Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 17

இஸ்ரவேலருக்கு கோலியாத்தின் சவால்

17 பெலிஸ்தர் போரிடும் பொருட்டு படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது.

சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர். பெலிஸ்தியர் மலையின் மேல் இருந்தனர். அடுத்த மலையில் இஸ்ரவேலர் இருந்தனர். இடையில் பள்ளத்தாக்கு இருந்தது.

பெலிஸ்தியரிடம் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் காத் என்னும் ஊரினன். 9 அடி உயரமாக இருந்தான். ஒரு வெண்கல கிரீடமும், போர்க் கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாயிருந்தது. அவன் கால்களில் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கல கேடகத்தையும் அணிந்திருந்தான். அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது. கோலியாத்தின் கேடயம் சுமந்த வீரன், அவனுக்கு முன்னால் நடப்பான்.

தினந்தோறும் அவன் வெளியே வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, சத்தமாக சண்டைக்கு சவால்விடுவான். அவன், “உங்களுடைய எல்லா வீரர்களும் போருக்குத் தயாராக ஏன் அணிவகுத்து நிற்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் சவுலின் வேலைக்காரர்கள். நான் பெலிஸ்தன். யாரேனும் ஒருவனைத் தேர்தெடுத்து என்னோடு சண்டையிட அனுப்புங்கள். அவன் என்னைக் கொன்றுவிட்டால் நாங்கள் (பெலிஸ்தர்) அனைவரும் உங்களது அடிமை. நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமை! நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றான்.

10 மேலும் அவன், “நான் இன்று இஸ்ரவேல் சேனையை கேலிச்செய்தேன்! உங்களில் ஒருவனுக்குத் தைரியமிருந்தால் என்னிடம் அனுப்பி சண்டையிட்டுப் பாருங்கள்!” என்றான்.

11 சவுலும் அவனது வீரர்களும் கோலியாத் சொன்னதைக் கேட்டு மிகவும் நடுங்கினார்கள்.

தாவீது போர் முனைக்குச் செல்கிறான்

12 தாவீது ஈசாயின் மகன், யூதாவிலுள்ள பெத்லேகேமில் எப்பிராத்தா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈசாயிக்கு 8 மகன்கள். சவுலின் காலத்தில் ஈசாய் முதிர் வயதாக இருந்தான். 13 ஈசாயின் 3 பெரிய மகன்கள் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். எலியாப் முதல் மகன். அபினதாப் இரண்டாவது மகன். சம்மா மூன்றவாது மகன். 14 தாவீது கடைசி மகன். பெரிய மூன்று மகன்களும் சவுலின் படையில் இருந்தனர். 15 தாவீது சவுலை விட்டு விலகி அவ்வப்போது பெத்லேகேமில் தன் தந்தையின் ஆடுகளைக் மேய்க்கப் போவான்.

16 கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.

17 ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. 18 இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! 19 ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான்.

20 அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள். 21 இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் அணிவகுத்து போருக்குத் தயாரானார்கள்.

22 தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். 23 தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான்.

24 அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. 25 இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும் மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் அரசன் அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள்.

26 தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் [a] சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான்.

27 அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். 28 தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.

29 அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். 30 தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள்.

31 தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். 32 தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான்.

33 “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான்.

34 ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, 35 அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். 36 சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். 37 கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.

சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். 38 சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். 39 தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை.

தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். 40 தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

தாவீது கோலியாத்தைக் கொல்கிறான்

41 கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். 42 கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். 43 “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். 44 கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான்.

45 தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். 46 இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! 47 ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.

48 கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து நெருங்கி வந்தான். தாவீதும் நெருங்கி ஓடி,

49 தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.

50 இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. 51 அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான்.

மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள். 52 இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள். சாராயீமின் சாலையோரங்களில் காத் மற்றும் எக்ரோன்வரை பலரைக் கொன்று குவித்தனர். 53 பின்னர் பெலிஸ்தியரின் முகாமிற்குள் சென்று பொருட்களை எடுத்து வந்தனர்.

54 தாவீது கோவியாத்தின் தலையை எருசலேமிற்கு எடுத்துச் சென்றான். கோலியாத்தின் ஆயுதங்களை தன் சொந்த கூடாரத்தில் வைத்தான்.

சவுல் தாவீதுக்கு அஞ்சத் தொடங்குகிறான்

55 தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், “இவனது தந்தை யார்?” எனக் கேட்டான்.

அப்னேரும், “எனக்குத் தெரியாது ஐயா” என்றான்.

56 சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான்.

57 தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

58 சவுல் அவனிடம், “உன் தந்தை யார்?” எனக் கேட்டான்.

அதற்கு தாவீது, “நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் மகன்” என்றான்.

ரோமர் 15

15 விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும். கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” [a] என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது. வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது:

“யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
    உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.” (A)

10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” (B)

11 மேலும் வேத வாக்கியம் கூறுகிறது:

“யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள்.
    அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.” (C)

12 ஏசாயா இப்படி கூறுகிறார்:

“ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார்.
    யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார்.
    அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.” (D)

13 தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்.

தன் பணியைப் பற்றிப் பவுல்

14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.

17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,

21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
    அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” (E)

என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.

ரோம் செல்லப் பவுலின் திட்டம்

22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.

23 நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். 24 நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம்.

25 தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன். 26 எருசலேமிலுள்ள தேவனுடைய மக்களில் சிலர் வறுமையில் உள்ளனர். மக்கதோனியா, அகாயா போன்ற நாடுகளில் உள்ள விசுவாசிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களே எருசலேமில் உள்ள விசுவாசிகளுக்கு உதவிசெய்து வருகின்றனர். 27 இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே. 28 எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன்.

வழியில் உங்களைப் பார்ப்பேன். 29 நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன்.

