Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 6-9

யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்

அப்போது யோபு,

“என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
    நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
    அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
    அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
    தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
    காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
    பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
உப்பற்ற உணவு சுவைக்காது.
    முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
நான் அதைத் தொட மறுக்கிறேன்;
    அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
    உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.

“நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
    நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
    அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
    நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
    இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.

11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    எனக்கு என்ன நேருமென அறியேன்.
    எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
    என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
    ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

14 “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும்.
    ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
15 ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை.
    நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது.
    சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.
16 பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.
17 உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது,
    நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
18 வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து,
    காணாமல்போய்விடுகிறார்கள்.
19 தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள்.
    சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
20 அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்,
    ஆனால் ஏமாற்றமடைகிறார்கள்.
21 இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள்.
    என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
22 நான் உங்களிடம் உதவியை நாடினேனா?
    எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?
23 ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
    கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’
    என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?

24 “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன்.
    நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.
25 நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை.
    ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
26 என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
    மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா?
27 தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள்.
    உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.
28 ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள்.
    நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
29 எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள்.
    அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
    நான் தவறேதும் செய்யவில்லை.
30 நான் பொய் கூறவில்லை.
    நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான்.

யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு
    வேலைக்கென வாங்கப்பட்ட பணியாளின் நாட்களைப் போன்றது அவன் நாட்கள்.
வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன்.
    சம்பள நாளுக்காகக் காத்திருக்கும் அப்பணியாளைப் போன்றிருக்கிறான்.
ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன.
    துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன்.
நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன்.
    ஆனால் இரவு நீண்டுக் கொண்டேபோகிறது.
    நான் திரும்பியும் புரண்டும் சூரியன் உதிக்கும்வரை படுத்திருக்கிறேன்.
என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன.
    என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன.

“நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
    என் வாழ்க்கை நம்பிக்கையின்றி முடிவடைகிறது.
தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும்.
    நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.
நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை.
    என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.
மேகம் மறைந்து காணாமற்போகிறது.
    அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை.
10 அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை.
    அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது.

11 “எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்!
    என் ஆவி துன்புறுகிறது!
    என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.
12 தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்?
    நான் கடலா, கடல் அரக்கனா?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன்.
    என் கட்டில் எனக்கு ஓய்வையும் நிம்மதியையும் தருமென்று எதிர்ப்பார்த்தேன்.
14 ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர்,
    என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர்.
15 எனவே நான் வாழ்வதைக் காட்டிலும்
    மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன்.
16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
    நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன்.
என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்!
    ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது)
17 தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்?
    ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்?
    ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்?
18 ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து,
    ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்?
19 தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை.
    என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை.
20 தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர்.
    நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்ய முடியும்.
நீர் என்னை உமது இலக்காக ஏன் பயன்படுத்துகிறீர்?
    நான் உமக்குத் தொல்லையாகி போனேனா?
21 ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது?
    என் பாவங்களை நீர் ஏன் மன்னிக்கக்கூடாது?
நான் விரைவில் மடிந்து கல்லறைக்குள் வைக்கப்படுவேன்.
    அப்போது என்னைத் தேடுவீர்கள், நான் அழிந்துப்போயிருப்பேன்” என்றான்.

பில்தாத் யோபுவிடம் பேசுகிறான்

அப்போது சூகியனான பில்தாத் பதிலாக,

“எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்?
    பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன.
தேவன் நியாயத்தை மாற்றுவாரோ?
    சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ?
உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார்.
    அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள்.
ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து
    சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும்.
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால்,
    அவர் விரைந்து உமக்கு உதவ வருவார்.
    உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.
தொடக்கம் அற்பமாக இருந்தாலும்
    உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.

“வயது முதிர்ந்தோரைக் கேளும்,
    அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும்.
ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம்.
    ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.
10 முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும்.
    அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான்.

11 பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ?
    தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
12 இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும்.
    அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும்.
13 தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள்.
    தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
14 அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை.
    அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
15 சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும்.
    அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
16 அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான்.
    தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.
17 பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும்.
    பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.
18 ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும்,
    அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள்.
19 ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது.
    அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.
20 தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார்.
    அவர் கொடியோருக்கு உதவமாட்டார்.
21 தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும்
    உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.
22 ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள்.
    தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான்.

