Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 20

இஸ்ரவேலுக்கும் பென்யமீனுக்கும் யுத்தம்

20 இஸ்ரவேலர் எல்லோரும் மிஸ்பா நகரில் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்காக ஒன்று கூடினார்கள். தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், கீலேயாத்திலுள்ள இஸ்ரவேலரும் அங்குக் கூடினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் எல்லாத் தலைவர்களும் அங்கிருந்தனர். தேவனுடைய ஜனங்களின் கூட்டத்தில் அவரவருக்குரிய இடங்களில் அமர்ந்தனர். அங்கு 4,00,000 வீரர்கள் தங்கள் வாளோடு நின்றனர். பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள், இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், “இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு” என்றனர்.

எனவே கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் நடந்ததை விளக்கினான். அவன், “எனது வேலைக்காரியும் நானும் பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்கு வந்து, அங்கு இரவைக் கழித்தோம். ஆனால் இரவில் கிபியா நகரத்தின் தலைவர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழ்ந்து என்னைக் கொல்ல விரும்பினார்கள். அவர்கள் என் வேலைக்காரியை கற்பழித்தனர். அவள் மரித்தாள். எனவே நான் என் பணிப் பெண்ணை எடுத்துச் சென்று அவளைத் துண்டுகளாக்கினேன். பின் நான் ஒவ்வொரு துண்டையும் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அனுப்பினேன். நாம் பெற்ற தேசங்களுக்கெல்லாம் 12 துண்டுகளையும் அனுப்பி வைத்தேன். இஸ்ரவேலில் பென்யமீன் ஜனங்கள் இத்தகைய கொடிய காரியத்தைச் செய்ததால் நான் இவ்வாறு செய்தேன். இப்போது இஸ்ரவேலின் மனிதர்களே பேசுங்கள். நாம் செய்ய வேண்டியதென்ன என்பது பற்றிய உங்கள் முடிவைக் கூறுங்கள்” என்றான்.

அப்போது எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அவர்கள் ஒருமித்த குரலில், “யாரும் வீட்டிற்குத் திரும்பமாட்டோம். ஆம், யாரும் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதில்லை. இப்போது கிபியா நகரத்திற்கு இதனைச் செய்வோம். சீட்டுப்போட்டு தேவன் அவர்களுக்குச் செய்ய நினைப்பதென்ன என்பதைக் கண்டுபிடிப்போம். 10 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 ஆட்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 1,000 பேரிலும் 100 பேரைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 10,000 பேரிலும் 1,000 பேர்களைத் தேர்ந்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுத்தோர் ஆயுதங்களைக் கொண்டு வருவார்கள். இந்த சேனை பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்குச் செல்லும். இஸ்ரவேல் ஜனங்களிடையே அவர்கள் செய்தக் கொடிய தீமைக்காக அந்த ஜனங்களை சேனை தண்டிக்கும்” என்றனர்.

11 எனவே இஸ்ரவேலர் கிபியா நகரில் கூடினார்கள். தாங்கள் செய்வதில் எல்லோரும் ஒருமனப்பட்டிருந்தனர். 12 இஸ்ரவேல் கோத்திரங்கள் சேர்ந்து பென்யமீன் கோத்திரம் எங்கும் பின்வரும் செய்தியுடன் ஒருவனை அனுப்பினார்கள். “உங்கள் ஆட்களில் சிலர் இந்த கொடிய தீமையைச் செய்ததேன்? 13 கிபியா நகரிலிருந்து அந்த துன்மார்க்கரை எங்களிடம் அனுப்புங்கள். அவர்களைக் கொல்லும்படிக்கு எங்களிடம் ஒப்படையுங்கள். இஸ்ரவேலரிடமிருந்து தீமையை அகற்ற வேண்டும்.”

ஆனால் பென்யமீன் கோத்திரத்தினர் பிற இஸ்ரவேலரிடமிருந்து வந்த செய்தியைப் பொருட்படுத்தவில்லை. 14 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் தங்கள் நகரங்களை விட்டு, கிபியா நகரத்திற்குச் சென்றனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களுடன் போரிட அவர்கள் கிபியாவுக்குச் சென்றனர். 15 பென்யமீன் கோத்திரத்தினர் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 26,000 வீரர்களை ஒன்றாகக் கூட்டினார்கள். அவர்களிடம் கிபியாவில் பயிற்சி பெற்ற 700 வீரர்களும் இருந்தனர். 16 இடதுகை பழக்கமுள்ள 700 பயிற்சி பெற்ற வீரர்களும் இருந்தனர். அவர்கள் கவண் கல்லை மிகவும் திறமையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஒரு மயிரிழையும் தவறாது. அவர்கள் கவண் கல்லைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருந்தனர்.

