Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 22-24

பிற சட்டங்கள்

22 “உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும். அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும்.

“உங்களின் பக்கத்து வீட்டுக்காரரின் கழுதையாவது, மாடாவது சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், அதைப் பார்க்காதது போல் சென்றுவிடாமல், நீங்கள் அவருடன் சேர்ந்து தூக்கிவிட உதவிசெய்ய வேண்டும்.

“ஒரு பெண், ஆணின் உடைகளை அணியக் கூடாது. அதுபோல் ஒரு ஆண் பெண்ணின் ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இதை மிகவும் வெறுக்கின்றார்.

“பாதைவழியே நீங்கள் நடந்து செல்லும்போது மரத்தில் அல்லது தரையில் ஏதேனும் ஒரு பறவைக் கூட்டைக் கண்டால், அதில் தாய்ப்பறவையானது தன் குஞ்சுகளையாவது, முட்டைகளையாவது அடைகாப்பதைக் கண்டால், நீங்கள் அந்தத் தாய்ப் பறவையை அதன் குஞ்சுகளைவிட்டு பிரிக்கக் கூடாது. நீங்கள் உங்களுக்காக குஞ்சுகளை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தாய்ப் பறவையைப் போக விட்டுவிட வேண்டும். இந்த நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நன்றாயிருப்பதுடன் நீண்ட காலமும் வாழலாம்.

“நீங்கள் புது வீடு கட்டும்போது உங்களின் மாடித்தளத்தைச் சுற்றிலும் சிறிய சுவர் எழுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் அந்த மாடியிலிருந்து விழுந்து மரித்தவனின் கொலைப்பழியை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.

நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை

“நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டத்திலேயே பிற தானியங்களையும் விதைக்கக் கூடாது. ஏனென்றால், நீங்கள் விதைத்த பயிர்களையும், திராட்சைத் தோட்டத்தின் பலனையும் பரிசுத்தமற்றதாக ஆக்கிவிடுவீர்கள். அதனால் அவை பயனற்றவையாகிவிடும். அவற்றில் எதனையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.

10 “நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.

11 “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.

12 “நீங்கள் அணிந்து கொள்கின்ற உங்களது மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும், நூல்குஞ்சங்களாலான தொங்கல்களைச் செய்திடவேண்டும்.

திருமணச் சட்டங்கள்

13 “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து, 14 அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம், ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால், 15 அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும். 16 பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து, 17 “நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார். 18 பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

20 “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால், 21 ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்து, ஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள். தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள். உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.

பாலுறவுப் பாவங்கள்

22 “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.

23 “ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக்கொள்வது நகரில் நடந்ததென்றால், 24 பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்தவனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.

25 “ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் கொன்றுவிட வேண்டும். 26 அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. 27 வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.

28 “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால், 29 அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

30 “எவனும் தன் தந்தையின் மனைவியுடன் பாலின உறவு வைத்துக்கொள்வதால், அவரது மானத்தை வெளிப்படுத்தக்கூடாது.”

ஆராதனையில் கலந்து கொள்ளக்கூடிய ஜனங்கள்

23 “ஆண்மையில்லாதவனாக

விதை நசுங்கப்பட்டவனும், உடலுறவு உறுப்பு துண்டிக்கப்பட்டவனும், இஸ்ரவேல் ஜனங்களது கர்த்தருடைய ஆராதனையில் சேரக்கூடாதவர்கள் ஆவார்கள். ஒருவனது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்யாமல் அவன் பிறந்திருந்தால், அப்படிபட்டவன் இஸ்ரவேலருடன் சேர்ந்து கர்த்தரை ஆராதிக்க கூடிவரக் கூடாது. அவர்கள் சந்ததியாரில் பத்தாவது தலைமுறைமட்டும் எவரும் இஸ்ரவேலர்களின் ஆராதனையில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

“அம்மோனியனும், மோவாபியனும், இஸ்ரவேல் மனிதர்கள் ஆராதிக்கும் கர்த்தருடைய சபைக்கு ஆகாதவர்கள். அவர்களது சந்ததியாரில் பத்தாம் தலைமுறையினர் கூட என்றைக்கும் கர்த்தரை ஆராதிக்கும் இஸ்ரவேல் ஜனங்களோடே சேர்ந்து வர வேண்டாம். ஏனென்றால் எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் இந்த அம்மோனியரும், மோவாபியரும். உங்களுக்கு அப்பமும், தண்ணீரும் தர மறுத்தார்கள், அது மட்டுமின்றி மெசொபொத்தாமியா நகரமாகிய பேத்தோரில் பேயோரின் மகனான பிலேயாமுக்கு கூலிபேசி உங்களை சபிக்கும்படி செய்ததற்காகவும், அவர்களை தேவனுடைய சபைக்கு உரியவராகாது செய்ய வேண்டும். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் பிலேயாம் கூறியதைக் கேட்க மறுத்தார். கர்த்தர் அந்த சாபத்தையெல்லாம் உங்களுக்காக ஆசீர்வாதங்களாக்கினார். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை நேசிக்கின்றார். நீங்கள் அந்த ஜனங்களுடன் ஒருபோதும் எவ்வித சமாதானத்திற்கும் முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு கொள்ளக் கூடாது.

இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஜனங்கள்

“நீங்கள் ஏதோமியர்களை வெறுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் உங்கள் உறவினர்கள். நீங்கள் எகிப்தியர்களை வெறுக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்கள். ஏதோமியருக்கும், எகிப்தியருக்கும் பிறந்த மூன்றாவது தலைமுறையின் குழந்தைகள் இஸ்ரவேலருடன் இணைந்து கர்த்தருடைய சபையில் ஆராதிக்கலாம்.

