Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 19

சிவப்பு பசுவின் சாம்பல்

19 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும் பேசினார். அவர், “இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும். கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும். பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும். பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். பிறகு, ஆசாரியர் கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும் எடுத்து காளை எரிக்கப்படும் இடத்தில் போடவேண்டும். பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான். காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.

“பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.

10 “காளையின் சாம்பலைச் சேகரித்தவன் தனது ஆடைகளைத் துவைக்கவேண்டும். அவன் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.

“இந்த விதிகள் எல்லாக் காலத்துக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் உரியதாகும். இந்த விதி உங்களோடு வாழ்கிற அயல் நாட்டவருக்கும் உரியதாகும். 11 எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். 12 அவன் தன்னைத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் கழுவவேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால் தொடர்ந்து அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். 13 ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான்.

14 “இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும். 15 ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும். 16 வெளியிலே எவனாவது பிணத்தைத் தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். போரில் கொல்லப்பட்டவனையோ, மரித்தவனின் எலும்பையோ தொட்டாலும் அவன் தீட்டுள்ளவன் ஆவான்.

17 “எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும். 18 தீட்டில்லாத ஒருவன் ஈசோப்புக் கிளையை எடுத்து அதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பிறகு அதனைக் கூடாரம், சகல பொருட்கள், ஜனங்கள் ஆகியவற்றின் மீது தெளிக்கவேண்டும். மரித்த மனிதனின் சரீரத்தைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்க வேண்டும். போரில் கொல்லப்பட்ட ஒருவனைத் தொட்டவன் மீதும், மரித்துப் போனவனின் எலும்புகளைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்கவேண்டும்.

19 “தீட்டு இல்லாத ஒருவன், இத்தண்ணீரை தீட்டுள்ளவன் மீது மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் தெளிக்கவேண்டும். ஏழாவது நாள் தீட்டுள்ளவன் சுத்தமாவான். அவன் தனது ஆடையை தண்ணீரில் துவைக்கவேண்டும். மாலையில அவன் சுத்தமாகிவிடுவான்.

20 “ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான். 21 இந்த விதி எல்லாக் காலத்திற்கும் உரியது, ஒருவன் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் தெளிக்கப்பட்டாலும் அவன் தன் ஆடைகளை தண்ணீரில் துவைக்க வேண்டும். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொடுகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 22 தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.

சங்கீதம் 56-57

“தூரத்து ஓக் மரத்தின் புறா” என்னும் இசையில் வாசிக்க இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்ற பாடல். பெலிஸ்தர் தாவீதை காத் என்னும் இடத்தில் பிடித்தபோது பாடியது.

56 தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும்.
    அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள்.
    என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள்.
நான் அஞ்சும்போது,
    உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
    தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள்.
என்னைக் கொல்லும் வகைதேடி,
    அவர்கள் ஒருமித்து ஒளிந்திருந்து என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்கள்.
தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும்.
    அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும்.
என் வருத்தத்தை நீர் அறிகிறீர்.
    என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர்.
    என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.

எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும்.
    நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!
10 தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
    கர்த்தர் எனக்களித்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
11 நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன்.
    ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!

12 தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன்.
    நான் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
    என் ஸ்தோத்திரபலியை உமக்குச் செலுத்துவேன்.
13 ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர்.
    பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர்.
எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன்.
    அதை ஜீவனுள்ளோர் மட்டும் பார்க்க முடியும்.

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.

57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
    என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
    பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
    தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
    எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
    தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
    என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
    அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
    அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
    அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.

தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
    உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
    நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
    ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.

ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
    அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
    நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
என் ஆத்துமாவே, எழுந்திரு.
    வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
    ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
    வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
    அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.

ஏசாயா 8:1-9:7

அசீரியா விரைவில் வரும்

கர்த்தர் என்னிடம் கூறினார், “ஒரு பெரிய சுருளை எடுத்துக்கொள். இந்த வார்த்தைகளை எழுத ஒரு பேனாவை எடுத்துக்கொள். அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (‘அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்’ என்பது பொருள்) என்று எழுது” என்றார்.

நான் சிலரைச் சேகரித்தேன். அவர்கள் நம்பிக்கைக்குரிய சாட்சிகள். (அவர்கள் ஆசாரியனான உரியா, சகரியா, யெபெரெகியா ஆகியோர்). இவர்கள் நான் எழுதுவதைக் கவனித்தார்கள். பிறகு நான் தீர்க்கதரிசியான ஒரு பெண்ணிடம் சென்றேன். நான் அவளோடு இருந்தபிறகு அவள் கர்ப்பவதியானாள். அவள் ஒரு மகனைப் பெற்றாள். பிறகு கர்த்தர் என்னிடம், “அப்பையனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என்னும் பெயரிடு. ஏனென்றால், இவன் “அம்மா, அப்பா” என்று சொல்லக் கற்பதற்கு முன்னால் தேவன், தமஸ்கு மற்றும் சமரியாவிலுள்ள செல்வங்களை எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் கொடுத்துவிடுவார் என்றார்.

