M’Cheyne Bible Reading Plan
தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது
19 நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் அரசனாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது மகன் அரசன் ஆனான். 2 பிறகு தாவீது, “நாகாஸ் என்னிடம் அன்பாய் இருந்தான், எனவே நான் அவனது மகன் ஆனூனிடம் அன்பாய் இருப்பேன்” என்றான். அதனால் தாவீது தூதுவர்களை ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பினான். தாவீதின் தூதுவர்கள் அம்மோன் நாட்டிற்கு ஆனூனுக்கு ஆறுதல் சொல்லச் சென்றனர்.
3 ஆனால் அம்மோனிய தலைவர்கள் ஆனூனிடம், “முட்டாளாகாதே, தாவீது உண்மையிலேயே உனக்கு ஆறுதல் சொல்லவும், மரித்துப்போன உன் தந்தையைக் கௌரவப்படுத்தவும் தூதுவர்களை அனுப்பவில்லை! அவன் உன்னையும், உன் நாட்டையும் உளவறியவே தூதுவரை அனுப்பியுள்ளான். அவன் உண்மையில் உன் நாட்டை அழிக்கவே விரும்புகிறான்!” என்றனர். 4 எனவே, ஆனூன் தாவீதின் தூதுவர்களைக் கைதுசெய்து அவர்களது தாடியை வெட்டினான். இடுப்புப் பக்கத்தில் அவர்களின் ஆடையையும் வெட்டினான். பிறகு வெளியே துரத்திவிட்டான்.
5 தாவீதின் ஆட்களுக்கு வீட்டிற்குத் திரும்பிப் போக அவமானமாக இருந்தது. சிலர் தாவீதிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டதைச் சொன்னார்கள். எனவே தாவீது தன் ஆட்களுக்கு, “உங்களது தாடி முழுவதும் வளரும்வரை எரிகோவிலேயே தங்கியிருங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு வரலாம்” என்று செய்தி அனுப்பினான்.
6 அம்மோனியர்கள் தமது செயல்களாலேயே தாம் தாவீதிற்குப் பகையானதைக் கண்டனர். பின் ஆனூனும் அம்மோனியர்களும் 75,000 பவுண்டு வெள்ளியை செல விட்டு மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் இரதமோட்டிகளையும் வாங்கினார்கள். அவர்கள் இரதங்களையும் இரதமோட்டிகளையும் மாக்கா, சோபா எனும் சீரியரின் நாடுகளிலிருந்தும் பெற்றனர். 7 அம்மோனியர்கள் 32,000 இரதங்களை வாங்கினார்கள். அவர்கள் மாக்காவின் அரசுக்கு அதனுடைய படைகள் வந்து உதவுவதற்காகப் பணம் செலுத்தினர். மாக்காவின் அரசின் ஆட்களும் வந்து மேதேபாவுக்கு அருகில் பாசறை அமைத்தனர். அம்மோனியர்கள் தம் நகரங்களை விட்டு வெளியே வந்து போருக்கு தயாரானார்கள்.
8 அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான். 9 அம்மோனியர்கள் வெளியே வந்து போருக்குத் தயாரானார்கள். அவர்கள் நகர வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள். உதவி செய்வதற்கு வந்த அரசர்களும் வயல்வெளிகளில் தனியாகத் தங்கியிருந்தார்கள்.
10 யோவாப், தனக்கு எதிராக இரண்டு படைகள் போர்ச் செய்ய தயாராக இருப்பதைக் கண்டான். ஒரு படை தனக்கு முன்பும் இன்னொரு படை தனக்குப் பின்னாலும் இருப்பதை அறிந்தான். உடனே தமது படையில் உள்ள சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை ஆராம் படையோடு போரிட அனுப்பினான். 11 மீதமிருந்த இஸ்ரவேலியப் படையை யோவாப் அபிசாயின் தலைமையின் கீழ் அமைத்தான். அபிசாயி அவனது சகோதரன். அவ்வீரர்கள் அம்மோனிய படையோடு போரிடச் சென்றனர். 12 யோவாப் அபிசாயிடம், “ஆராமிலுள்ள படைகள் என்னைவிட பலமானதாக இருந்தால், நீ வந்து உதவவேண்டும். ஆனால், அம்மோனியப் படைகள் உன்னைவிடப் பலமானதாக இருந்தால், நான் வந்து உனக்கு உதவுவேன். 13 நாம் நமது ஜனங்களுக்காகவும் தேவனுடைய நகரங்களுக்காகவும் போராடும்போது பலமாகவும், தைரியமாகவும் இருக்கவேண்டும். தனக்குச் சரி என்று எண்ணுவதைக் கர்த்தர் செய்வார்!” என்றான்.
