Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 111

[a]111 கர்த்தரைத் துதியங்கள்!

நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில்
    நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
    தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
    அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
    தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
    அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
    தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.

தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
    அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
    அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
    தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.

10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
    தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
    என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

எண்ணாகமம் 12:1-15

மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல்

12 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்துகொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பெண்னை மணந்துகொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் தமக்குள், “ஜனங்களோடு பேசுவதற்கு கர்த்தர் மோசே ஒருவனை மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசினார்” என்று கூறிக்கொண்டனர்!

கர்த்தர் இதனைக் கேட்டார். (மோசே மிகவும் தாழ்மையான குணமுள்ளவன். அவன் தனக்குள் பெருமையுள்ளவன் அல்ல. பூமியிலுள்ள மற்ற மனிதர்களைவிட அவன் மிகவும் சாந்த குணமுள்ளவன்.) எனவே கர்த்தர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகிய மூவருடனும் பேசி, “நீங்கள் மூவரும் இப்பொழுது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வாருங்கள்” என்று சொன்னார்.

உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: “ஆரோன்! மிரியாம்!” என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர். தேவன், “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களுக்குக் காட்சியளிப்பேன். அவர்களோடு கனவில் பேசுவேன். ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன். நான் அவனோடு பேசும்போது, முகமுகமாய் பேசுகிறேன். மறைபொருளான கதைகளையல்ல, அவன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நான் தெளிவாகக் கூறிவிடுவேன். கர்த்தரின் தோற்றத்தையே மோசே பார்க்க இயலும். எனவே, ஏன் நீங்கள் எனது ஊழியனான மோசேக்கு எதிராகப் பேசத் துணிந்தீர்கள்?” என்று கேட்டார்.

கர்த்தர் அவர்கள் மீது பெருங்கோபத்தோடு இருந்தபடியால் அவர்களைவிட்டு கர்த்தர் விலகினார். 10 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பிச் சென்றது. ஆரோன் திரும்பி மிரியாமைப் பார்த்தான். அவளது தோல் பனியைப் போன்று வெளுத்திருந்தது. அவளுக்குப் பயங்கரமான தொழுநோய் ஏற்பட்டது!

11 பிறகு ஆரோன் மோசேயிடம், “ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முட்டாள்தனமாக பாவம் செய்துவிட்டோம். 12 மரித்துப் பிறந்த குழந்தையைப் போல அவள் தன் தோலை இழக்க விட்டுவிடாதிரும்” என்றான். (சில வேளையில் சில குழந்தைகள் பாதிதோல் அழுகிய நிலையில் மரித்துப் பிறப்பதுண்டு.)

13 எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, “தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்” என்றான்.

14 கர்த்தர் மோசேயை நோக்கி, “அவளது தந்தை அவள் முகத்தின் மீது உமிழ்ந்தால், அவளுக்கு ஏழு நாட்கள் அவமானமாக இருக்கும். எனவே, அவளை முகாமிற்கு வெளியே ஏழு நாட்கள் வைத்திரு. அதற்குப் பிறகு அவள் குணமாவாள். பின்னர் அவள் கூடாரத்திற்குத் திரும்பலாம்” என்றார்.

15 ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக்கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

லூக்கா 5:12-16

குணமடைந்த நோயாளி

(மத்தேயு 8:1-4; மாற்கு 1:40-45)

12 ஒருமுறை இயேசு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த மனிதன் ஒருவன் வாழ்ந்த ஒரு நகரத்தில் இருந்தார். அந்த மனிதனைத் தொழு நோய் பீடித்திருந்தது. அந்த மனிதன் இயேசுவைப் பார்த்ததும் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, “ஆண்டவரே, என்னைக் குணப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் என்னைக் குணமாக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று வேண்டினான்.

13 இயேசு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். இயேசு அவனைத் தொட்டார். உடனே தொழு நோய் அவனை விட்டு மறைந்தது. 14 இயேசு அவனிடம், “இப்போது நடந்ததை யாருக்கும் சொல்லாதே. ஆனால் ஆசாரியனிடம் சென்று காட்டு. மோசே கட்டளையிட்டபடி நீ குணமாகியதற்கேற்ப தேவனுக்கு ஒரு காணிக்கை கொடு. இது நீ குணமாகியதை மக்களுக்குக் காட்டும்” என்றார்.

15 ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர். 16 பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு, வேறு இடங்களுக்குச் சென்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center