Revised Common Lectionary (Complementary)
தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு.
3 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7 கர்த்தாவே, எழும்பும்!
எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
தேவன் ஆபகூக்குக்குப் பதிலளிக்கிறார்
5 கர்த்தர், “மற்ற நாடுகளைப் பாருங்கள். அவர்களைக் கவனியுங்கள். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நான் உங்கள் வாழ்நாட்களுக்குள் சிலவற்றைச் செய்வேன். அவை உங்களை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் அவற்றைக் கண்டபின்தான் நம்புவீர்கள். அதை உங்களுக்குச் சொல்லியிருந்தால் நம்பமாட்டீர்கள். 6 நான் பாபிலோனிய ஜனங்களை ஒரு பலமுள்ள நாட்டினராகச் செய்வேன். அந்த ஜனங்கள் இழிவான, வல்லமை பொருந்திய போராளிகளாக இருப்பார்கள். அவர்கள் பூமியைக் கடந்து செல்வார்கள். அவர்கள் தங்களுக்கு உரிமையில்லாத வீடுகளையும் நகரங்களையும் எடுத்துக்கொள்வார்கள். 7 பாபிலோனிய ஜனங்கள் பிற ஜனங்களை பயமுறுத்துவார்கள். பாபிலேனிய ஜனங்கள் தாம் விரும்புவதைச் செய்வார்கள், தாம் போகவிரும்பும் இடத்துக்குப் போவார்கள். 8 அவர்களின் குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாகச் செல்லும், மாலைநேரத்து ஓநாய்களைவிடவும் கொடியவராக இருப்பார்கள். அவர்களின் குதிரைவீரர்கள் தொலை தூரங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களை வானத்திலிருந்து பாய்ந்து தாக்கும் பசிகொண்ட கழுகுகளைப்போன்று தாக்குவார்கள். 9 அவர்கள் விரும்பும் ஒரே செயல் சண்டையிடுவதுதான். அவர்களது படைகள் பாலைவனத்து காற்றைப்போன்று வேகமாகச் செல்லும். பாபிலேனிய வீரர்கள் பல சிறைக்கைதிகளை மணல்போன்ற எண்ணிக்கையில் கைபற்றுவார்கள்.
10 “பாபிலோனிய வீரர்கள் பிறநாடுகளில் உள்ள ராஜாக்களைப் பார்த்து நகைப்பார்கள். அந்நிய ஆளுநர்கள் இவர்களுக்குப் பரிகாசத்துக்குரியவர்களாவார்கள். பாபிலோனிய வீரர்கள் நகரங்களில் உயர்ந்த உறுதியான சுவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். வீரர்கள் மண்மேடுகளை சுவர்களின் உச்சிவரை குவித்து எளிதாக நகரங்ளை தோற்கடிப்பார்கள். 11 பிறகு அவர்கள் காற்றைப் போன்று விரைந்துசென்று, மற்ற இடங்களில் போரிடச் செல்வார்கள். பாபிலோனியர்கள் தம் சொந்த பலத்தையே தொழுதுகொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.
ஆபகூக்கின் இரண்டாவது முறையீடு
12 பிறகு ஆபகூக் சொன்னான்,
“கர்த்தாவே, நீரே என்றென்றும் வாழ்கிற கர்த்தர்.
நீர் என்றென்றும் மரணமடையாத என் பரிசுத்தமான தேவன்.
கர்த்தாவே, நீர் பாபிலோனிய ஜனங்களை எதைச் செய்ய வேண்டுமோ அதற்காகப் படைத்தீர்.
எங்கள் அடைக்கலப் பாறையே, நீர் அவர்களை யூதாவிலுள்ள ஜனங்களை தண்டிப்பதற்காகப் படைத்தீர்.
13 உம்முடைய கண்கள் மிகவும் பரிசுத்தமானதால் அவை தீமையை நோக்குவதில்லை.
ஜனங்கள் பாவம் செய்வதை உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே, இத்தீய ஜனங்கள் வெற்றிப்பெறுவதை எப்படி உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
தீய ஜனங்கள் நல்லவர்களை அழிப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் நீர் எப்படி பார்த்திருக்கக்கூடும்?
14 “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும்,
கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர்.
15 பகைவர் அவர்களனைவரையும் தூண்டிலாலும் வலைகளாலும் பிடிப்பார்கள்.
பகைவன் தனது வலையால் அவர்களை பிடித்து இழுத்துப் போவான்.
பகைவன் தான் கைப்பற்றியதுப்பற்றி மகிழுவான்.
16 அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து
நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது.
எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான்,
அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான்.
17 அவன் தனது வலையுடன் செல்வத்தைத் தொடர்ந்து எடுப்பானா?
அவன் தொடர்ந்து இரக்கமில்லாமல் ஜனங்களை அழிப்பானா?
விசுவாசமும் ஞானமும்
2 எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். 3 ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது. 4 நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.
5 ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். 6 ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். 7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
உண்மையான செல்வம்
9 தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.
2008 by World Bible Translation Center