M’Cheyne Bible Reading Plan
யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குகிறான்
14 அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் மகனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.
2 சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர். 3 அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். இக்கபோத் பினெகாசின் மகன். பினெகாசு ஏலியின் மகன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான்.
யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை. 4 அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான். 5 இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன.
6 யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான்.
7 அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான்.
8 அப்பொழுது யோனத்தான், “சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம். 9 அவர்கள், ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம். 10 ஆனால் அவர்கள், ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான்.
11 பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர். 12 கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர், “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர்.
யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான்.
13-14 யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர்.
15 வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர்.
16 பென்யமீன் நாட்டில் கிபியாவிலே சவுலின் காவல்காரர்கள், பெலிஸ்தர் பல்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். 17 சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான்.
அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.
18 சவுல் அகியாவிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை கொண்டுவா!” என்றான். (அப்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி அவர்களோடுதான் இருந்தது.) 19 சவுல் ஆசாரியனாகிய அகியாவிடம் பேசிக்கொண்டே தேவனுடைய ஆலோசனைக்குக் காத்திருந்தான். பெலிஸ்தர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் மிகுந்தன. இதனால் சவுல் பொறுமையை இழந்து, ஆசாரியனாகிய அகியாவிடம், “இது போதும்! உன் கைகளைத் தளர்த்தி ஜெபத்தை நிறுத்து!” என்றான்.
20 சவுல் தன் படையைச் சேர்த்துக்கொண்டு சண்டையிடச் சென்றான். பெலிஸ்தர்கள் குழப்பமுற்று தங்களுக்குள் வாளால் மோதிக்கொண்டனர். 21 ஏற்கெனவே சில எபிரெயர் பெலிஸ்தருக்கு அடிமைவேலை செய்து கொண்டிருந்தனர்! அவர்களும் இப்போது இஸ்ரவேல் மற்றும் சவுல் யோனத்தானோடு சேர்ந்தனர். 22 எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள். 23 எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது.
சவுல் இன்னொரு தவறு செய்கிறான்
24 அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர்.
25-26 சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. 27 ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான்.
28 ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான்.
29 யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! 30 பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.
31 அன்று இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் தோற்கடித்து, அவர்களை மிக்மாஸ் முதல் ஆயலோன் வரை துரத்தினபடியால் களைப்பாகவும், பசியாகவும் இருந்தனர். 32 அவர்கள் ஆடுகளையும், கன்றுகுட்டிகளையும் பெலிஸ்தர்களிடமிருந்து கைப்பற்றி கொன்று தின்றனர். அம்மிருகங்களின் இரத்தம் இன்னும் உறையாதிருந்தது!
33 ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான்.
சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான். 34 மேலும், “ஜனங்களிடம் போங்கள், இரத்தத்தோடு இருப்பதைச் சாப்பிடுவதால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டீர்கள். தங்கள் மாட்டையும் ஆட்டையும் என் முன் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுங்கள். இங்குதான் அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொல்லவேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யவேண்டாம். இரத்தம் உறையாதிருக்கிற இறைச்சியை உண்ணவேண்டாம்” என்றான்.
அன்று இரவு ஒவ்வொருவனும் தங்கள் மிருகங்களைக் கொண்டு வந்து அங்கே கொன்றனர். 35 பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்!
36 சவுல், “இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!” என்று சொன்னான்.
படையினர், “உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.
ஆனால் ஆசாரியனோ, “தேவனைக் கேட்போம்” என்றான்.
37 எனவே சவுல் தேவனிடம், “பெலிஸ்தர்களைத் துரத்திப் போகலாமா? அவர்களைத் தோற்கடிக்கவிடுவீரா?” என்று கேட்டான். ஆனால் தேவன் அன்று சவுலுக்கு பதில் சொல்லவில்லை.
38 எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம். 39 நான் இஸ்ரவேலை காக்கும் கர்த்தருடைய பேரில் சத்தியம் செய்திருக்கிறேன். என் மகனே பாவம் செய்தாலும் சாகடிக்கப்படுவான்” என்றான். யாரும் பதில் சொல்லவில்லை.
40 பின் அவன், “நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் மகனும் இந்தப் பக்கம் நிற்போம்” என்றான்.