படை முகாமினை சுத்தமாக பாதுகாப்பது

“நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தீட்டான காரியங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருங்கள். 10 உங்களது போர் முகாமில் ஒருவன் இரவின் கனவுகளினால் சரீரத்தில் அசுத்தமானால் அவன் அந்த முகாமை விட்டு வெளியே போகவேண்டும். அவன் போர் முகாமிற்குள் செல்லாமல் வெளியே தங்கி இருந்து, 11 பின் அன்று மாலையில், தண்ணீரில் குளித்து சூரியன் மறைந்த பின்பே முகாமிற்குத் திரும்பலாம்.

12 “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 13 உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும். 14 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.

பிற சட்டங்கள்

15 “ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள். 16 அந்தச் சேவகன் உங்களிடத்தில் எங்கும் அவன் விரும்புகிறபடி பணிசெய்யலாம். அவன் தேர்ந்தெடுக்கிற ஏதாவது நகரில் வாழலாம். நீங்கள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.

17 “எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது. 18 ஒரு ஆணோ, பெண்ணோ, விபச்சார பாவத்தினால் சம்பாதித்தப் பணத்தை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரக் கூடாது. எந்தவொரு நபரும் அந்த பணத்தை தேவனுக்கு வாக்களித்திருந்த பொருளை வாங்குவதற்கென்று பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்கள் உடல்களை விற்று விபச்சாரப் பாவம் செய்யும் அந்த ஜனங்களை அருவெறுக்கின்றார்.

19 “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது. 20 நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.

21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஏதாவது பொருத்தனை செய்திருந்தால், அவற்றைச் செலுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் அவற்றை செலுத்துமாறு உரிமையோடு கேட்பார். நீங்கள் வாக்களித்தபடி அவற்றை செலுத்தவில்லை என்றால் அது உங்களுக்குப் பாவமாகும். 22 நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை. 23 ஆனால் நீங்கள் செய்வதாக உங்கள் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தேவனுக்குத் தருவதாக விசேஷமான வாக்களித்திருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றவேண்டும். தேவன் கட்டாயப்படுத்தி உங்களை வாக்களிக்கும்படிச் செய்யவில்லை. நீங்களே தருவதாக வாக்களித்திருந்தால் நீங்கள் சொன்னபடி அவற்றைச் செலுத்தவேண்டும்!

24 “நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.) 25 நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.

24 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டு, அதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும். அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால், விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம். 3-4 ஆனால் அவளின் அந்த புதிய கணவனும் அவளை விரும்பாது, மீண்டும் அனுப்பிவிட்டால், அவனும் அவளுக்கு விவாகரத்து எழுதிக்கொடுக்கவேண்டும். அல்லது அவன் மரித்துப் போக நேரிட்டால், அதன் பின்பு அவளின் முதல் கணவன் அவளை மீண்டும் மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அவள் அவனுக்கு அசுத்தமானவளாகிவிட்டவள். அப்படி அவன் அவளை மீண்டும் மணந்துகொள்வான் என்றால், அவன் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களைச் செய்கின்றான் என்பதாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த தேசத்தில் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது.

“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.

“நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.

“ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.

“நீங்கள் தொழுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளானால் லேவியராகிய ஆசாரியர்கள் உங்களுக்கு சொல்வதைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்காக நான் ஆசாரியரிடம் கொடுத்த கட்டளையின்படியே நீங்கள் செய்ய எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10 “நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம். 11 வெளியே நின்றுவிடுங்கள். பின் அவன் நீங்கள் கொடுத்த கடனுக்கான அடமானத்தை வெளியில் வந்து தருவான். 12 ஒருவேளை அவன் ஏழையாக இருந்தால், (அவன் போர்த்திக்கொள்ள வைத்திருந்த ஆடைகளை கொடுக்க முன் வந்தால்), நீங்கள் அவற்றை இரவு முழுவதும் வைத்துக்கொள்ளாதீர்கள். 13 நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாள் மாலையிலும் அவனிடம் கொடுத்துவிட வேண்டும். அது அவன் தூக்கத்திற்கு அவசியமானதாகும். அவன் உங்களை ஆசீர்வதிப்பான். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு இத்தகைய நல்ல செயல் உன் வாழ்வின் நியாயத்தை ஏற்கச் செய்திடும்.

14 “நீங்கள் உங்களிடம் காண்கின்ற ஏழை எளிய கூலிக்காரனை வஞ்சனை செய்யக் கூடாது. உங்கள் நகரங்களில் வசிக்கின்ற அந்நியர்களிடமும் அல்லது உங்களது இஸ்ரவேல் சகோதரர்களிடமும் இத்தகைய வஞ்சனை செயல்களைச் செய்யாதீர்கள். 15 அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப்பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.

16 “பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

17 “உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது. 18 எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.

19 “நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார். 20 நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 21 நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 22 நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாற்கு 14:1-26

இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்(A)

14 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.

ஒரு பெண்ணின் சிறப்புச் செயல்(B)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் [a] என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள்.

சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர்.

இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார்.

யூதாஸின் சதித்திட்டம்(C)

10 பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். 11 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

பஸ்கா விருந்து(D)

12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.

13 இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். 14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். 15 அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார்.

16 ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.

17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். 18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.

19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.

20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். 21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.

கர்த்தரின் விருந்து(E)

22 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.

23 பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். 24 பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. 25 உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார்.

26 அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center