Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 27

வாக்குத்தத்தங்கள் முக்கியமானவை

27 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும். இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு ஆணின் விலை ஐம்பது வெள்ளிச் சேக்கலாகும். (நீங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமான பரிசுத்த இடத்தின் சேக்கலின் அளவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.) இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். ஐந்து வயது முதல் இருபது வயதுவரை உடைய ஒரு ஆண்மகனின் விலை இருபது வெள்ளிச் சேக்கலாகும். ஐந்து முதல் வயது இருபது வயதுவரை உடைய ஒரு பெண்ணின் விலை பத்து வெள்ளிச் சேக்கலாகும். ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண் குழந்தையின் விலை ஐந்து சேக்கலாகும். ஒரு பெண் குழந்தையின் விலை மூன்று சேக்கலாகும். அறுபதும் அதற்கும் மேலும் ஆன ஒரு முதியவனின் விலை பதினைந்து சேக்கலாகும். இது போன்ற முதிய பெண்ணின் விலை பத்து சேக்கலாகும்.

“ஒருவேளை அவன் அப்பணத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு ஏழையாக இருந்தால் அவனை ஆசாரியனிடம் அழைத்துவர வேண்டும். அவன் செலுத்த வேண்டிய தொகையைப்பற்றி ஆசாரியனே முடிவு செய்வான்.

கர்த்தருக்கான காணிக்கைகள்

“கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும். 10 அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும்.

11 “சில மிருகங்களை கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 12 ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும். 13 ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

வீட்டின் மதிப்புத் தொகை

14 “ஒருவன் தனது வீட்டை கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும். 15 ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.

சொத்தின் மதிப்பு

16 “ஒருவன் தனது வயல்களின் ஒரு பாகத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் அதன் விலையானது அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒருகலம் [a] வாற் கோதுமை, விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்பட வேண்டும். 17 ஒருவேளை வயலை யூபிலி ஆண்டில் தேவனுக்குக் கொடுத்தால், அதன் விலையை ஆசாரியன் தீர்மானிப்பான். 18 அவன் தனது வயலை யூபிலி ஆண்டுக்குப் பிறகு கொடுத்தால் ஆசாரியன் அதன் விலையைச் சரியாகக் கணக்கிடவேண்டும். அவன் அடுத்த யூபிலிக்கான ஆண்டு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விலையைச் சொல்லுவான். 19 வயலைக் கொடுத்தவன் திரும்பப்பெற வேண்டும் என்று விரும்பினால் வயலின் விலையோடு ஐந்தில் ஒரு பங்கு மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பிறகு அது அவனுக்கு உரிமை உடையதாகும். 20 ஒருவேளை அவன் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாவிட்டால், அவ்வயல் தொடர்ந்து ஆசாரியர்களுக்கு உரியதாகும். ஒருவேளை அந்த வயல் வேறு யாருக்கேனும் விற்கப்பட்டால், அவன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. 21 எனவே வயலுக்குச் சொந்தக்காரன் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், யூபிலி ஆண்டு வந்தாலும் அது கர்த்தருக்கு பரிசுத்தமானதாக விளங்கும், என்றென்றும் ஆசாரியர்களுக்கு உரிமை உடையதாக இருக்கும். அது கர்த்தருக்கே முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலம்போல் இருக்கும்.

22 “ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம். 23 அப்போது ஆசாரியன் யூபிலி ஆண்டுகுரிய ஆண்டுகளைக் கணக்கிட்டு அதன் விலையை முடிவு செய்வான். அது கர்த்தருக்கு உரியதாக இருக்கும். 24 பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.

25 “இதன் விலையை முடிவு செய்யும்போது அதிகாரப்பூர்வமான அளவை பயன்படுத்த வேண்டும். ஒரு சேக்கல் என்பது இருபது கேராவாகும்.

மிருகங்களின் மதிப்புத் தொகை

26 “ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது. 27 ஜனங்கள் முதலில் பிறந்த மிருகங்களை கர்த்தருக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அது தீட்டுள்ளதாக இருந்தால் அவன் அதனைத் திருப்பி வாங்கிக்கொள்ளவேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். அவன் அதனைத் திருப்ப வாங்கிக்கொள்ளாவிட்டால் ஆசாரியன்தான் விரும்புகிற விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிட வேண்டும்.

சிறப்புக் காணிக்கைகள்

28 “ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளில் சில சிறப்பான அன்பளிப்புகள் [b] உள்ளன. இவை கர்த்தருக்கே உரியவை. அவற்றைக் கொடுத்தவன் திருப்பி வாங்கிக்கொள்ளவும், விற்கவும் முடியாது. இவை கர்த்தருக்கே சொந்தமானவை. காணிக்கைகளில் மனிதர்கள், மிருகங்கள், குடும்பச் சொத்திலுள்ள வயல்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 29 சிறப்புக் காணிக்கையாக மனிதனைக் கொடுத்தால், அவனைத் திரும்ப விலைக்கு வாங்க முடியாது. அவன் கொல்லப்பட வேண்டும்.

30 “விளைச்சலில் பத்தில் ஒருபாகம் கர்த்தருக்கு உரியது. வயல்களில் விளைப வைகளிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கே உரியது. 31 எனவே எவனாவது இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதன் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

32 “ஒருவனது மாடு அல்லது ஆட்டு மந்தையில் பத்தில் ஒரு பங்கான மிருகங்கள் கர்த்தருக்கு உரியவை. 33 கர்த்தருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மிருகங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்காக அவன் வேறு மிருகங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவன் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பினால் இரண்டு மிருகங்களுமே கர்த்தருக்கு உரியதாகும். இவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

34 இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காக சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.

சங்கீதம் 34

தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
    என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
    என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
    அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
    அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
உதவிக்காக தேவனை நாடுங்கள்.
    அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
    கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
    என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
    கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
    அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
    அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.

17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
    அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
    உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
    கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
    அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
    கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
    நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
    அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

பிரசங்கி 10

10 மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.

ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.

எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம்.

இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள். முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக்கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர். பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.

ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக்கொண்டவை

குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான். பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.

10 ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்.

11 ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.

12 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும்.
    ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும்.

13 முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான். 14 ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.

15 முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான்.
    எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.

உழைப்பின் மதிப்பு

16 ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான். 17 அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.

18 ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்.
    வீட்டுக்கூரை விழுந்துவிடும்.

19 ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.

வீண் பேச்சு

20 அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.

தீத்து 2

உண்மையான போதனையைப் பின்பற்றுதல்

பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.

அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.

அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. 10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.

11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. 12 தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது. 13 நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார். 14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார்.

15 மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center