Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 9

தேவன் ஆசாரியர்களை ஏற்றுக்கொள்ளுதல்

எட்டாவது நாள் மோசே ஆரோனையும் அவனது மகன்களையும், இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களையும் அழைத்தான். மோசே ஆரோனிடம், “பழுதற்ற ஒரு காளையையும், ஆட்டுக் கடாவையும் எடுத்துக் கொண்டு வா. பாவப் பரிகாரப் பலியாக காளையும், தகன பலியாக ஆட்டுக்கடாவும் இருக்கட்டும். கர்த்தருக்கு இந்த மிருகங்களைப் பலியாக அளிக்க வேண்டும். நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும் சமாதானப் பலியாக ஒரு காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் கொண்டு வரும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. அந்த மிருகங்களையும், எண்ணெயிலே பிசைந்த தானியக் காணிக்கையையும் கர்த்தருக்குக் கொண்டு வாருங்கள்; ஏனென்றால் இன்று உங்களுக்கு கர்த்தர் தரிசனமாவார்’ என்று சொல்” என்றான்.

எனவே, அனைத்து ஜனங்களும் மோசே கட்டளையிட்டபடியே அவர்கள் பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்துக்கு வந்து, கர்த்தரின் சந்நிதானத்தில் நின்றனர். மோசே அவர்களிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும், பின்னர் கர்த்தரின் மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.

பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலிபீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.

எனவே ஆரோன் பலிபீடத்தின் அருகில் சென்று தனது பாவப்பரிகார பலிக்காக காளையைப் பலியிட்டான். பிறகு ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தில் தன் விரலை விட்டு பலிபீடத்தின் மூலைகளில் தடவியதுடன், மீந்திருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். 10 பின் காளையின் கொழுப்பு, சிறுநீரகங்கள், கல்லீரலில் உள்ள ஜவ்வு ஆகியவற்றை எடுத்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் எரித்தான். 11 பிறகு அவன் அதன் இறைச்சியையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.

12 அடுத்து, தகன பலிக்கான மிருகத்தைக் கொன்று அதனைத் துண்டுகளாக வெட்டினான். ஆரோனின் மகன்கள் அவனிடம் அதன் இரத்தத்தை எடுத்து வந்தனர். ஆரோன் அந்த இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி தெளித்தான். 13 ஆரோனின் மகன்கள் தகன பலிக்குரிய துண்டுகளையும், தலையையும் ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் அவற்றை பலிபீடத்தின் மேல் எரித்தான். 14 ஆரோன் தகன பலிக்குரிய மிருகத்தின் உட்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவி அவற்றையும் பலிபீடத்தின் மேல் எரித்தான்.

15 பிறகு ஆரோன் ஜனங்களின் பலிகளை கொண்டு வந்து, ஜனங்களுக்கான பாவப் பரிகார பலிக்குரிய ஒரு வெள்ளாட்டைக் கொன்றான். 16 ஆரோன் தகன பலிக்குரியதையும் கொண்டு வந்து கர்த்தர் கட்டளையிட்டபடியே பலி செலுத்தினான். 17 ஆரோன் தானியக் காணிக்கையை கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் வைத்தான். அதில் ஒரு கையளவு எடுத்து காலையில் செலுத்தும் பலியோடு பலிபீடத்தின் மேல் வைத்தான்.

18 காளையையும், ஆட்டுக் கடாவையும் ஆரோன் கொன்றான். இது ஜனங்களுக்குரிய சமாதானப் பலிகள் ஆகும். ஆரோனின் மகன்கள் அவற்றின் இரத்தத்தை ஆரோனிடம் கொண்டு வந்தனர். ஆரோன் அதனைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். 19 ஆரோனின் மகன்கள் அம்மிருகங்களின் கொழுப்பு, வால், குடல்களை மூடிய ஜவ்வு, சிறுநீரகங்கள், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வு ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். 20 ஆரோனின் மகன்கள் இக்கொழுப்புப் பாகங்களை மார்புக்கண்டங்களின் மீது வைத்தனர். ஆரோன் அந்த கொழுப்புப் பகுதிகளை பலிபீடத்தின் மீது வைத்து எரித்தான். 21 மோசே கட்டளையிட்டபடியே ஆரோன் மார்புக்கண்டங்களையும் வலதுகால் தொடையையும் அசைவாட்டும் பலியாக கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டினான்.

22 பிறகு ஆரோன் தனது கைகளை ஜனங்களை நோக்கி உயர்த்தி ஆசீர்வாதம் செய்தான். பாவப் பரிகார பலி, தகனபலி, சமாதானப் பலி அனைத்தையும் ஆரோன் செலுத்தி முடித்த பிறகு பலிபீடத்திலிருந்து கீழே இறங்கி வந்தான்.

23 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே சென்றனர். பின் அவர்கள் வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தனர். பிறகு கர்த்தரின் மகிமையானது அனைத்து ஜனங்களுக்கும் காணப்பட்டது. 24 கர்த்தருடைய சந்நிதியிருந்து நெருப்பு எழும்பி வந்து பலிபீடத்தின் மேல் இருந்த தகனபலிப் பொருட்களையும் கொழுப்பையும் எரித்தது. ஜனங்கள் இதனைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். தங்கள் முகங்களைத் தரையை நோக்கி தாழ்த்தினர்.