வீரர்களும், “உங்கள் விருப்பம் ஐயா!” என்றனர்.
41 அப்பொழுது சவுல், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்” என்று ஜெபித்தான்.
சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள். 42 சவுல் “மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் மகனா” என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது.
43 சவுல் மகனிடம், “சொல் என்ன பாவம் செய்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு யோனத்தான், “நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?” என்று கேட்டான்.
44 ஆனால் சவுல், “என் சத்தியத்தை நான் காப்பாற்றாவிட்டால் தேவன் என்னைத் தண்டிப்பார்! நீ மரிக்கத்தான் வேண்டும்” என்றான்.
45 ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.
46 சவுல் பெலிஸ்தர்களைத் துரத்தாததால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போனார்கள்.
சவுல் இஸ்ரவேலரின் பகைவரோடு போரிடுகிறான்
47 சவுல் இஸ்ரவேலர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி அவர்களின் அரசனானான். மோவாப், அம்மோனியர், ஏதோம் எனும் சோபா அரசன், பெலிஸ்தர்களை சவுல் வென்றான். சவுல் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் இஸ்ரவேலரின் பகைவர்களையெல்லாம் வென்றான். 48 சவுல் மிகத் தைரியமானவன். இஸ்ரவேலை கைப்பற்ற முயன்ற அனைத்து பகைவரையும் வென்றான். மேலும் அமலேக்கியரையும் தோற்கடித்தான்!
49 யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா ஆகியோர் சவுலின் மகன்கள். மூத்தமகள் மேராப், இளையவள் மீகாள். 50 சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள்.
அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன். 51 கீஸ் சவுலின் தந்தை. அப்னேரின் தந்தையான நேர் ஆபியேலின் மகன்.
52 சவுல் தன் ஆயுள் முழுவதும் பெலிஸ்தரோடு போரிட்டான். தைரியமும் வீரமும் உள்ள யாரைப் பார்த்தாலும் அவனை அழைத்து வீரர்களின் சேனையில் சேர்ந்துவிடுவான். அவர்கள் அரசனுக்கு அருகாமையில் இருந்து அரசனை காப்பாற்றுவர்.
வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்
12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். 2 உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
3 தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. 5 இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.
6 நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். 7 சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! 8 மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!
9 உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். 10 சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். 11 நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். 12 உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். 13 தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள்.
14 உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். 15 மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். 16 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.
17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.
“நானே தண்டிக்கிறேன்.
நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A)
என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.
20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(B)
21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.
51 கர்த்தர் கூறுகிறார்:
“வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன்.
நான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.
2 நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன்.
அவர்கள் பாபிலோனைத் தூற்றுவார்கள்.
அந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.
நகரத்தைப் படைகள் முற்றுகையிடும்.
பயங்கரமான பேரழிவு ஏற்படும்.
3 பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள்.
அவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள்.
பாபிலோனிய இளைஞர்களுக்காக இரக்கம்கொள்ளாதே.
அவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.
4 கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்.”
5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
இஸ்ரவேல் மற்றும் யூதாவைத் தனியாகக் கணவனை இழந்த விதவைப் பெண்ணைப்போன்று விடமாட்டார்.
தேவன் அந்த ஜனங்களை விட்டுவிடமாட்டார்.
இல்லை, அந்த ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை விட்டு விலகின குற்றவாளிகள்.
அவர்கள் அவரை விட்டு விலகினார்கள்.
ஆனால் அவர் அவர்களை விட்டு விலகவில்லை.
6 பாபிலோனை விட்டு ஓடுங்கள்!
உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! தங்காதீர்கள்.
பாபிலோனின் பாவத்தால் கொல்லப்படாதீர்கள்.
பாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது!
பாபிலோன் அவளுக்கு ஏற்றதான தண்டனையைப் பெறும்.
7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது.
பாபிலோன் உலகம் முழுவதையும் குடிக்கும்படி செய்தது.
தேசங்கள் பாபிலோனின் திராட்சைரசத்தைக் குடித்தது.
எனவே அவை புத்திமயங்கிப்போயின.
8 ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும்.
அவளுக்காக அழுங்கள்!
அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்!
ஒருவேளை குணம் பெறலாம்!