14 யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம் படை தோற்று ஓடியது. 15 அம்மோனியரின் படை ஆராம் படை ஓடுவதைப் பார்த்து, தானும் ஓடியது. அது அபிசாயிடமும் அவனது படைகளிடமும் இருந்து ஓடியது. அம்மோனியர்கள் தம் நகரங்களுக்கும் யோவாப் எருசலேமிற்கும் திரும்பிச் சென்றனர்.
16 ஆராமிய தலைவர்கள், இஸ்ரவேலரால் தாம் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தனர். எனவே, அவர்கள் உதவிக்காகத் தூதுவர்களை ஐபிராத்து நதிக்கு கிழக்குப்புறத்தில் வசிப்பவர்களிடம் அனுப்பினார்கள். ஆராமில் இருந்து வந்த ஆதாரேசரின் படைத் தலைவன் சோப்பாக். அவனும் மற்ற ஆராமிய வீரர்களை வழிநடத்தினான்.
17 ஆராமியர்கள் மீண்டும் போருக்குத் தயாராகக் கூடுவதை தாவீது கேள்விப்பட்டான். எனவே அவனும் எல்லா இஸ்ரவேலர்களையும் கூட்டினான். யோர்தான் நதியைக் கடந்து தாவீது வழிநடத்தினான். அவர்கள் ஆராமியர்களுக்கு நேருக்கு நேராக வந்தனர். தாவீது போருக்குத் தயாராகி ஆராமியர்களைத் தாக்கினான். 18 ஆராமியர்கள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடினார்கள். தாவீதும் அவனது படைகளும் 7,000 ஆராமிய இரத மோட்டிகளையும் 40,000 ஆராமிய வீரர்களையும் கொன்றனர். தாவீதின் படை ஆராமியப் படையின் தளபதியான சோபாக்கையும் கொன்றது.
19 ஆதாரேசரின் அதிகாரிகள், தாம் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்படுவது அறிந்ததும் தாவீதோடு சமாதானம் செய்துகொண்டனர். அவர்கள் தாவீதின் வேலைக்காரர்கள் ஆனார்கள். எனவே ஆராமியர்கள் அம்மோனியர்களுக்கு மீண்டும் உதவ மறுத்துவிட்டனர்.
யோவாப் அம்மோனியர்களை அழிக்கிறான்
20 அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக அரசர்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.
2 தாவீது அம்மோனிய அரசர்களின் கிரீடத்தை எடுத்தான். அந்தத் தங்க மகுடம் 75 பவுண்டு இருந்தது. அதில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அம்மகுடம் தாவீதின் தலையில் சூட்டப்பட்டது. பிறகு தாவீது ரப்பா நகரிலிருந்து மேலும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டான். 3 தாவீது ரப்பாவிலிருந்து ஜனங்களைக் கூட்டிவந்து அவர்களைப் பலவந்தமாக ரம்பம், இரும்பு, ஊசிகள், கோடரி போன்றவற்றால் வேலைசெய்ய வைத்தான். தாவீது இதனை அனைத்து அம்மோனிய நகரங்களின் ஜனங்களுக்கும் விதித்தான். பிறகு தாவீதும், அவனது படையும் எருசலேமுக்குத் திரும்பியது.
இராட்சத பெலிஸ்தர் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்
4 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத மகனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.
5 இன்னொரு தடவை, மீண்டும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களோடு போரிட்டனர். யாவீரின் மகன் எல்க்கானான். இவன் லாகேமியைக் கொன்றான். லாகெமி கோலியாத்தின் சகோதரன். கோலியாத் காத் நகரைச் சேர்ந்தவன். லாகேமியின் ஈட்டி மிகப் பெரிதாகவும் பலமானதாகவும் இருந்தது. அது தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் போல் இருந்தது.
