Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 29-31

எக்காளங்களின் பண்டிகை

29 “ஏழாவது மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்நாளில் எக்காளம் ஊதவேண்டும். அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும். அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். அதோடு பாவப்பிரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் உங்களை சுத்தப்படுத்த கொடுக்க வேண்டும். இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.

பாவப்பரிகார நாள்

“ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது. நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும். இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 10 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 11 அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

அடைக்கல கூடாரப் பண்டிகை

12 “ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். இது அடைக்கல கூடாரப் பண்டிகை எனப்படும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. கர்த்தருக்காக அந்நேரத்தில் ஏழு நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாகக் கொண்டாடவேண்டும். 13 நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 14 இதோடு உணவுப்பலியும் தரவேண்டும். ஒவ்வொரு காளைக்கும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கும் 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 15 ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 16 ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.

17 “இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும். 18 நீங்கள் இந்த மிருகங்களுக்கு ஏற்ற சரியான தானியக் காணிக்கையையும் தரவேண்டும். அதோடு பானங்களின் காணிக்கையும் காளையோடும், ஆட்டுக்கடாவோடும், ஆட்டுக்குட்டிகளோடும் தரவேண்டும். 19 பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.

20 “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 21 நீங்கள் இந்தக் காளை, கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 22 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேரவேண்டும்.

23 “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 24 இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 25 பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையுடன் கூடுதலான ஒன்றாகச் செலுத்த வேண்டும்.

26 “இந்த விமுறையின் ஐந்தாவது நாளில் நீங்கள் 9 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுகுட்டிகளையும் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக் குறைகளும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 27 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 28 நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

29 “இந்த விடுமுறையின் ஆறாவது நாளில் நீங்கள் 8 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்விதக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 30 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 31 நீங்கள் இவற்றில் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாக செலுத்த வேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

32 “இந்த விடுமுறையின் ஏழாவது நாளில் நீங்கள் 7 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், குறை இல்லாததாகவும் இருக்க வேண்டும். 33 நீங்கள் இதற்கு ஏற்ற சரியான அளவுடையதாக தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக் கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் தர வேண்டும். 34 நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.

35 “இந்த விடுமுறையின் எட்டாவது நாளில் ஒரு மிகச் சிறப்பான கூட்டம் நடைபெறும். அந்நாளில், நீங்கள் எவ்வித வேலையும் செய்ய வேண்டாம். 36 நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும் 37 இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 38 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

39 “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றை கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.

40 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கர்த்தர் ஆணையிட்ட அனைத்தையும்பற்றி கூறினான்.

விசேஷ பொருத்தனைகள்

30 இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,

“ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!

“ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம். இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்துகொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவளது வேண்டுதலை அவளது தந்தை அறிந்து அதைத் தடுத்தால், பிறகு அவள் தன் வாக்கில் இருந்து விடுதலை பெறுகிறாள். அவள் தனது பொருத்தனையை நிறைவேற்றத் தேவையில்லை. அவளது தந்தை அவளைத் தடுத்துவிட்டால் அவளை கர்த்தர் மன்னித்துவிடுவார்.

“ஒரு பெண் தான் கர்த்தருக்கு சிலவற்றைக் கொடுப்பதாக விசேஷ வாக்கை கர்த்தரிடம் செய்த பிறகு திருமணம் ஆகியிருக்கலாம். அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவளது கணவன் அவளது வேண்டுதலை அறிந்து மறுத்துவிட்டால் பிறகு அவள் தன் வாக்கை நிறைவேற்ற வேண்டாம். அவளது கணவன் அந்த வாக்கை முறித்து அதனை நிறைவேற்ற முடியாதபடி செய்துவிட்டதால் கர்த்தர் அவளை மன்னித்துவிடுவார்.

“ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்துகொண்ட பெண் சிறப்பான பொருத்தனை செய்திருக்கலாம். அப்போது அவள் தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.

10 “ஒரு திருமணமானப் பெண் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை செய்திருக்கலாம். 11 இதைப்பற்றி அவளது கணவன் அறிந்து அதை அவன் அனுமதித்துவிட்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். அவள் வாக்கின்படி அனைத்தையும் கொடுக்க வேண்டும். 12 ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார். 13 ஒரு திருமணமான பெண் கர்த்தருக்குச் சிலவற்றைத் தருவதாக வாக்களித்திருக்கலாம்; அல்லது அவள் தன் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது விசேஷ வாக்குறுதிகளைச் செய்திருக்கலாம். அவற்றை அவளது கணவன் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யலாம். 14 எவ்வாறு ஒரு கணவன் தன் மனைவியின் வாக்கை நிறைவேற்ற உதவ முடியும்? அவன் அதைப் பற்றி அறிந்ததை ஏற்றுக்கொண்டால் போதும். அவன் மறுக்காத பட்சத்தில் அவள் அதனை முழுமையாகச் செய்து முடித்துவிட வேண்டும். 15 ஆனால் அவளது கணவன் அவளது வாக்கை அறிந்தும் தடுத்துவிட்டால், வாக்குறுதியை உடைத்த பொறுப்பு அவனைச் சார்ந்ததாகும்” என்றான்.

