M’Cheyne Bible Reading Plan
விளக்குத்தண்டும், பரிசுத்த அப்பமும்
24 கர்த்தர் மோசேயிடம், 2 “இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. அந்த எண்ணெய் குத்து விளக்கிற்குரியது. அது அணையாமல் தொடர்ந்து எரியவேண்டும். 3 ஆரோன் இந்த விளக்கை ஆசாரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதானத்தில் மாலைமுதல் காலைவரை அணையாமல் காக்கவேண்டும். இது திரைக்கு வெளியே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எரிய வேண்டும். இச்சட்டம் என்றென்றைக்குமுரியது. 4 ஆரோன் கர்த்தரின் சந்நிதியில் சுத்தமான தங்கத்தாலான விளக்குத்தண்டில் விளக்கைப் பொருத்தி எப்பொழுதும் எரியவிட வேண்டும்.
5 “அரைத்த மாவை எடுத்து அதில் பன்னிரெண்டு அப்பங்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு அப்பமும் பதினாறு கிண்ணங்கள் அளவு மாவால் செய்யப்பட வேண்டும். 6 கர்த்தருக்கு முன்பாக தங்கத்தாலான மேஜையின்மேல் இரண்டு வரிசையாக அப்பங்களை அடுக்க வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்கள் இருக்கட்டும். 7 ஒவ்வொரு வரிசைக்கும் சாம்பிராணிப் புகை காட்டு. அது அப்பத்தோடு இருந்து, கர்த்தருக்கு நினைவு அடையாளமாக, தகன பலியாக கர்த்தருக்கு ஏற்றதாக இருக்கும். 8 அப்பத்தை இவ்வரிசையிலேயே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆரோன் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். இது எல்லாக் காலங்களுக்குமுரியது. இஸ்ரவேல் ஜனங்களோடு உள்ள இந்த உடன்படிக்கை என்னென்றும் தொடரும். 9 இந்த அப்பங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். அவர்கள் பரிசுத்தமான இடங்களில் அவற்றை உண்ண வேண்டும்; ஏனென்றால் அவை கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுக்கப்பட்டவை. அது என்றென்றும் ஆரோனின் பங்காக இருக்கும்” என்று கூறினார்.
தேவனைத் தூஷித்த மனிதன்
10 இஸ்ரவேல் பெண்ணுக்குப் பிறந்த ஒருவன் இருந்தான். அவனது தந்தை எகிப்தியன். இஸ்ரவேலியப் பெண்ணுக்கு பிறந்த அம்மகன் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு நடந்துகொண்டிருந்தான். அவன் முகாமில் இன்னொரு இஸ்ரவேலனோடு சண்டையிட்டான். 11 அப்போது அவன் கர்த்தரின் நாமத்தைத் தூஷித்து, அவரைப்பற்றிக் கெடுதலாகப் பேசினான். எனவே அவனை மோசேயிடம் அழைத்து வந்தார்கள். (அவனது தாயின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.) 12 ஜனங்கள் அவனைச் சிறையில் வைத்துவிட்டு, அவனைப்பற்றிய தெளிவான பதிலைப் பெறும்படி கர்த்தரின் கட்டளைக்காகக் காத்திருந்தனர்.
13 கர்த்தர் மோசேயிடம், 14 “முகாமுக்கு வெளியே ஒரு இடத்திற்கு அவனைக் கொண்டு வா. அவன் தூஷணம் பேசியதைக் காதால் கேட்ட எல்லோரையும் ஒன்றுகூட்டி அழைத்து வா. அவர்கள் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும், பிறகு ஜனங்கள் அவன் மீது கல்லெறிந்து கொல்ல வேண்டும். 15 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டும்: எவனாவது தேவனை தூஷித்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். 16 கர்த்தருக்கு எதிராக பேசுகிற எவனையும் எல்லோரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்று போடவேண்டும். அவன் அந்நியனாக இருந்தாலும் அவனும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே தண்டிக்கப்பட வேண்டும். கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிற எவனும் சாகடிக்கப்பட வேண்டும்.
17 “எவனாவது ஒரு கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை உண்டு. 18 ஒருவன் இன்னொருவனுக்குரிய மிருகத்தைக் கொன்றால் அதற்குப் பதிலாக இன்னொரு மிருகத்தைக் கொடுக்க வேண்டும்.
19 “எவனாவது இன்னொருவனைக் காயப்படுத்தினால் அவனுக்கும் அதைப் போன்ற காயத்தை உண்டாக்க வேண்டும். 20 உடைந்த எலும்புக்கு எலும்பு உடைபட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அடுத்தவனுக்கு எவ்விதமான காயங்களை ஒருவன் உண்டாக்குகிறானோ, அதே விதமான காயங்களை அவன் அடைவான். 21 எனவே ஒருவன் ஒரு மிருகத்தைக் கொன்றால் அவன் அதற்குரிய தொகையைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டால் அவன் மரண தண்டனையடைய வேண்டும்.
22 “இந்த சட்டம் நடுநிலையாக இருக்கும். இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் ஒரே நீதிதான். ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
23 பிறகு மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். ஜனங்கள் தேவனைத் தூஷித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டு சென்று அங்கு அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி செய்தனர்.
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
6 பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.
7 தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது.
நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர்.
என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
8 எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.
9 கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும்.
என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன.
என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன.
10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது.
பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது.
என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன.
என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.
11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள்.
என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள்.
12 காணாமற்போன கருவியைப் போலானேன்.
ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன்.
அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
நீரே என் தேவன்.
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!
17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன்.
எனவே நான் ஏமாந்து போகமாட்டேன்.
தீயோர் ஏமாந்து போவார்கள்.
அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள்.
18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள்.
அத்தீயோர் பெருமைக்காரர்.
ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு
7 நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது.
ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
2 விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது.
ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.
வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3 சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.
ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
4 ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான்.
ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
5 ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது
அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
6 அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.
அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.
முட்கள் வேகமாக எரியும்,
எனவே பானை சூடாகாது.
7 எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார்.
அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
8 ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.
ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
9 விரைவாகக் கோபம் அடையாதே.
ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
10 “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
என்ன நடந்தது?” என்று கேட்காதே.
அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.
11 உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். 12 ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.
13 தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. 14 வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.
ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது
15 எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். 16-17 ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்?
18 இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். 19-20 பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.
21 ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். 22 மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.
23 நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. 24 ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். 25 நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன்.
நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். 26 சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள்
சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான்.
27-28 பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
29 “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.
இறுதி நாட்கள்
3 இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். 2 அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். 3 அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். 4 இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். 5 அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.
6 சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். 7 அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். 8 யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். 9 ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.
இறுதி அறிவுரைகள்
10 ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். 11 எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். 12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். 13 தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும் மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள்.
14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.
2008 by World Bible Translation Center