30 சகோதர சகோதரிகளே! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் அன்பின் மூலமும் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது எனது போராட்டங்களில் பங்கு கொள்ளுங்கள். தேவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நினைவு கொள்ளுங்கள். 31 யூதேயாவிலுள்ள நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பிரார்த்தனை செய்யுங்கள். எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு நான் செய்யப்போகும் உதவி அவர்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படவும் பிரார்த்தனை செய்யுங்கள். 32 பிறகு, தேவனுடைய விருப்பம் இருந்தால் நான் உங்களிடம் வருவேன். நான் மகிழ்ச்சியோடு வருவேன். உங்களோடு ஓய்வுகொள்ளுவேன். 33 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்.

புலம்பல் 2

கர்த்தர் எருசலேமை அழித்தார்.

கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார்.
    அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார்.
    கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை.
கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார்.
    அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார்.
அவர் அவரது கோபத்தில் யூதா மகளின் [a]
    கோட்டைகளை அழித்தார்.
கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும்
    அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார்.
    அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார்.
கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார்.
    அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார்.
பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார்.
    அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார்.
அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற
    நெருப்பைப் போன்று இருந்தார்.
கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார்.
    அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார்.
அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார்.
    கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார்.
கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார்.
    அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார்.

கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார்.
    அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார்.
அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்.
    அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார்.
அவர் யூதா மகளின் மரித்த ஜனங்களுக்காக
    மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார்.

கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை
    ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார்.
ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக
    இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார்.
கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும்,
    ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார்.
கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார்.
    அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார்.
    அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார்.
பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல்
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர்.
சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார்.
    அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து,
அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார்.
    அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை.
எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார்.
    அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின.

எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன.
    அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார்.
அவரது அரசன் மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள்.
    அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை.
எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட
    கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை.

10 சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர்.
    அவர்கள் தரையில் அமர்ந்து மௌனமாக இருக்கிறார்கள்.
தம் தலையில் அவர்கள் தூசியைப் போட்டனர்.
    அவர்கள் கோணியைப் போட்டுக்கொள்கிறார்கள்.
எருசலேமின் இளம்பெண்கள் துக்கத்தில்
    தலைகளைக் குனிந்து தரையைப் பார்க்கின்றனர்.

11 எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின!
    எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டதுபோன்று உணர்கின்றது!
    எனது ஜனங்களின் அழிவைக்கண்டு நான் இவ்வாறு உணர்கிறேன்.
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது வீதிகளின் மூலைகளிலும்
    மயக்கமடைந்து கிடக்கின்றனர்.
12 அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம்,
    “அப்பமும் திராட்சைரசமும் எங்கே?” எனக் கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர்.
13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்?
    சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்?
நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்?
    உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
    எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.

14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள்.
    ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின.
அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை.
    அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை.
அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர்.
    ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள்.

15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள்
    உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள்.
அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து
    தலையாட்டுகிறார்கள்.
அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’
    ‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?”
    என்று கேட்கிறார்கள்.

16 உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்.
    அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள்.
அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்!
    நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம்.
    நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள்.

17 கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார்.
    அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார்.
    நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார்.
அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை.
    உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
    அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார்.

18 கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு!
    சீயோன் மகளின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு!
    இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே!
உனது கண்ணின் கறுப்பு விழி
    சும்மா இருக்கும்படிச் செய்யாதே!

19 எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு!
    உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று!
    கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று!
கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு.
    உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள்.
    பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள்.
    நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

20 கர்த்தாவே, என்னைப் பாரும்!
    இந்த வழியில் யாரை நீர் நடத்தியிருக்கிறீர் என்று பாரும்!
என்னை இக்கேள்வியைக் கேட்கவிடும்; பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளையே தின்ன வேண்டுமா?
    பெண்கள் தாம் கவனித்துக் கொள்ளவேண்டிய பிள்ளைகளையே தின்னவேண்டுமா?
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியரும் தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டுமா?
21 நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும்
    முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர்.
கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்!
    அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!

22 நீர் எல்லா இடங்களிலிருந்தும்
    பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர்.
பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று
    நீர் பயங்கரங்களை வரவழைத்தீர்.
கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை.
    நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.

சங்கீதம் 33

33 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
    நல்ல நேர்மையான ஜனங்களே, அவரைத் துதியுங்கள்!
சுரமண்டலத்தை இசைத்து கர்த்தரைத் துதியுங்கள்!
    பத்து நரம்பு வீணையை இசைத்து கர்த்தரைப் பாடுங்கள்.
புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
    மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
தேவனுடைய வாக்கு உண்மையானது!
    அவர் செய்பவற்றை உறுதியாக நம்புங்கள்!
நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
    கர்த்தர் பூமியை அவரது அன்பினால் நிரப்பியுள்ளார்.
கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
    தேவனுடைய வாயின் மூச்சு பூமியிலுள்ள அனைத்தையும் உருவாக்கிற்று.
கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
    அவர் சமுத்திரத்தை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்.
பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
    உலகில் வாழும் ஜனங்கள் எல்லோரும் அவருக்கு அஞ்ச வேண்டும்.
ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
    அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
    அவர்கள் திட்டங்களை கர்த்தர் அழிக்கக் கூடும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
    தலைமுறை தலைமுறைக்கும் அவர் திட்டங்கள் நன்மை தரும்.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
    எல்லா ஜனங்களையும் கண்டார்.
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
    பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
    ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
    ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
    அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
    அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
    அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
    அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
    அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!
    உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center