17 பென்யமீன் அல்லாத மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களும் 4,00,000 வீரர்கனளத் திரட்டினார்கள். அந்த 4,00,000 மனிதர்களும் வாளேந்தியிருந்தனர். ஒவ்வொருவனும் பயிற்சிப் பெற்ற வீரனாக இருந்தான். 18 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், “எந்தக் கோத்திரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?” என்று கேட்டனர்.

கர்த்தர், “யூதா முதலில் போகட்டும்” என்றார்.

19 மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர். 20 அப்போது இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையோடுப் போருக்குச் சென்றது. கிபியா நகரில் இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையை எதிர்த்துப் போரிடுவதற்குத் தயாராயிற்று. 21 அப்போது பென்யமீன் சேனை கிபியா நகரத்திலிருந்து வெளி வந்தது. அந்த நாளில் நடந்த போரில் பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையின் 22,000 மனிதர்களைக் கொன்றது.

22-23 இஸ்ரவேலர் கர்த்தரிடம் சென்றனர். மாலைவரைக்கும் அழுதனர். அவர்கள் கர்த்தரை நோக்கி, “பென்யமீன் ஜனங்களோடு மீண்டும் போரிடுவதற்குச் செல்ல வேண்டுமா? அவர்கள் எங்கள் உறவினர்கள்” என்றனர்.

கர்த்தர், “போய், அவர்களுக்கெதிராகப் போர் செய்யுங்கள்” என்று பதில் கூறினார். இஸ்ரவேல் மனிதர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். மீண்டும் போருக்கு முதல்நாளைப் போலவே சென்றனர்.

24 இஸ்ரவேல் சேனை பென்யமீன் படையை நெருங்கிற்று. அது போரின் இரண்டாம்நாள். 25 பென்யமீன் சேனை கிபியா நகரிலிருந்து இஸ்ரவேல் சேனையைத் தாக்க வந்தது. இம்முறை பென்யமீன் சேனை மேலும் இஸ்ரவேல் சேனையின் 18,000 மனிதர்களைக் கொன்றது. இஸ்ரவேலர் படையிலிருந்த அவ்வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற்றிருந்தனர்.

26 பின் இஸ்ரவேலர் பெத்தேல் நகரம் வரைக்கும் சென்றனர். அந்த இடத்தில் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கி அழுதனர். அன்று மாலைவரை நாள் முழுவதும் அவர்கள் எதுவும் உண்ணவில்லை. அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியையும், சமாதான பலிகளையையும் செலுத்தினார்கள். 27 இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஒரு கேள்வி கேட்டனர். (அந்நாளில் பெத்தேலில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. பினெகாஸ் என்பவன் தேவனுடைய ஆசாரியனாக இருந்தான். 28 பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசார் ஆரோனின் மகன்.) இஸ்ரவேலர், “பென்யமீன் ஜனங்கள் எங்கள் உறவினர். நாங்கள் அவர்களோடு போரிட மீண்டும் போக வேண்டுமா? அல்லது போரை நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டனர்.

கர்த்தர், “போங்கள், நாளை அவர்களை வெல்வதற்கு உங்களுக்கு உதவுவேன்” என்று பதில் உரைத்தார்.

29 பின்பு இஸ்ரவேல் சேனை கிபியா நகரைச் சுற்றிலும் சிலரை ஒளித்து வைத்தது. 30 மூன்றாம் நாள் இஸ்ரவேல் சேனை கிபியா நகரை எதிர்த்துப் போரிடச் சென்றது. அவர்கள் முன்பு செய்தது போலவே போருக்குத் தயாராயினார்கள். 31 பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையோடு போர் செய்வதற்காக கிபியா நகரை விட்டு வெளியே வந்தது. இஸ்ரவேல் சேனை பின்னிட்டுத் தங்களைப் பென்யமீன் சேனை துரத்தும்படி செய்தது. இவ்வாறாக நகரை விட்டு சேனை வெகு தூரம் வரும்படியாக பென்யமீன் சேனைக்கு எதிராக தந்திரம் செய்யப்பட்டது.