சங்கீதம் 10

10 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?
    தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.
    பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாக கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.
    தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.
    அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. [a]
    தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.
    அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.
    அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.
    ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள்.
    ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.
    ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.
    நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!”
    என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.

12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!
    தேவனே, அத்தீயோரைத் தண்டியும்!
    ஏழைகளை மறவாதேயும்!

13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.
    ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.
    அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்!
தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள்.
    கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர்.
    எனவே அவர்களுக்கு உதவும்!

15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
    அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
    அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
    துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
    தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.

நீதிமொழிகள் 24

— 19 —

24 தீயவர்களைப் பார்த்து நீ பொறாமைப்படாதே. உனது காலத்தை அவர்களோடு வீணாக்காதே. அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப்பற்றியே பேசுகிறார்கள்.

— 20 —

ஞானத்தினாலும் புரிந்துகொள்தலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது. அறிவு அறைகளை அரிய அழகுள்ள திரவியங்களால் நிரப்புகிறது.

— 21 —

ஞானம் ஒருவனை மிகவும் வலிமையுள்ளவனாக்கும். அறிவு ஆற்றலைத் தருகிறது. நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும்.

— 22 —

முட்டாள்களால் ஞானத்தை உணர்ந்து கொள்ளமுடியாது. முக்கியமானவற்றைப்பற்றி ஜனங்கள் கலந்தாலோசிக்கும்போது முட்டாள்களால் எதுவும் சொல்ல முடியாது.

— 23 —

நீ எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீமை செய்வதைப்பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தால், தொந்தரவுகளை உருவாக்குபவன் என்று ஜனங்கள் உன்னை நினைத்துக்கொள்வார்கள். நீ சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள். அறிவற்றவன் செய்யத் திட்டமிடுபவை அனைத்தும் பாவத்திலேயே முடிகின்றன. மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைப்பவனை ஜனங்கள் வெறுப்பார்கள்.

— 24 —

10 துன்பக்காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்.

— 25 —

11 ஜனங்கள் ஒருவனைக்கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும். 12 “இது எனது வேலை இல்லை” என்று கூறாதே. அனைத்தையும் கர்த்தர் அறிவார். நீ எதற்காக அவற்றைச் செய்கிறாய் என்பதையும் அவர் அறிவார். கர்த்தர் உன்னைக் கவனித்து அறிகிறார். உனக்கு தகுந்த வெகுமதிகளை கர்த்தர் தருவார்.

— 26 —

13 என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது. 14 இதுபோலவே ஞானமானது உன் ஆத்துமாவுக்கு நல்லது. உன்னிடம் ஞானம் இருக்குமானால் உன்னிடம் நம்பிக்கையும் இருக்கும். உன் நம்பிக்கைக்கு முடிவிருக்காது.

— 27 —

15 நல்லவனிடமிருந்து பொருளைத் திருடும் அல்லது அவன் வீட்டையே அபகரிக்கும் திருடனைப்போல நீ இருக்காதே. 16 நல்லவன் ஏழுமுறை விழுந்தாலும் மீண்டும் எழுந்துவிடுவான். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் துன்பங்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.

— 28 —

17 உன் எதிரிக்குத் துன்பம் வரும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அவன் விழும்போதும் மகிழ்ச்சி அடையாதே. 18 நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காக கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார்.

— 29 —

19 தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே. 20 தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும்.

— 30 —

21 மகனே! கர்த்தருக்கும் அரசனுக்கும் மரியாதை செய். அவர்களுக்கு எதிரானவர்களோடு சேராதே. 22 ஏனென்றால் அத்தகையவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள். தேவனும் அரசனும் தம் எதிரிகளுக்கு எவ்வளவு துன்பத்தைக்கொடுப்பார்கள் என்பது உனக்குத் தெரியாது.

மேலும் ஞானமொழிகள்

23 இவை ஞானம் உள்ளவர்களின் வார்த்தைகள்.

ஒரு நீதிபதி நேர்மையாக இருக்கவேண்டும். ஒருவன் தெரிந்தவன் என்பதற்காக அவனுக்கு சார்பாக இருக்கக்கூடாது. 24 ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள். 25 ஆனால் ஒரு நீதிபதி தவறு செய்தவனைத் தண்டித்தால் அதற்காக ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26 ஒரு நேர்மையான பதில் ஜனங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அது உதடுகளில் இடுகிற முத்தத்தைப் போன்றது.

27 உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.

28 சரியான காரணம் இல்லாமல் ஒருவனுக்கு எதிராகப் பேசாதே. பொய் சொல்லாதே.

29 “அவன் என்னைக் காயப்படுத்தினான். எனவே அதுபோல் நானும் அவனைக் காயப்படுத்துவேன். அவன் எனக்குச் செய்ததற்காக நான் அவனைத் தண்டிப்பேன்” என்று சொல்லாதே.

30 சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். 31 அனைத்து இடங்களிலும் முட்செடிகள் வளர்ந்திருந்தன. தரையில் பயனற்ற புதர்களும் வளர்ந்திருந்தன. தோட்டத்தைச் சுற்றுலுமிருந்த சுவர்கள் உடைந்து விழுந்துகிடந்தன. 32 நான் இவற்றைப் பார்த்து அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பின் நான் இவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். 33 ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா? 34 இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனதுபோல் இருக்கும்.

1 தெசலோனிக்கேயர் 3

நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.

ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 10 இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.

11 பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 12 உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 13 உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center