Chronological
வாயில் காவலர்கள்
26 வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர்.
மெஷெலேமியாவும் அவனது குமாரர்களும் ஆவார்கள். மெஷெலேமியா கோரேயின் குமாரன். இவன் ஆசாப்பின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 மெஷெலேமியாவிற்கு குமாரர்கள் இருந்தனர். சகரியா மூத்த குமாரன். எதியாயேல் இரண்டாவது குமாரன். செபதியா மூன்றாவது குமாரன். யதனியேல் நான்காவது குமாரன், 3 ஏலாம் ஐந்தாவது குமாரன், யோகனான் ஆறாவது குமாரன், எலியோனாய் ஏழாவது குமாரன்.
4 ஓபேத்ஏதோமினுக்கு குமாரர்கள் இருந்தனர். மூத்த குமாரன் செமாயா, இரண்டாவது குமாரன் யோசபாத், மூன்றாவது குமாரன் யோவாக், நான்காவது குமாரன் சாக்கார், ஐந்தாவது குமாரன் நெதநெயேல், 5 ஆறாவது குமாரன் அம்மியேல், ஏழாவது குமாரன் இசக்கார், எட்டாவது குமாரன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத்ஏதோமை ஆசீர்வதித்திருந்தார். 6 ஓபேத்ஏதோமின் குமாரனான செமாயாவிற்கு குமாரர்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். 7 செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் குமாரர்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள். 8 இவர்கள் அனைவரும் ஓபேத்ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் குமாரர்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத்ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.
9 மெஷெலேமியாவின் குமாரர்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் குமாரர்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
10 மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த குமாரன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான். 11 இல்க்கியா இவனது இரண்டாவது குமாரன், தெபலியா மூன்றாவது குமாரன், சகரியா நான்காவது குமாரன். ஆக மொத்தம் ஓராவின் குமாரர்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
12 இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது. 13 ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
14 மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் குமாரனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். 15 ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது குமாரர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 16 மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர்.
காவலர்கள் பக்கம் பக்கமாக நின்றனர். 17 ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர். 18 நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.
19 இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.
கருவூல அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும்
20 அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.
21 லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான். 22 யெகியேலியின் குமாரன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.
23 மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
24 செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் குமாரன். கெர்சோம் மோசேயின் குமாரன். 25 கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் குமாரனான ரெகபியா, ரெகபியாவின் குமாரனான எஷாயா, எஷாயாவின் குமாரனான யோராம், யோராமின் குமாரனான சிக்கிரி, சிக்கிரியின் குமாரனான செலோமித். 26 செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள்.
படையில் உள்ள அதிகாரிகளும் ஆலயத்திற்காகப் பொருட்களைக் கொடுத்தனர். 27 அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள். 28 செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் குமாரனான சவுலும், நேரின் குமாரனான அப்னேரும், செருயாவின் குமாரனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.
29 இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது குமாரர்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள். 30 எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் ராஜாவின் வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர். 31 எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர். 32 எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது ராஜா, தேவன் மற்றும் ராஜாவின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.
படைக் குழுக்கள்
27 ராஜாவின் படையில் பணியாற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.
2 முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் குமாரன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 3 யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.
4 இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
5 மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் குமாரன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 6 பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது குமாரனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.
7 ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் குமாரனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
8 சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
9 ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் குமாரன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
10 ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
11 எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
12 ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
13 பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
14 பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
15 பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
கோத்திரங்களின் தலைவர்கள்
16 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:
ரூபனியருக்கு சிக்ரியின் குமாரனான எலியேசர் தலைவன்.
சிமியோனியருக்கு மாக்காவின் குமாரனான செப்பத்தியா தலைவன்.
17 லேவியருக்கு கேமுவேலின் குமாரனான அஷாபியா தலைவன்.
ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.
18 யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன்.
இசக்காருக்கு மிகாவேலின் குமாரனான ஒம்ரி தலைவன்.
19 செபுலோனக்கு ஒபதியாவின் குமாரனான இஸ்மாயா தலைவன்.
நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரனான எரிமோத் தலைவன்.
20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் குமாரனான ஓசெயா தலைவன்.
மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் குமாரனான யோவேல் தலைவன்.
21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரனான இத்தோ தலைவன்.
பென்யமீனுக்கு அப்னேரின் குமாரனான யாசியேல் தலைவன்.
22 எரோகாமின் குமாரனான அசாரியேல் தாணின் தலைவன்.
இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.
தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது
23 தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான். 24 செருயாவின் குமாரனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது ராஜாவின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.
ராஜாவின் நிர்வாகிகள்
25 ராஜாவின் சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது:
ராஜாவின் பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் குமாரனான அஸ்மாவேத் அதிகாரியானான்.
சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் குமாரன் யோனத்தான் அதிகாரியானான்.
26 நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் குமாரன் எஸ்ரி அதிகாரியானான்.
27 திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.
28 மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான்.
எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.
29 சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான்.
பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் குமாரன் சாப்பாத் அதிகாரியானான்.
30 ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான்.
கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.
31 ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான்.
இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர்.
32 யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் குமாரனான யெகியேல் ராஜாவின் குமாரர்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான். 33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி ராஜாவின் நண்பன். இவன் அர்கியன். 34 யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று ராஜாவுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் குமாரன். யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்
28 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், ராஜாவின் படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். ராஜாவுக்கும் அவனது குமாரர்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.
2 தாவீது எழுந்து நின்று அவர்களிடம்,
“நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். 3 ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.
4 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் ராஜாவாக்க விரும்பினார்! 5 கர்த்தர் எனக்கு பல குமாரர்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய ராஜாவாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. 6 கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். 7 சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”
8 “இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும்.
9 “என் குமாரன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். 10 சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.
11 பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். 12 தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். 13 ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். 14 ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். 15 தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. 16 பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். 17 முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். 18 நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை.
19 தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.
20 தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். 21 ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.
ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்
29 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது,
“என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. 2 எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். 3 எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 4 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். 5 தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
6 குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். 7 அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, 8 ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். 9 தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.
தாவீதின் அழகான ஜெபம்
10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
13 இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி.
நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!
14 இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல!
அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன.
நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
15 நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று
உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம்.
இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது.
இதனை நிறுத்த முடியவில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம்.
உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம்.
ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன.
எல்லாம் உமக்குரியன.
17 எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன்.
ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர்.
நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன்.
நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன்,
சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்!
உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
19 என் குமாரன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும்,
உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும்.
நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.
20 பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் வணங்கினார்கள்.
சாலொமோன் ராஜாவாகிறான்
21 மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர். 22 அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர்.
அவர்கள் தாவீதின் குமாரனான சாலொமோனை இரண்டாம் முறையாக ராஜாவாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை ராஜாவாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.
23 பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். 24 அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் குமாரனான சாலொமோனை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர். 25 கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு ராஜாவுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த ராஜாவுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.
தாவீதின் மரணம்
26-27 ஈசாயின் குமாரனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு ராஜாவாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 28 தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல்வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான சாலொமோன் புதிய ராஜா ஆனான்.
29 தொடக்கமுதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 30 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்.
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் குமாரர்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை குமாரர்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது குமாரர்கள் அவனைக் காப்பார்கள்.
2008 by World Bible Translation Center