Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
யெப்தாவின் வாக்குறுதி
29 அப்போது தேவஆவியானவர் யெப்தாவின் மேல் வந்தார். யெப்தா கீலேயாத், மனாசே பகுதிகளைக் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பாவுக்குப் போனான். கீலேயாத்திலுள்ள மிஸ்பாவிலிருந்து அம்மோனிய ஜனங்களின் தேசத்தை யெப்தா தாண்டிச் சென்றான்.
30 யெப்தா கர்த்தரிடம், “நீர் அம்மோனிய ஜனங்களை வெல்ல என்னை அனுமதித்தால் 31 வெற்றிபெற்று நான் திரும்பும்போது, எனது வீட்டிலிருந்து முதலில் வெளிவருகிறது எதுவோ அதை உமக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி செய்தான்.
32 பின்பு யெப்தா அம்மோனிய ஜனங்களின் தேசத்திற்குச் சென்று, அம்மோனிய ஜனங்களோடுப் போரிட்டான். அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவனுக்கு உதவினார். 33 ஆரோவேர் நகரத்திலிருந்து மின்னித் நகரம் வரைக்கும் அவர்களைத் தோற்கடித்தான். யெப்தா 20 நகரங்களைக் கைப்பற்றினான். பின் அவன் அம்மோனிய ஜனங்களோடு ஆபேல்கேராமிம் வரைக்கும் போரிட்டான். இஸ்ரவேலர் அம்மோனிய ஜனங்களைத் தோற்கடித்தனர். இது அம்மோனியருக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.
34 பின்பு யெப்தா தனது வீட்டிற்குப் போனான். அவனைச் சந்திப்பதற்கு அவனது குமாரத்தி எதிரே வந்தாள். அவள் தம்புரு வாசித்து நடனமாடிக்கெண்டிருந்தாள். அவள் அவனது ஒரே குமாரத்தி. யெப்தா அவளை மிகவும் நேசித்தான். யெப்தாவிற்கு வேறு மகனோ, மகளோ இல்லை. 35 தனது வீட்டிலிருந்து முதலில் வெளிவந்தவள் தன் மகளே என்று யெப்தா அறிந்தபோது தனது ஆடையைக் கிழிந்து தனது துக்கத்தைக் காட்டினான். பின் அவன், “என் மகளே! நீ என்னை அழித்தாய். நீ என்னை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கினாய். நான் கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதியை மாற்ற இயலாது” என்றான்.
36 அப்போது அவனது குமாரத்தி யெப்தாவை நோக்கி, “தந்தையே! நீங்கள் கர்த்தருக்கு கொடுத்த உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள். நீங்கள் செய்வதாகக் கூறியதைச் செய்யுங்கள். உங்கள் பகைவராகிய அம்மோனிய ஜனங்களை நீங்கள் வெல்வதற்கு கர்த்தர் உதவியுள்ளார்” என்றாள்.
37 பின்பு யெப்தாவின் குமாரத்தி தன் தந்தையிடம், “எனக்காக முதலில் ஒரு காரியம் செய்யுங்கள். நான் இரண்டு மாதங்கள் தனித்திருக்க வேண்டும், நான் மலைகளுக்குப் போவேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். குழந்தை பெறவும் மாட்டேன். எனவே, நானும் எனது தோழியரும் போய் சேர்ந்து அழ அனுமதி கொடுங்கள்” என்றாள்.
38 யெப்தா, “போய், அவ்வாறே செய்” என்றான். யெப்தா அவளை இரண்டு மாதத்திற்கு அங்கிருந்து அனுப்பி வைத்தான். யெப்தாவின் குமாரத்தியும் அவளது தோழியரும் மலைகளில் தங்கினார்கள். அவர்கள் அவளுக்காக அழுதனர். ஏனென்றால் அவள் திருமணம் செய்து குழந்தை பெறுவதாக இல்லை.
39 இரண்டு மாதங்கள் முடிந்த பின்னர், யெப்தாவின் குமாரத்தி தந்தையிடம் திரும்பினாள். கர்த்தருக்கு வாக்குறுதி அளித்தபடியே யெப்தா அவளுக்குச் செய்தான். யெப்தாவின் குமாரத்தி யாரோடும் பாலின உறவு கொண்டு வாழ்ந்திருக்கவில்லை. 40 ஒவ்வொரு ஆண்டும் கீலேயாத்திலுள்ள பெய்தாவின் குமாரத்தியை இஸ்ரவேலின் பெண்கள் நினைவுகூர்ந்தனர். அப்பெண்கள் ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காக அழுதனர். இது இஸ்ரவேலில் ஒரு பழக்கமாயிற்று.
பேதுருவின் தவறைப் பவுல் வெளிப்படுத்துதல்
11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். 12 அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள். 13 ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான். 14 யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன்.
2008 by World Bible Translation Center