ஏற்கெனவே செய்தது போன்று பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையில் சில மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். சுமார் 30 இஸ்ரவேல் மனிதர்களை அவர்கள் கொன்றனர். வயல்களில் சிலரையும், பாதைகளில் சிலரையும் கொன்றனர். ஒரு பாதை பெத்தேல் நகரத்திற்கும் மற்றொருபாதை கிபியாவிற்கும் சென்றது. 32 பென்யமீன் மனிதர்கள், “முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர். 33 எனவே எல்லா மனிதரும் ஓடிவிட்டனர். பாகால் தாமார் என்னுமிடத்தில் அவர்கள் நின்றனர். கிபியாவிற்கு மேற்கே இஸ்ரவேலரில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து ஓடிவந்து, கிபியாவைத் தாக்கினார்கள். 34 கிபியா நகரை இஸ்ரவேலின் 10,000 வீரர்கள் தாக்கினார்கள். போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமீன் சேனை தங்களுக்கு நேரவிருக்கும் கொடுமையானக் காரியத்தை அறியாதிருந்தார்கள்.

35 கர்த்தர் இஸ்ரவேல் சேனையைப் பயன்படுத்தி, பென்யமீன் சேனையைத் தோற்கடித்தார். அந்த நாளில் இஸ்ரவேல் படை பென்யமீன் சேனையிலிருந்து 25,100 வீரரைக் கென்றனர். அவர்கள் போர்ப்பயிற்சி பெற்றிருந்தனர். 36 பென்யமீன் ஜனங்கள் தாம் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டனர்.

இஸ்ரவேல் சேனை பின்னோக்கிச் சென்றது. அவர்கள் திடீர் தாக்குதலை நம்பியிருந்ததால் அவ்வாறு பின்னே சென்றார்கள். 37 மறைந்திருந்த மனிதர்கள் கிபியா நகரத்திற்கு விரைந்தனர். அவர்கள் நகரெங்கும் சென்று அங்கிருந்தோரை வாளால் கொன்றனர். 38 ஒளிந்திருந்த மனிதர்கள் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை இஸ்ரவேல் வகுத்திருந்தனர். ஒளித்திருந்த மனிதர்கள் ஒரு விசேஷ அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் புகை மண்டலத்தை எழுப்புமாறு எதிர்பார்க்கப்பட்டனர்.

39-41 பென்யமீன் சேனை சுமார் 30 இஸ்ரவேல் படைவீரர்களைக் கொன்றிருந்தது. எனவே பென்யமீன் ஆட்கள், “முன்பு போலவே, நாங்கள் வெல்கிறோம்” என்றனர். அப்போது நகரிலிருந்து புகையெழுந்தது. பென்யமீன் ஜனங்கள் திரும்பி, புகையைப் பார்த்தனர். நகரம் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அப்போது இஸ்ரவேல் சேனையினர் ஓடுவதை நிறுத்தினார்கள். இதைக் கண்ட பென்யமீன் மனிதர்கள் பயந்தனர். அப்பொழுது தமக்கு நேர்ந்த கொடிய நிலையை அறிந்தனர்.

42 எனவே பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையைக் கண்டு ஓட ஆரம்பித்தது. அவர்கள் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களால் போரிடுவதை நிறுத்த முடியவில்லை. இஸ்ரவேலர் நகரங்களிலிருந்து வந்து அவர்களைக் கொன்றனர். 43 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர். 44 பென்யமீன் சேனையைச் சார்ந்த 18,000 துணிவுமிக்க, பலமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.

45 பென்யமீன் சேனை திரும்பி, பாலைவனத்திற்கு நேரே ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை எனப்படும் இடத்திற்கு ஓடினார்கள்.

ஆனால் இஸ்ரவேல் சேனையினர் பெரும் பாதைகளில் 5,000 பென்யமீன் வீரர்களைக் கொன்றனர். பென்யமீன் மனிதர்களை அவர்கள் துரத்திக் கொண்டேயிருந்தனர். அவர்களைக் கீதோம் வரைக்கும் துரத்தினார்கள். அவ்விடத்தில் இஸ்ரவேல் சேனை இன்னும் 2,000 வீரர்களைக் கொன்றது.

46 அந்த நாளில் பென்யமீன் படையிலுள்ள 25,000 பேர் கொல்லப்பட்டனர். அம்மனிதர்கள் வாளைச் சுழற்றி மிகவும் துணிவுடன் போர் செய்தனர். 47 ஆனால் பென்யமீனைச் சேர்ந்த 600 பேர் பாலைவனத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை என்னுமிடத்திற்குச் சென்று நான்கு மாதங்கள் அங்குத் தங்கினார்கள். 48 இஸ்ரவேல் ஆட்கள் பென்யமீன் தேசத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள மனிதர்களைக் கொன்றார்கள். அவர்கள் மிருகங்களையெல்லாம் கொன்றனர். அகப்பட்ட பொருட்களையெல்லாம் அழித்தனர். அவர்கள் நுழைந்த நகரங்களையெல்லாம் எரித்தனர்.