9 நாம் பாபிலோன் குணமடைய முயன்றோம்.
ஆனால் அவளால் குணம் பெறமுடியாது.
எனவே, அவளை விட்டுவிடுங்கள்.
நம் சொந்த நாட்டுக்கும் நம்மில் ஒவ்வொருவரும் போகவிடுங்கள்.
பரலோகத்திலுள்ள தேவன் பாபிலோனின் தண்டனையை முடிவு செய்வார்.
பாபிலோனுக்கு என்ன நேரும் என்பதையும் அவர் முடிவு செய்வார்.
10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார்.
வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர்
செய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.
11 அம்புகளைக் கூர்மைப்படுத்துங்கள்!
கேடயங்களை வாங்குங்கள்!
கர்த்தர் மேதியருடைய அரசர்களின் ஆவியை எழுப்பினார்.
ஏனென்றால், அவர் பாபிலோனை அழிக்க விரும்புகிறார்.
பாபிலோனிய ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுப்பார்.
எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பாபிலோன் படை அழித்தது.
எனவே கர்த்தர் அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பார்.
12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள்
மேலும் காவலாளிகளைக் கொண்டு வாருங்கள்.
அவர்களின் இடங்களில் காவல்காரர்களைப் போடுங்கள்.
இரகசிய தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.
கர்த்தர், தான் திட்டமிட்டப்படிச் செய்வார்.
பாபிலோன் ஜனங்களுக்கு எதிராக எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார்.
13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய்.
நீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய்.
ஆனால் உனது முடிவு வந்திருக்கிறது.
உனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“பாபிலோனே, நான் உன்னைப் பல பகை வீரர்களால் நிரப்புவேன்.
அவர்கள் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்றிருப்பார்கள்.
உனக்கு எதிராகப் போரில் அவர்கள் வெல்வார்கள்.
அவர்கள் உனக்கு மேல் நின்றுக்கொண்டு வெற்றி முழக்கம் செய்வார்கள்.”
15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார்.
அவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது.
அவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார்.
அவர் தனது சேமிப்பு அறையிலிருந்து
காற்றைக் கொண்டுவந்தார்.
17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர்.
அவ்விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே.
எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன.
அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.
18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர்.
அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும்.
அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயனற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை.
ஜனங்கள் தேவனை உருவாக்கவில்லை,
தேவனே தன் ஜனங்களை உருவாக்கினார்.
தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
20 கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனே, நீ எனது தண்டாயுதம்.
நான் உன்னைப் பயன்படுத்தி தேசங்களை நொறுக்கினேன்.
இராஜ்யங்களை அழிக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன்.
இரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன்.
இளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
இளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
விவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
25 கர்த்தர் கூறுகிறார்:
“பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை.
நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய்.
நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன்.
நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன்.
நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள்.
ஜனங்கள் மூலைக்கல்லுக்குப் போதுமான அளவு பெரிய கல்லைக் கண்டுப்பிடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், உனது நகரமானது கற்களின் குவியலாக என்றென்றைக்கும் இருக்கும்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
27 “இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்!
அனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்!
பாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்!
அந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள்.
ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ்.
அதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு.
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.
28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய்.
மேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய்.
அவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய்.
பாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.
29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது.
கர்த்தர் தனது திட்டப்படி பாபிலோனுக்குச் செய்யும்போது தேசம் நடுங்கும்.
கர்த்தருடைய திட்டம் பாபிலோன் தேசத்தை காலியான வனாந்தரமாக்குவதே.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள்.
அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள்.
அவர்களின் பலம் போயிருக்கிறது.
அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள்.
பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.
31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான்.
அவர்கள் பாபிலோன் அரசனிடம்
அவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது
என்று தெரிவிக்கின்றனர்.
32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
சகதியான நிலம் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
பாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.”
33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது.
அறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள்.
பாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது.”
34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள்,
“பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான்.
கடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான்.
கடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான்.
நாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம்.
எங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான்.
அவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான்.
எங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு
எங்களை எறிந்துவிட்டான்.
35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது.
