Chronological
மேலும் பிரச்சனைகள்
6 பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை. 2 எனவே சன்பல்லாத்தும் கேஷேமும் எனக்கு, “நெகேமியா வா, நாம் ஒன்றாகக் கூடுவோம். நாம் ஓனோ பள்ளத்தாக்கில் உள்ள கெப்பிரிம் எனும் பட்டணத்தில் கூடிப்பேசுவோம்” என்னும் செய்தியை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர்.
3 எனவே நான்: “முக்கியமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் அங்கு வர முடியாது. நான் கீழே வந்து உங்களைச் சந்திப்பதால் இந்த வேலை தடைபடுவதை விரும்பவில்லை” என்கிற பதிலோடு அவர்களிடம் தூதர்களை அனுப்பினேன்.
4 சன்பல்லாத்தும் கேஷேமும் அதே செய்தியை என்னிடம் நான்குமுறை அனுப்பினார்கள். ஒவ்வொருமுறையும் நான் அதே பதிலையே திரும்ப அனுப்பினேன். 5 பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது. 6 அக்கடிதத்தில்,
“ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எங்கெங்கும் ஜனங்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, கேஷேம் இதனை உண்மை என்று கூறுகிறான். நீயும் யூதர்களும் அரசனுக்கு எதிராகத்திரும்ப திட்டமிடுகிறீர்கள் என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் நீங்கள் எருசலேம் சுவரைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீ யூதர்களின் புதிய அரசன் ஆவாய் என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 7 ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது.
“நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.
8 எனவே நான் சன்பல்லாத்துக்கு இந்தப் பதிலை அனுப்பினேன். அதில், “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் நடக்கவில்லை. உன் சொந்த தலைக்குள் நீயே எல்லாவற்றையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறாய்” என்று எழுதியிருந்தேன்.
9 எங்கள் பகைவர்கள் எங்களைப் பயமுறுத்தவே முயன்றனர். அவர்கள் தங்களுக்குள், “யூதர்கள் பயப்படுவார்கள். வேலைச் செய்துகொண்டிருப்பதில் சோர்வு அடைவார்கள். பிறகு சுவர் வேலை முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான், “தேவனே என்னைப் பலப்படுத்தும்” என ஜெபம் செய்தேன்.
10 ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.
11 ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய். நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன்.
12 செமாயாவை தேவன் அனுப்பியிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். அவன் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவனுக்குத் தொபியாவும் சன்பல்லாத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள். 13 செமாயா, என்னைப் பயங்காட்டி அச்சமடைய செய்வதற்குக் கூலி பெற்றிருக்கிறான். நான் ஆலயத்தின் அந்தப் பாகத்திற்குப் போவதால் ஏற்படும் பாவத்தை செய்ய அவர்கள் இத்தகைய தீயகாரியங்களை எனக்கு எதிராக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். பிறகு எனது பகைவர்களுக்கு என்னை நிந்திக்க ஒரு காரணம் கிடைத்துவிடும். அதன் மூலம் எனக்குக் கெட்ட பெயரைத் தருவார்கள்.
14 தேவனே தயவுசெய்து தொபியாவையும் சன்பல்லாத்தையும் அவர்கள் செய்துள்ள தீயவற்றையும் நினைவுக்கொள்ளும். பெண் தீர்க்கதரிசியான நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும் என்னைப் பயங்காட்ட முயன்றதை நினைவுக்கொள்ளும்.
சுவர் முடிக்கப்படுகிறது
15 எனவே, எருசலேம் சுவர் எலூல் மாதத்தின் 25வது நாளன்று கட்டி முடிக்கப்பட்டது. சுவரைக் கட்டிமுடிக்க 52 நாட்கள் ஆயிற்று. 16 பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.
17 சுவர் வேலை முடிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில், யூதாவில் உள்ள பணக்கார ஜனங்கள் தொபியாவிற்குப் பல கடிதங்களை அனுப்பினர். தொபியாவும் அவற்றுக்குப் பதில் அனுப்பினான். 18 அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான். 19 கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் தொபியாவிற்கு ஒரு சிறப்பான வாக்குறுதியைச் செய்துக் கொடுத்திருந்தனர். எனவே அந்த ஜனங்கள் என்னிடம் தொபியா எவ்வளவு நல்லவன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நான் செய்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் தொபியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தொபியா என்னைப் பயங்காட்ட கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தான்.
7 எனவே, நாங்கள் சுவர் கட்டுவதை முடித்தோம். பிறகு வாசல்களுக்குக் கதவுகளைப் போட்டோம். பின்னர் அவ்வாசல்களைக் காக்க ஆட்களைத் தேர்ந் தெடுத்தோம். ஆலயத்தில் பாடவும் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவையான ஆட்களைத் தேர்ந்தெடுத்தோம். 2 அடுத்து, நான் எனது சகோதரனான ஆனானியைத் எருசலேமின் பொறுப்பாளனாக நியமித்தேன். கோட்டையின் தலைவனாக அனனியாவைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் அவன் மிகவும் நேர்மையானவனாக இருந்தான். அநேக மனிதர்கள் செய்வதைவிட அவன் அதிகமாக தேவனுக்கு பயந்தான். 3 பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.