அப்போஸ்தலர் 24

யூதர்களின் குற்றச்சாட்டு

24 ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள். கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். 6-8 மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” [a] என்றான். பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.

பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்

10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.

14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.

17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை [b] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.

22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.

பெலிக்ஸ் முன் பவுல்

24 சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான். 25 நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான். 26 பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான்.

27 ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

எரேமியா 34

யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு எச்சரிக்கை

34 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தபோது வார்த்தை வந்தது. அவன் எருசலேமிற்கும் அதைச்சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் எதிராகச் சண்டையிட்டு கொண்டிருந்தான். நேபுகாத்நேச்சார் தன்னோடு தனது படை முழுவதையும் ஜனங்களிடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல இராஜ்யங்களுக்கும் உரிய படைகளையும் வைத்திருந்தான்.

இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் அரசனான சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் அரசனுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான். சிதேக்கியா, பாபிலோன் அரசனிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது. நீ உறுதியாகப் பிடிபடுவாய். அவனிடம் கொடுக்கப்படுவாய். பாபிலோன் அரசனை நீயே உன் சொந்தக் கண்களால் பார்ப்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகப் பேசுவான். நீ பாபிலோனிடம் போவாய். ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் அரசனான சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய். நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைப்படுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைப்படுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, “ஓ எஜமானனே” என்பார்கள். நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

எனவே, எரேமியா இச்செய்தியை கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான். பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.

ஜனங்கள் தங்களது ஒப்பந்தத்தை உடைக்கின்றனர்

அனைத்து எருசலேம் ஜனங்களோடும் சிதேக்கியா அரசன் அனைத்து எபிரெய அடிமைகளுக்கும் விடுதலை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தான். சிதேக்கியா அந்த ஒப்பந்தம் செய்த பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. ஒவ்வொருவனும் எபிரெய அடிமையையும் விடுதலை செய்யவேண்டும். ஆணும் பெண்ணுமான எபிரெய அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும். எவரும் இன்னொரு யூதா கோத்திரத்தில் உள்ளவனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது. 10 எனவே யூதாவில் உள்ள அனைத்துத் தலைவர்களும் ஜனங்களனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவனும் ஆண் மற்றும் பெண் அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களை இனிமேலும் அடிமையாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே, அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர். 11 ஆனால், அதற்குப் பிறகு, அடிமைகளை வைத்து இருந்த ஜனங்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். எனவே, விடுவிக்கப்பட்ட ஜனங்களை எடுத்து மீண்டும் அடிமைகளாக்கிக் கொண்டனர்.

12 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 13 “எரேமியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னது இதுதான்: ‘நான் உங்கள் முற்பிதாக்களை அடிமையாயிருந்த எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அதைச் செய்த போது நான் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டேன். 14 நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன், “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை. 15 கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள். 16 ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’

17 “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன். 18 எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர். 19 கன்றின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தவர்கள் இவர்கள்தான். யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், சபையின் முக்கியமான அதிகாரிகள், ஆசாரியர்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள். 20 எனவே, நான் அந்த ஜனங்களை அவர்களது பகைவர்களிடமும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவரிடமும் கொடுப்பேன். அந்த ஜனங்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும். 21 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனது அலுவலக அதிகாரிகளையும் அவர்களது பகைவருக்கும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். நான் சிதேக்கியாவையும் அவனது ஜனங்களையும் பாபிலோன் அரசனது படைக்கு, அப்படை எருசலேமை விட்டு விலகி இருந்தாலும் கொடுப்பேன். 22 ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’”

சங்கீதம் 5-6

புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்

கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
    நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
எனது தேவனாகிய அரசனே,
    என் ஜெபத்தைக் கேளும்.
கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
    உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.

தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
    தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
மூடர் உம்மிடம் வர இயலாது,
    தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
    பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.

கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
    உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
    ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
    எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
    அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
    ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
    அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
    எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
    என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
    தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
    அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
    என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
    என்னைக் குணமாக்கும்!
    என் எலும்புகள் நடுங்குகின்றன.
என் முழு உடம்பும் நடுங்குகிறது.
    கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
    நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
    மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
    எனவே என்னை நீர் குணமாக்கும்!

கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
    என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
    உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
    வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
    தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.

தீயோரே அகன்று போங்கள்!
    ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.

10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
    ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center