அவை இப்பொழுது பாபிலோனுக்கு ஏற்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”
சீயோனில் வாழ்கின்ற ஜனங்கள் அவற்றைச் சொல்வார்கள்:
“பாபிலோனிய ஜனங்கள் எங்கள் ஜனங்களைக் கொன்ற குற்றம் உள்ளவர்கள்.
இப்பொழுது அவர்கள் தாம் செய்த தவறுக்குத் தண்டிக்கப்படுகிறார்கள்”
எருசலேம் நகரம் அவற்றைச் சொல்லும்.
36 எனவே கர்த்தர் கூறுகிறார்,
“யூதா உன்னை நான் பாதுகாப்பேன்.
பாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்.
பாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன்.
நான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.
37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும்.
பாபிலோன் காட்டு நாய்கள் வாழத்தக்க இடமாகும்.
ஜனங்கள் கற்குவியலைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
அவர்கள் பாபிலோனைப் பற்றி நினைக்கும்போது தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
ஜனங்கள் எவரும் வாழாத இடமாக பாபிலோன் ஆகும்.
38 “பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள்.
அவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.
39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஒரு விருந்துக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் குடிபோதையேறினவர்களாக்குவேன்.
அவர்கள் சிரிப்பார்கள். நல்ல நேரத்தைப் பெறுவார்கள்.
பிறகு அவர்கள் என்றென்றும் தூங்குவார்கள்.
அவர்கள் என்றும் விழிக்கமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
40 “பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும்.
ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும்.
நான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.
41 “சேசாக்கு” தோற்கடிக்கப்படும்.
பூமியிலே சிறந்ததும் கர்வமுமுள்ள நாடு எவ்வாறு சிறைப் பிடிக்கப்படும்?
மற்ற தேசங்களில் உள்ள ஜனங்கள்
பாபிலோன் பாழாய்ப்போவதை கவனித்துப் பார்ப்பார்கள்.
அவர்கள் பார்க்கின்றவை அவர்களைப் பயப்படுத்தும்.
42 பாபிலோன் மீது கடல் எழும்பும்.
அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும்.
பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும்.
அது ஜனங்கள் வாழாத தேசமாகும்.
ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள்.
44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன்.
அவன் விழுங்கிய ஜனங்களை வாந்திப்பண்ணும்படி செய்வேன்.
பாபிலோனைச் சுற்றியுள்ள சுவர்கள் கீழே விழும்.
மற்ற தேசத்தார்கள் பாபிலோனுக்கு வருவதை நிறுத்துவார்கள்.
45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள்.
உங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுங்கள்.
கர்த்தருடைய பெருங்கோபத்திலிருந்து ஓடுங்கள்.
46 “எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம்.
வதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்!
இந்த ஆண்டு ஒரு வதந்தி வரும்.
அடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும்.
நாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
ஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
47 நேரம் நிச்சயம் வரும்.
பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும்.
ஏராளமாக மரித்த ஜனங்கள்
அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள்.
48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.
அவர்கள் சத்தமிடுவார்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து
பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
பூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
எனவே பாபிலோன் விழவேண்டும்!
50 வாளுக்குத் தப்பியவர்களே,
வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள்.
காத்திருக்காதீர்கள்!
நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள்.
எருசலேமை நினையுங்கள்.
51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.
நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்.
ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின்
பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்.”
52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,
நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன்.
அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன்
நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.
பாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம்.
ஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன்.
அந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.
பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.
அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார்.
பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள்.
சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.
56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.
பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள்.
அவர்களின் அம்புகள் உடைக்கப்படும்.
ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.
57 நான் பாபிலோனின் ஞானிகளையும்
முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன்.
நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும்
வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன்.
பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள்.
அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்”
அரசர் இவற்றைச் சொன்னார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும்.
அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும்.
பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள்.
ஆனால் அது உதவாது.
அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில்
சோர்ந்து போவார்கள்.
ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”
எரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான்
59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான். 60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.
61 எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள். 62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’ 63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச்சுருளை ஐபிராத்து நதியில் போடு. 64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’”
எரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.
தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.
30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.
4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”.
ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!
6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
“நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
நான் மிகவும் பயந்தேன்.
8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
என்னிடம் தயவாயிரும்!
கர்த்தாவே, எனக்கு உதவும்.
11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
2008 by World Bible Translation Center