திரும்பி வந்த கைதிகளின் பட்டியல்
4 இப்பொழுது நகரம் பெரியதாய் இருந்தது. அங்கு அதிக இடம் இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் மிகக்குறைவான ஜனங்களே வசித்தனர். வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை. 5 எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்:
6 அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான். அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர். 7 இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்:
8 பாரோஷின் சந்ததியினர் 2,172
9 செபத்தியாவின் சந்ததியினர் 372
10 ஆராகின் சந்ததியினர் 652
11 யெசுவா, யோவாப் என்பவர்களின்
குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின்
சந்ததியினர் 2,818
12 ஏலாமின் சந்ததியினர் 1,254
13 சத்தூவின் சந்ததியினர் 845
14 சக்காயின் சந்ததியினர் 760
15 பின்னூவின் சந்ததியினர் 648
16 பெபாயின் சந்ததியினர் 628
17 அஸ்காதின் சந்ததியினர் 2,322
18 அதோனிகாமின் சந்ததியினர் 667
19 பிக்வாயின் சந்ததியினர் 2,067
20 ஆதீனின் சந்ததியினர் 655
21 எசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக
ஆதேரின் சந்ததியினர் 98
22 ஆசூமின் சந்ததியினர் 328
23 பேசாயின் சந்ததியினர் 324
24 ஆரீப்பின் சந்ததியினர் 112
25 கிபியோனின் சந்ததியினர் 95
26 பெத்லகேம் ஊராரும் நெத்தோபா
ஊராரும் 188
27 ஆனதோத்தூர் மனிதர்கள் 128
28 பெத்அஸ்மாவேத் ஊரார்கள் 42
29 கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743
30 ராமா, காபா ஊரார்கள் 621
31 மிக்மாஸ் ஊரார்கள் 122
32 பெத்தேல், ஆயி ஊரார்கள் 123
33 வேறொரு நேபோ ஊரார்கள் 52
34 மற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254
35 ஆரீம் ஊரார்கள் 320
36 எரிகோ ஊரார்கள் 345
37 லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721
38 செனாகா ஊரார்கள் 3,930
39 ஆசாரியரானவர்கள்:
யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின்
சந்ததியினர் 973
40 இம்மேரின் சந்ததியினர் 1,052
41 பஸ்கூரின் சந்ததியினர் 1,247
42 ஆரீமின் சந்ததியினர் 1,017
43 லேவியின் கோத்திரத்தினர்:
ஓதியாவின் புத்திரருக்குள்ளே
கத்மியேல் மகனாகிய
யெசுவாவின் சந்ததியினர் 74
44 பாடகரானவர்கள்:
ஆசாபின் சந்ததியினர் 148
45 வாசல் காவலாளரானவர்கள்:
சல்லூம், அதேர், தல்மோன்,
அக்கூப், அதிதா, சோபா
ஆகியோரின் சந்ததியினர் 138
46 இவர்கள் ஆலய பணியாளர்கள்:
சீகா, அசுபா, தபாகோத்தின் சந்ததியினர்
47 கேரோஸ், சீயா, பாதோன்,
48 லெபனா, அகாபா, சல்மா,
49 ஆனான், கித்தேல், காகார்,
50 ராயாக், ரேத்சீன், நெகோதா,
51 காசாம், ஊசா, பாசெயாக்,
52 பேசாய், மெயுநீம், நெபிஷசீம்,
53 பக்பூக், அகுபா, அர்கூர்,
54 பஸ்லீ, மெகிதா, அர்ஷா,
55 பர்கோஷ், சிசெரா, தாமா,
56 நெத்சியா, அதிபா.
57 சாலொமோனது வேலைக்காரர்களின் சந்ததியினர்:
சோதா, சொபெரேத், பெரிதா,
58 யாலா, தர்கோன், கித்தேல்,
59 செபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன்.
60 ஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர் 392
61 தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
62 தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர் 642
63 ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து
அபாயா, கோசு, பர்சில்லாய் சந்ததியினர் (கிலேயாவைச் சேர்ந்த பர்சில்லாயின் மகள் ஒருத்தியை ஒரு மனிதன் மணந்ததால், அந்த மனிதன் பர்சில்லாயின் சந்ததியானாக எண்ணப்பட்டான்.)
64 இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. 65 இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை.
66-67 எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர். 68-69 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன.
70 வம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். 71 வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72 மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
73 ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.
2008 by World Bible Translation Center