Revised Common Lectionary (Complementary)
தாவீதின் ஒரு பாடல்.
28 கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6 கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
சிம்சோனின் திருமணம்
14 சிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். 2 அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
3 அவனது தந்தையும் தாயும், “இஸ்ரவேலில் உனக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயமாக ஒரு பெண் வாய்ப்பாள். பெலிஸ்தியரிலிருந்து ஒரு பெண்ணை நீ திருமணம்செய்ய வேண்டுமா? அந்த ஜனங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல” என்றார்கள்.
ஆனால் சிம்சோன், “அப்பெண்ணை எனக்காக அழைத்து வாருங்கள்! அப்பெண்ணே எனக்கு வேண்டும்!” என்றான். 4 (சிம்சோனின் பெற்றோர் கர்த்தர் இவ்வாறு நிகழ வேண்டுமென விரும்பியதை அறியாதிருந்தார்கள். கர்த்தர் பெலிஸ்தியருக்கு எதிராகச் செயல்படும் வகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பெலிஸ்தியர் அக்காலத்தில் இஸ்ரவேலரை ஆண்டுகொண்டிருந்தனர்.)
5 சிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது. 6 கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோனின் மீது இறங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை.
7 பின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவனுக்குப் அவளை பிடித்திருந்தது. 8 பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன. 9 சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை.
10 சிம்சோனின் தந்தை பெலிஸ்திய பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். மணமகனுக்கான முறைமைப்படி சிம்சோன் ஒரு விருந்து கொடுத்தான். 11 பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர்.
12 அந்த 30 பேருக்கும் சிம்சோன், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல விரும்புகிறேன். இந்த விருந்து 7 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களுக்குள் அந்த விடுகதைக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அந்நாட்களுக்குள் உங்களால் விடுகதையை விடுவிக்கக் கூடுமாயின் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் கொடுப்பேன். 13 ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.
14 சிம்சோன் அவர்களிடம்,
“சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது.
பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது.”
என்ற விடுகதையைச் சொன்னான்.
30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
15 நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம் வந்தனர். அவர்கள், “எங்களை வறியோராக்கும்படிக்கு அழைத்தீர்களா? விடுகதையின் பதிலை அறியும்படிக்கு நீ உனது கணவனைத் தந்திரமாய் வசப்படுத்த வேண்டும். நீ அதை எங்களுக்கு அறிவிக்காவிட்டால் உண்னையும் உன் தந்தையின் வீட்டார் எல்லோரையும் நெருப்பிட்டுக் கொல்லுவோம்” என்றார்கள். 16 சிம்சோனின் மனைவி அவனிடம் வந்து அழுதாள். அவள் சிம்சோனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை! நீங்கள் உண்மையில் என்மீது அன்பு செலுத்தவில்லை! எங்கள் ஆட்களுக்கு விடுகதை போட்டுள்ளீர்கள். ஆனால் என்னிடம் நீங்கள் பதிலைக் கூறவில்லை” என்றாள்.
17 விருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள்.
18 ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம்,
“தேனைவிட சுவையானது எது?
சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள்.
அப்போது சிம்சோன் அவர்களிடம்,
“என் பசுவால் நீங்கள் உழாவிட்டால்
என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான்.
19 சிம்சோன் மிகவும் கோபமாக இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மீது வல்லமையோடு வந்தார். அதினால் அவன் அஸ்கலோன் நகரத்திற்குச் சென்று அங்கு 30 பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களது ஆடைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான். அந்த ஆடைகளைப் பதில் சொன்ன 30 பேருக்கும் கொடுத்தான். அதன் பின்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்தான். 20 சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.
பவுலின் பிரார்த்தனை
3 எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். 4 உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன். 5 மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள். 6 உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன்.
7 உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள். 8 உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.
9 உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே:
உங்கள் அன்பு மேலும், மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. 10 பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், 11 இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.
பவுலின் துன்பங்கள் உதவியது
12 சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். 14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
2008 by World Bible Translation Center