16 இந்தக் கட்டளைகளையே மோசேயிடம் கர்த்தர் கூறினார். இவை, ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் உரிய கட்டளைகளாகும். இவை, ஒரு தந்தைக்கும் தந்தை வீட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் உரிய கட்டளைகளாகும்.

மீதியானியர்களுடன் இஸ்ரவேலர்களின் யுத்தம்

31 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், “மீதியானியர்களையும் மேற்கொள்ளும்படியாக நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவுவேன். அதன் பிறகு நீ மரித்துப் போவாய்” என்றார்.

எனவே மோசே ஜனங்களோடு பேசினான். அவன் “உங்கள் ஆண்களில் வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கர்த்தர் அவர்களை மீதியானியர்களையும் வெல்லும்படி செய்வார். இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் 1,000 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள். ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.

மோசே அவர்களைப் போருக்கு அனுப்பினான். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகனான பினேகாசையும் அவர்களோடு அனுப்பினான். எலெயாசார் பரிசுத்தமான பொருட்களோடு, கொம்புகளையும், எக்காளத்தையும் எடுத்து சென்றான். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டபடியே மீதியானியர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்றனர். மீதியானிய அரசர்களில் ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் ஐந்து பேரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகனான பிலேயாமையும் வாளால் கொன்றார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானிய பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்தனர். அவர்களது மந்தைகளையும் பசுக்களையும் மற்ற யாவற்றையும் எடுத்துக்கொண்டனர். 10 பிறகு அவர்களது நகரங்களையும், கிராமங்களையும் எரித்துவிட்டனர். 11 அவர்கள் அனைத்து ஜனங்களையும், மிருகங்களையும் கைப்பற்றினர். 12 தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் மோசேயிடம், ஆசாரியனாகிய எலெயாசார் மற்றும் மற்ற ஜனங்களிடத்திலும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் கவர்ந்த அனைத்துப் பொருட்களையும் முகாமுக்குள் கொண்டு வந்தனர். மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் அவர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அந்த இடம் யோர்தானைக் கடந்து கிழக்குப் பகுதியில் எரிகோவின் எதிரில் இருந்தது. 13 பிறகு மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், ஜனங்கள் தலைவர்களும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வீரர்களைச் சந்தித்தனர்.

14 படைத்தலைவர்களுக்கு எதிராக மோசே கோபங்கொண்டான். அவன் போரிலிருந்து திரும்பி வந்திருந்த 1,000 வீரர்களின் தலைவரோடும் 100 வீரர்களின் தலைவரோடும் கோபங்கொண்டான். 15 மோசே அவர்களிடம், “ஏன் பெண்களை உயிரோடு விட்டீர்கள். 16 இப்பெண்களே பிலேயாமின் நாட்களில் பேயோரில் நடந்ததுபோல் இஸ்ரவேல் ஆண்கள் கர்த்தரை விட்டு விலகுவதற்கு காரணமாயிருந்தவர்கள். கர்த்தருடைய ஜனங்களுக்கு மீண்டும் அந்த நோய் ஏற்படும். 17 இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள். 18 எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள். 19 பிறகு மற்றவர்களைக் கொன்ற அனைவரும் கூடாரத்திற்கு வெளியே ஏழு நாட்கள் தங்கி இருங்கள். உங்களில் எவரேனும் பிணத்தைத் தொட்டிருந்தாலும் அவன் கூடாரத்திற்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாவது நாள், நீங்களும் உங்கள் கைதிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றை மீண்டும் நீங்கள் ஏழாவது நாள் செய்ய வேண்டும். 20 நீங்கள் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அதோடு தோல், கம்பளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்டப் பொருட்களையும் கழுவவேண்டும். நீங்கள் சுத்தமாக வேண்டும்” என்றார்.

