Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 1-5

நல்ல மனிதனாகிய யோபு

ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான்.

யோபுவின் மகன்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.

தேவதூதர்கள் [a] கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான்.

கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான்.

அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார்.

சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! 10 நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். 11 ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான்.

12 கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான்.

யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்

13 ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். 14 அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. 15 ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான்.

16 அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான்.

17 அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான்.

18 மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது மகன்களும் மகள்களும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். 19 அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது மகன்களின் மீதும், மகள்களின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான்.

20 யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான்.

21 “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
    நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
    கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.

22 இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.

சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்

மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.

கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான்.

அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார்.

சாத்தான், “தோலுக்குத் தோல்! [b] என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான்.

அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார்.

பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.

யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள்.

10 பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்

11 தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்).

12 ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

13 பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.

யோபு தான் பிறந்தநாளை சபிக்கிறான்

பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த

நாளை சபித்தான்.

2-3 அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன்.
    ‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்!
அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன்.
    அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன்.
    அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன்.
மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
    இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன்.
இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும்.
    நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும்.
    எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம்.
அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும்.
    அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும்.
சில மந்திரவாதிகள் லிவியாதானை [c] எழுப்ப விரும்புகிறார்கள்.
    அவர்கள் சாபங்கள் இடட்டும்.
    நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும்.
அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும்.
    அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும்.
    சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும்.
10 ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை.
    இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை.
11 நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை?
    நான் ஏன் பிறப்பில் மடியவில்லை?
12 ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்?
    ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின?
13 நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன்.
14 முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன்.
    இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
15 அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர்,
    அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
16 பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை?
    பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன்.
17 கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள்.
    சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள்.
18 சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள்.
    அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை,
19 முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள்.
    அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான்.

20 “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?
    கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்?
21 அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை.
    துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.
22 அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள்.
23 ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார்.
    அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார்.
24 சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன்.
    மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன.
25 ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன்.
    அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது!
    நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது!
26 நான் அமைதியுற முடியவில்லை.
    என்னால் இளைப்பாற முடியவில்லை.
நான் ஓய்வெடுக்க இயலவில்லை.
    நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.

எலிப்பாஸ் பேசுகிறான்

தேமானிலுள்ள எலிப்பாஸ்,

“யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா?
    ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்?
யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய்.
    நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.
வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின.
    தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய்.
ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன,
    நீ துணிவிழக்கிறாய்.
தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன,
    நீ கலங்கிப்போகிறாய்!
நீ தேவனை கனம்பண்ணுகிறாய்.
    அவரை நம்புகிறாய்.
நீ நல்லவன்.
    எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா?
யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்:
    களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.
நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன்.
    அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!
தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது.
    தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.
10 தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள்.
    தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார்.
11 ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள்.
    அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள்.

12 “இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது.
    என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.
13 இரவின் கெட்ட கனவாய்,
    அது என் தூக்கத்தைக் கெடுத்தது.
14 நான் பயந்து நடுங்கினேன்.
    என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
15 ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது.
    என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.
16 ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை.
    என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது.
    அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்:
17 ‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா?
    தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா?
18 பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை.
    தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார்.
19 எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்!
    அவர்கள் களிமண் வீடுகளில் [d] வசிக்கிறார்கள்.
இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும்.
    பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.
20 ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை.
    அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,
21 அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன.
    அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’

“யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்!
    நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்?
ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும்,
    ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும்.
தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன்.
    ஆனால் திடீரென அவன் மாண்டான்.
யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை.
    நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை.
அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர்.
    முட்களின் நடுவே வளரும் தானியங்களையும் கூட பசியுள்ள அந்த ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்.
தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை.
    பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ
    அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால்,
    தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது.
    தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.
10 தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார்.
    அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.
11 எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார்,
    அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார்.
12 புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை,
    அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.
13 ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து
    புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார்.
14 அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள்.
    இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள்.
15 தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார்.
    திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார்.
16 எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள்.
    நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.

17 “தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே.
18 தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார்.
    அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.
19 ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
    ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!
20 பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.
    போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்!
21 தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம்.
    ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார்.
    தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை!
22 அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய்.
    காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய்.
23 உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும்.
    காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும்.
24 உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய்.
    உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
25 உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள்.
    அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.
26 அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர்.
    ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.

27 “யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம்.
    எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center