மீண்டும் கர்த்தர், என்னிடம் கூறினார். என் ஆண்டவர், “இந்த ஜனங்கள் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீரை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ரேத்சீனையும் ரெமலியாலின் மகனையும் ஏற்று மகிழ்ச்சிகொண்டார்கள்.” ஆனால் கர்த்தராகிய நான் அசீரியாவின் அரசனையும் அவனது வல்லமையயும் உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் ஐபிராத்து ஆற்றின் பெருவெள்ளத்தைப்போன்று வருவார்கள். அது குளத்தில் தண்ணீர்மட்டம் உயருவதுபோன்று இருக்கும். அந்த வெள்ளம் ஆற்றிலிருந்து வெளியே வந்து யூதாவின்மேல் பாய்வதுபோல இருக்கும். அந்த வெள்ளம் யூதாவின் கழுத்துவரை வந்து அதனை மூழ்கடிக்கும்.

“இம்மானுவேலே, உமது நாடு முழுவதிலும் பரவும்வரை அந்த வெள்ளம் வரும்” என்றார்.

நாடுகளே, நீங்கள் போருக்குத் தயாராகுங்கள்!
    நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
கவனியுங்கள், தூர நாடுகளில் உள்ளவர்களே!
    போருக்குத் தயாராகுங்கள் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
10 போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள்.
    உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும்.
உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்!
    உங்கள் கட்டளைகள் பயனற்றுப்போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!

ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள்

11 கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப்போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார். 12 கர்த்தர், “ஒவ்வொருவரும் மற்றவர்கள் தனக்கெதிராகத் திட்டம் தீட்டுவதாகக் கூறுகின்றனர். நீ அவற்றை நம்பவேண்டாம். அவர்கள் பயப்படுகின்றவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்றார்!

13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒருவருக்கே நீ பயப்பட வேண்டும். அவர் ஒருவருக்கே நீ மரியாதை செலுத்த வேண்டும். அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும். 14 நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப்போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப்போன்று இருக்கிறார். 15 (ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப்போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).

16 ஏசாயா, “ஒரு ஒப்பந்தத்தைச்செய்து முத்திரை இடுவோம். எதிர்காலத்திற்காக என் போதனைகளைப் பத்திரப்படுத்துங்கள். என்னைப் பின்பற்றுகிறவர்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இதனைச் செய்யுங்கள்.”

17 இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன்.

யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார்.
    அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
    ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.

18 இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.

19 சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?

20 நீங்கள் போதனைகளையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும். அந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாவிட்டால், பின்னர் நீங்கள் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். (தவறான கட்டளைகள் என்பது குறிகாரர்களும் அஞ்சனக்காரர்களும் கூறுவதாகும். அக்கட்டளைகள் பயனற்றவை. அக்கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது).

21 நீங்கள் அந்தத் தவறான கட்டளைகளைப் பின்பற்றினால், நாட்டில் துன்பமும், பசியும் ஏற்படும். ஜனங்களுக்குப் பசி ஏற்படும். எனவே, அவர்கள் கோபங்கொண்டு தம் அரசனுக்கும் அவனது தெய்வங்களுக்கும் எதிராகப் பேசுவார்கள். பிறகு அவர்கள் தம் உதவிக்கு தேவனிடம் வேண்டுவார்கள்.

22 அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.

ஒரு புதிய நாள் வருகிறது

கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டை தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.

இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும்.

தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப்போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும். ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப்போன்று இருக்கும்.

போர் செய்வதற்காக நடந்து சென்ற ஒவ்வொரு காலணியும் அழிக்கப்படும். இரத்தம் தோய்ந்த ஒவ்வொரு சீருடையும் அழிக்கப்படும். அவை நெருப்பிலே வீசப்படும்.

விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த அரசர் நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.

யாக்கோபு 2

அனைவரையும் நேசியுங்கள்

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?

ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” [a]என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய்.

10 ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான். 11 “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக” [b]என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக” [c]என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய்.

12 உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். 13 மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.

விசுவாசமும் நற்செயல்களும்

14 எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? 15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.

18 ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். 19 ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன.

20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? 21 தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். 22 இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. 23 எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது” [d]என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். 24 எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.

25 ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள். [e]

26 எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center