யோபு பில்தாத்திற்குப் பதில் கூறுகிறான்.

அப்போது யோபு,

“ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன்.
    ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்?
ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது!
    தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது!
தேவன் மிகுந்த ஞானமுள்ளவர், அவரது வல்லமை மிகப்பெரியது!
    ஒருவனும் தேவனோடு போராடி, காயமுறாமலிருக்க முடியாது.
தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார்,
    அவை அதனை அறியாது.
பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார்.
    தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார்.
தேவன் சூரியனிடம் பேசமுடியும், அதை உதயமாகாமல் செய்யமுடியும்.
    அவர் விண்மீன்களை ஒளிவிடாதபடி பூட்டமுடியும்.
தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார்,
    அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்.

“அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருக சீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினார்.
10 மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார்.
    தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை!
11 தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைப் பார்க்க முடியாது.
    தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைக் கவனிப்பதில்லை.
12 தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது.
    ‘நீர் என்ன செய்கிறீர்?’
    என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது.
13 தேவன் தமது கோபத்தை அடக்கிக்கொள்ளமாட்டார்.
    ராகாபின் [a] உதவியாளருங்கூட தேவனுக்குப் பயந்திருக்கிறார்கள்.
14 எனவே நான் தேவனுக்கு பதில் கொடுக்க முடியாது.
    அவரிடம் என்ன சொல்வேனென்பதை நான் அறியேன்.
15 நான் களங்கமற்றவன், ஆனால் என்னால் அவருக்குப் பதில் கூறமுடியாது.
    என் நீதிபதியிடம் (தேவனிடம்) இரக்கத்திற்காக மன்றாடமட்டுமே என்னாலாகும்.
16 நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும்,
    அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது.
17 தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார்.
    எக்காரணமுமின்றி எனக்கு இன்னுமதிகமான காயங்களைத் தருகிறார்.
18 மீண்டும் இன்னொரு முறை சுவாசிக்க தேவன் என்னை அனுமதிக்கமாட்டார்.
    அவர் எனக்கு இன்னும் தெல்லைகளைத் தருகிறார்.
19 தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர்!
    யார் தேவனை நியாயசபைக்கு அழைத்து வந்து, நியாயம் வழங்கும்படி சொல்ல முடியும்?
20 நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும்.
    நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது.
21 நான் களங்க மற்றவன், நான் எதைச் சிந்திப்பதென அறியேன்.
    நான் என் சொந்த வாழ்க்கையையே வெறுக்கிறேன்.
22 நான் எனக்குள்ளே, ‘இதே மாதிரி எல்லோருக்கும் நிகழ்கிறது’
    களங்கமற்றவர்களும் குற்றவாளிகளும் முடிவை காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.
23 கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால்
    தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?
24 தீயவன் ஒருவன் ஒரு நிலத்தைத் தன தாக்கிக்கொள்ளும்போது,
    நிகழ்வனவற்றைத் தலைவர்கள் காணாதபடி தேவன் செய்கிறாரா?அது உண்மையானால் தேவன் யார்?

25 “ஓர் ஓட்டக்காரனைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
    என் நாட்கள் பறக்கின்றன, அவற்றில் சந்தோஷமில்லை.
26 வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும்
    இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன.

27 “நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன்,
    என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’
    என்று நான் கூறினால்,
28 அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை!
    துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன.
29 நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன்.
    எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்?
‘அதை மறந்துவிடு!’
    என நான் சொல்கிறேன்.
30 பனியால் என்னைக் கழுவினாலும்,
    சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும்,
31 தேவன் என்னைச் சேற்றுக் குழியில் தள்ளுவார்.
    அப்போது என் உடைகளும் என்னை வெறுக்கும்.
32 தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல,
    நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது.
33 இரு பக்கங்களிலும் நியாயம் கேட்க ஒருவர் இருந்தால், நல்லதென நான் விரும்புகிறேன்.
    எங்களை நியாயமாக (தக்க முறையில்) நியாயந்தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கமாட்டாரா என நான் விரும்புகிறேன்.
34 தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன்.
    அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது.
35 அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும்.
    ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center