Old/New Testament
மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல்
12 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்துகொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பெண்னை மணந்துகொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள். 2 அவர்கள் தமக்குள், “ஜனங்களோடு பேசுவதற்கு கர்த்தர் மோசே ஒருவனை மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசினார்” என்று கூறிக்கொண்டனர்!
கர்த்தர் இதனைக் கேட்டார். 3 (மோசே மிகவும் தாழ்மையான குணமுள்ளவன். அவன் தனக்குள் பெருமையுள்ளவன் அல்ல. பூமியிலுள்ள மற்ற மனிதர்களைவிட அவன் மிகவும் சாந்த குணமுள்ளவன்.) 4 எனவே கர்த்தர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகிய மூவருடனும் பேசி, “நீங்கள் மூவரும் இப்பொழுது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வாருங்கள்” என்று சொன்னார்.
5 உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: “ஆரோன்! மிரியாம்!” என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர். 6 தேவன், “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களுக்குக் காட்சியளிப்பேன். அவர்களோடு கனவில் பேசுவேன். 7 ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன். 8 நான் அவனோடு பேசும்போது, முகமுகமாய் பேசுகிறேன். மறைபொருளான கதைகளையல்ல, அவன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நான் தெளிவாகக் கூறிவிடுவேன். கர்த்தரின் தோற்றத்தையே மோசே பார்க்க இயலும். எனவே, ஏன் நீங்கள் எனது ஊழியனான மோசேக்கு எதிராகப் பேசத் துணிந்தீர்கள்?” என்று கேட்டார்.
9 கர்த்தர் அவர்கள் மீது பெருங்கோபத்தோடு இருந்தபடியால் அவர்களைவிட்டு கர்த்தர் விலகினார். 10 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பிச் சென்றது. ஆரோன் திரும்பி மிரியாமைப் பார்த்தான். அவளது தோல் பனியைப் போன்று வெளுத்திருந்தது. அவளுக்குப் பயங்கரமான தொழுநோய் ஏற்பட்டது!
11 பிறகு ஆரோன் மோசேயிடம், “ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முட்டாள்தனமாக பாவம் செய்துவிட்டோம். 12 மரித்துப் பிறந்த குழந்தையைப் போல அவள் தன் தோலை இழக்க விட்டுவிடாதிரும்” என்றான். (சில வேளையில் சில குழந்தைகள் பாதிதோல் அழுகிய நிலையில் மரித்துப் பிறப்பதுண்டு.)
13 எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, “தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்” என்றான்.
14 கர்த்தர் மோசேயை நோக்கி, “அவளது தந்தை அவள் முகத்தின் மீது உமிழ்ந்தால், அவளுக்கு ஏழு நாட்கள் அவமானமாக இருக்கும். எனவே, அவளை முகாமிற்கு வெளியே ஏழு நாட்கள் வைத்திரு. அதற்குப் பிறகு அவள் குணமாவாள். பின்னர் அவள் கூடாரத்திற்குத் திரும்பலாம்” என்றார்.
15 ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக்கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 16 அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.
கானானுக்குப் போன ஒற்றர்கள்
13 கர்த்தர் மோசேயிடம், 2 “கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார்.
3 கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான்.
4 ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா;
5 சிமியோனின் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகனான சாப்பாத்;
6 யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேப்;
7 இசக்காரின் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகனான ஈகால்;
8 எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து நூனின் மகனான ஓசேயா;
9 பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகனான பல்த்தி;
10 செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகனான காதியேல்;
11 யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் மகனான காதி;
12 தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகனான அம்மியேல்;
13 ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகனான சேத்தூர்;
14 நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேதியின் மகனான நாகபி;
15 காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகனான கூவேல்;
16 நாட்டைப் போய் கண்டுபிடிக்கவும், அதைப் பற்றி அறியவும் மோசேயால் அனுப்பட்டவர்களின் பெயர்கள் இவைகளே ஆகும். (நூனின் மகனான ஓசேயாவுக்கு மோசே, யோசுவா என்று பெயர் வைத்திருந்தான்.)
17 மோசே அவர்களைக் கானான் தேசத்தைக் கண்டு வருமாறு அனுப்பும்போது அவர்களிடம், “நீங்கள் இந்தப் பாலைவனத்தின் தெற்குப் பகுதி வழியாகச் சென்று மலையில் ஏறவேண்டும். 18 அந்த நாடு எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கே வாழுகிற ஜனங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா? 19 நாட்டைப் பற்றியும் அதில் வாழும் ஜனங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள், இது நல்ல நாடா கெட்ட நாடா? எந்த விதமான பட்டணங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதில் சுவர்கள் உள்ளனவா? நகரங்கள் பலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? 20 நாட்டிலுள்ள மற்ற செய்திகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் உள்ளதா, அல்லது சாரம் அற்றதா? இந்நாட்டில் மரங்கள் உள்ளனவா? அங்குள்ள பழவகைகளில் சிலவற்றைக் கொண்டு வர முயலுங்கள்” என்றான். (அது முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாய் இருந்தது.)
21 எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர். 22 நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். 23 பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக்கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர். 24 அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.
25 அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந்நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள். 27 மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ; 28 ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம். 29 அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர்.
30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.
31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. 3 நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.
4 பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
5 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். 6 யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) 7 அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. 8 அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். 9 எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.
10 அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. 11 கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். 12 அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.
13 பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். 14 எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். 15 எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், 16 ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’
17 “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! 18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், 19 இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.
20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல்
26 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 27 “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். 28 நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: 29 நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். 30 எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகனான காலேபும், நூனின் மகனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. 31 அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். 32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.
33 “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 34 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
35 “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.
36 புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர். 37 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார். 38 ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.
கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல்
39 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே இவை அனைத்தையும் சொன்னான். அவர்கள் மிகவும் துக்கப்பட்டு மனங்கசந்து அழுதனர். 40 மறுநாள் அதிகாலையில் அவர்கள் உயரமான மலைநாட்டிற்குள் பிரவேசிக்கப் புறப்பட்டனர். அவர்கள்: “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். நாங்கள் கர்த்தரை நம்பாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். கர்த்தர் வாக்களித்த நாட்டிற்குள் நாங்கள் போவோம்” என்றனர்.
41 ஆனால் மோசே, “கர்த்தரின் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடையப் போவதில்லை. 42 அந்த நாட்டிற்குள் போகாதீர்கள். கர்த்தர் இப்போது உங்களோடு இல்லை. எனவே, உங்கள் பகைவர்கள் உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள். 43 அமலேக்கியரும், கானானியரும் உங்களுக்கு முன்னே அங்கே இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டீர்கள். எனவே நீங்கள் அவர்களோடு சண்டையிடும்போது கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார். எனவே நீங்கள் அனைவரும் போரில் கொல்லப்படுவீர்கள்” என்றான்.
44 ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை. 45 மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கி வந்து அவர்களைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தனர். அவர்களை ஓர்மா வரை துரத்தி அடித்தனர்.
உயிரடைதலும், நோயாளி குணமாகுதலும்(A)
21 படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். 22 அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். 23 அவன் இயேசுவை மேலும் மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன மகள் செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான்.
24 ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர்.
25 அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். 26 அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.
27 அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். 28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். 29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். 30 இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
31 இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.
32 ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். 33 அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். 34 இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.
35 இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் மகள் இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர்.
36 அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார்.
37 மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். 38 இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. 39 இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். 40 இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள்.
இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். 41 அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) 42 அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். 43 இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.
2008 by World Bible Translation Center