21 பிறகு ஆசாரியனாகிய எலெயாசார் வீரர்களோடு பேசினான். அவன், “இவ்விதிகள் எல்லாம் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டவை. இவ்விதிகள் போரிலிருந்து திரும்பிவரும் வீரர்களுக்கு உரியவை. 22-23 ஆனால் நெருப்பில் இடப்படும் பொருள்களுக்கு உரிய விதிகள் வேறு விதமானவை. நீங்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம் போன்றவற்றை நெருப்பில் இடலாம். பிறகு அவற்றை தண்ணீரில் கழுவும்போது அவை சுத்தமாகும். நெருப்பில் இட முடியாத பொருட்களை தண்ணீரால்தான் சுத்தப்படுத்த முடியும். 24 ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.

25 பிறகு கர்த்தர் மோசேயிடம், 26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும். 27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும். 28 போருக்குச் சென்று வந்த வீரர்களிடமிருந்து ஒரு பகுதியை எடு. அது கர்த்தருக்கு உரியது. 500-ல் ஒன்று கர்த்தருடைய பங்காகும். இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் என அனைத்திற்கும் பொருந்தும். 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்கு உரிய பங்காகும். 30 பிறகு பிற ஜனங்களுடைய பங்கில் 50-ல் ஒன்றை எடு. இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இப்பங்கை வேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தக் கூடாரத்திற்குப் பொறுப்பாளிகள்” என்றார்.

31 மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர். 32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும், 33 72,000 பசுக்களையும் 34 61,000 கழுதைகளையும், 35 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.) 36 இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள். 37 அவர்கள் 675 ஆடுகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 38 வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களை கர்த்தருக்குக் கொடுத்தனர். 39 வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 40 வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர். 41 கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளையெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

42 பிறகு மோசே வீரர்கள் கைப்பற்றியவைகளில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய பங்காகிய பாதிப்பகுதியை எண்ணினான். போருக்குச் சென்ற வீரர்களிடமிருந்து மோசே ஜனங்களுக்காகப் பெற்றுக்கொண்டதாவது. 43 3,37,500 ஆடுகள், 44 36,000 பசுக்கள். 45 30,500 கழுதைகள், 46 16,000 பெண்களையும் பெற்றனர். 47 இவற்றில் 50-ல் ஒன்றை கர்த்தருக்காக மோசே எடுத்துக்கொண்டான். இவற்றில் ஜனங்களும் மிருகங்களும் அடங்கும். பிறகு அவன் அவற்றை லேவியர்களுக்குக் கொடுத்தான், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான கூடாரத்தைக் கவனிப்பவர்கள். மோசே இதனை கர்த்தருடைய கட்டளைப்படி செய்து முடித்தான்.

48 பிறகு படைத்தலைவர்கள் (இவர்கள் 1,000 பேருக்கு தலைவராகவும் 100 பேருக்கு தலைவராகவும் இருந்தனர்.) மோசேயிடம் வந்தனர். 49 அவர்கள் மோசேயிடம், “நாங்கள் உங்களது வேலைக்காரர்கள். எங்கள் வீரர்களை எண்ணி கணக்கிட்டிருக்கிறோம். அவர்களில் யாரையும் தவறவிடவில்லை. 50 நாங்கள் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கர்த்தருக்குரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கொண்டுவந்தவற்றுள், தங்கத்தாலான வளையங்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கான இந்த அன்பளிப்புகள் எங்களைச் சுத்தப்படுத்தும்” என்றார்கள்.

51 எனவே மோசே பொன்னாலான அத்தனை அணிகலன்களையும் எடுத்து ஆசாரியனான எலெயாசாரிடம் கொடுத்தான். 52 1,000 பேருக்கும், 100 பேருக்கும் தலைவரானவர்கள் கொடுத்த பொன்னணிகள் 420 பவுண்டு இருந்தது. 53 வீரர்கள் தங்கள் பங்காகக் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டனர். 54 மோசேயும், ஆசாரியனான எலெயாசாரும் 1,000 ஆண்களுக்கும் 100 ஆண்களுக்கும் உரிய தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அவர்கள் அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்தனர். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு அடையாளமாக வைக்கப்பட்டது.

மாற்கு 9:1-29

பிறகு இயேசு “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்றார்.

மோசே, எலியாவுடன் இயேசு(A)

ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே.

பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர்.

பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் மகன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது.

பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.

இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார்.

10 ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். 11 சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர்.

12 “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? 13 எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.

சிறுவன் குணமாக்கப்படுதல்(B)

14 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். 15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.

16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

17 “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. 18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.

19 அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.

20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.

21 இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. 22 பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான்.

23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.

24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.

25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார்.

26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். 27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.

28 இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.

29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center