாக அது இருக்கவேண்டும். அது கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய குற்ற பரிகாரப் பலியாகும். பிறகு ஆசாரியன் கர்த்தரிடம் சென்று அம்மனிதன் சுத்தமாவதற்குரியவற்றைச் செய்வான். தேவனும் அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவனை மன்னித்துவிடுவார்” என்று கூறினார்.

கலாத்தியர் 5:2-6

கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும். சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள். ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம். ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center