6 பிறகு இஸ்ரவேலர் பெலிஸ்தர்களோடு காத் நகரில் இன்னொரு தடவை போரிட்டனர். இந்நகரில் ஒரு பெரிய மனிதன் இருந்தான். அவனுக்கு 24 கைவிரல்களும் கால் விரல்களும் இருந்தன. அவனுக்கு ஒவ்வொரு கையிலும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருந்தன. எனவே அவன் இராட்சதர்களின் மகன்தான். 7 அவன் இஸ்ரவேலரைக் கேலிச் செய்தபோது, யோனத்தான் அவனைக் கொன்றான். யோனத்தான் சிமேயாவின் மகன். சிமேயா தாவீதின் சகோதரன் ஆவான்.
8 பெலிஸ்தர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களெங்கும் அந்நியர்களாகச் சிதறி வாழ்ந்துகொண்டிருக்கிற தேவனுடைய மக்களுக்கு: 2 பிதாவாகிய தேவன் நெடுங்காலத்துக்கு முன்பே செய்த திட்டப்படி தேவனுடைய மக்களாக இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். ஆவியானவரின் சேவை வழியாக அவருக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்பட்டீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படியவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்பட்டு பரிசுத்தமடையவும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கிருபையையும், சமாதானத்தையும் தேவன் உங்களுக்கு மென்மேலும் வழங்குவாராக.
வாழும் நம்பிக்கை
3 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவன் தம் இரக்கத்தால் அழிவில்லாத ஒரு நம்பிக்கையை நாம் அடையும்பொருட்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குப் புது வாழ்வையளித்தார். 4 இப்பொழுது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தில் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கின்றோம். அந்த ஆசீர்வாதங்கள் அழிவற்றது; அழிக்கப்பட முடியாதது; அதன் அழகு மாறாதது.
5 இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உரியவை. இறுதி நேரத்தில் தம் வல்லமையை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிற இரட்சிப்புக்காக விசுவாசத்தின் மூலம் தேவனுடைய வல்லமையால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள். 6 இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். 7 ஏன் இந்தத் துன்பங்கள் நிகழ்கின்றன? உங்கள் விசுவாசம் பரிசுத்தமானது என்று நிரூபிப்பதற்கேயாகும். இந்த விசுவாசத்தின் பரிசுத்தம் பொன்னைக் காட்டிலும் சிறந்தது. பொன்னின் சுத்தத் தன்மை நெருப்பால் சோதித்தறியப்படுகிறது. ஆனால் பொன் அழிவுறும். இயேசு கிறிஸ்து வரும்போது, உங்கள் விசுவாசத்தின் பரிசுத்தமானது உங்களுக்கு கனத்தையும், மகிமையையும், புகழ்ச்சியையும் கொடுக்கும்.
8 நீங்கள் கிறிஸ்துவைப் பார்த்ததில்லை. அப்படியிருந்தும் அவரை நேசிக்கிறீர்கள். நீங்கள் இப்போது அவரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவரை விசுவாசிக்கிறீர்கள். சொல்லமுடியாத சந்தோஷத்தால் உங்கள் மனம் நிரம்பும். அச்சந்தோஷம் மகிமை மிகுந்தது. 9 உங்கள் விசுவாசம் ஒரு குறிக்கோளை உடையது. இறுதியில் உங்கள் ஆத்தும இரட்சிப்பாகிய நற்பலனைப் பெறுவீர்கள்.
10 உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள். 11 இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள்.
12 அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பு
13 எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். 14 கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள். 15 உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். 16 வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
17 தேவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவரை பிதா என்று அழையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வேலையையும் சமமாக நோக்கி தேவன் பாரபட்சம் இன்றி நியாயம் வழங்குகிறார். எனவே நீங்கள் இவ்வுலகில் வாழும்போது தேவனிடம் பயத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டும். 18 நீங்கள் கடந்த காலத்தில் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தீர்கள். உங்கள் முன்னோர்கள் மூலமாக அவ்வாழ்க்கை முறையை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அப்படிப்பட்ட வாழ்விலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என அறிவீர்கள். இந்த இரட்சிப்பு அழியும் பொருட்களாகிய பொன், வெள்ளி போன்றவற்றால் அல்ல, 19 குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும். 20 உலகம் உருவாக்கப்படும் முன்னே கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உங்கள் பயனுக்காக இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட்டார். 21 நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனை விசுவாசிக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவை மரணத்தினின்று எழும்பி அவருக்கு மகிமையை அளித்தார். எனவே உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனில் உள்ளன.
22 உண்மைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்களை நீங்களே பரிசுத்தமுடையோராக ஆக்கிக்கொண்டீர்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான சகோதர அன்பைக் காட்டமுடியும். எனவே இப்பொழுது பரிசுத்தமான இதயத்தோடு ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். 23 நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பது அழியத்தக்க விதையில் இருந்து அல்ல, அழிவேயற்ற விதையின் மூலம் ஆகும். எப்போதும் தொடரும் தேவனுடைய அழிவில்லாத விதையாகிய வசனங்களினால் மீண்டும் பிறந்துள்ளீர்கள். 24 வேதவாக்கியங்கள்,
“எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள்.
புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும்.
புல் உலர்ந்து போகிறது.
பூக்கள் உதிர்கின்றன.
25 ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது” (A)
என்று சொல்கிறது. இந்த வார்த்தையே உங்களுக்குச் சொல்லப்பட்டது.
தேவன் அழைக்கிறார், யோனா கீழ்ப்படிகிறான்
3 பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், 2 “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.
3 எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.
4 யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
5 நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
6 நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், 7 அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.
அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:
கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8 ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். 9 பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.
10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
இயேசுவின் குழுவினர்
8 மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். 2 சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. 3 இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர்.
விதைத்தலின் உவமை(A)
4 கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார்.
5 “ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. 6 சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. 7 முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.”
இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார்.
9 இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.
10 இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள்,
ஆனால் எதையும் காணமாட்டார்கள்.
அவர்கள் கவனிப்பார்கள்:
ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’”(B)
என்றார்.
உவமையின் விளக்கம்(C)
11 “இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். 12 பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. 13 பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர்.
14 “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. 15 நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள்.
கவனிக்கும் முறை(D)
16 “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். 17 மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். 18 எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார்.
இயேசுவின் குடும்பத்தினர்(E)
19 இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20 ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.
21 இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.
இயேசுவைப் பின்பற்றினோர் அவரது ஆற்றலைக் காணுதல்(F)
22 ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர். 23 படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். 24 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினர். அவர்கள், “ஐயா, ஐயா, நாம் மூழ்கிவிடப் போகிறோம்” என்றனர்.
இயேசு எழுந்தார். அவர் காற்றுக்கும், அலைகளுக்கும் கட்டளையிட்டார். உடனே காற்று ஓய்ந்தது. ஏரி அமைதியுற்றது. 25 இயேசு தன்னோடு இருந்தவர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார்.
இயேசுவைப் பின்பற்றி வந்தவர்களோ அச்சமும் ஆச்சரியமும் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “இம்மனிதர் எப்படிப்பட்டவர்? காற்றுக்கும், நீருக்கும் கட்டளையிட அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறிக் கொண்டனர்.
பிசாசு பிடித்த மனிதன்(G)
26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். 27 இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான்.
28-29 பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.
30 இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) 31 நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. 32 அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். 33 பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.
34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். 35 நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள்.
36 நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். 37 இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். 38 இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான்.
ஆனால் இயேசு அந்த மனிதனிடம், 39 “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.
இறந்த பெண் உயிரடைதலும் நோயாளி குணப்படுதலும்(H)
40 இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். 41 யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். 42 யவீருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். 43 இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. 44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 45 அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.
46 அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். 47 தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். 48 இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.
49 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் மகள் இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான்.
50 இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் மகள் குணம் பெறுவாள்” என்றார்.
51 இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. 52 எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார்.
53 அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். 54 ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். 55 அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.
2008 by World Bible Translation Center