Print Page Options
Previous Prev Day Next DayNext

Chronological

Read the Bible in the chronological order in which its stories and events occurred.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நெகேமியா 1-5

நெகேமியாவின் ஜெபம்

இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் குமாரன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாவது ஆண்டு.[a] நான் சூசானில் இருந்தபோது என் சகோதரர்களில் ஒருவனான ஆனானியும் வேறு சில மனிதர்களும் யூதாவிலிருந்து வந்தனர். நான் அவர்களிடம் அங்கு வாழும் யூதர்களைப் பற்றிக் கேட்டேன். அந்த யூதர்கள் சிறைவாசத்திலிருந்து தப்பித்து இன்னும் யூதாவில் வாழ்ந்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் எருசலேம் நகரத்தைப்பற்றியும் விசாரித்தேன்.

ஆனானியும் அவனோடு இருந்த மனிதர்களும், “நெகேமியா, சிறைவாசத்திலிருந்து தப்புவித்து யூதா நாட்டில் வாழ்கிற யூதர்கள் மிகுந்த துன்பத்தில் இருக்கின்றனர். அந்த ஜனங்கள் மிகுந்த தொல்லைகளிலும் அவமானத்திலும் இருக்கின்றனர். ஏனென்றால் எருசலேமின் சுவர் உடைந்து விழுந்தது. அதன் வாசல்கள் நெருப்பால் எரிந்தன” என்றனர்.

நான் எருசலேம் ஜனங்களைப் பற்றியும் அதன் சுவரைப் பற்றியும் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தேன். நான் உட்கார்ந்து கதறினேன். நான் பல நாள் துக்கமாக இருந்தேன். உண்ணாமல் இருந்து பரலோகத்தின் தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு இந்த ஜெபத்தை ஜெபித்தேன்:

“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, நீரே உயர்ந்தவர், வல்லமையுள்ள தேவன். உம்மை நேசித்து உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஜனங்களோடு தான் செய்துகொண்ட அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றும் தேவன் நீரே.

“உமக்கு முன்னால் இரவும் பகலும் ஜெபம் செய்துக்கொண்டிருக்கிற உமது அடியானின் ஜெபத்தைக் கேட்கும்படி தயவுசெய்து உமது கண்களையும் காதுகளையும் திறவும். நான் இஸ்ரவேல் ஜனங்களான உமது அடியார்களுக்காக ஜெபம் செய்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகின்றேன். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறேன் என்றும் என் தந்தையின் வீட்டார் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள் என்றும் நான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு மிகவும் தீயவர்களாக இருந்தோம். நீர் உமது அடியாரான மோசேக்குக் கொடுத்த கட்டளைகள், போதனைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் அடி பணிந்திருக்கவில்லை.

“உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன். நீங்கள் என்னிடம் திரும்பிவந்து எனது கட்டளைகளுக்கு அடிபணிவீர்களானால் பிறகு நான் சொல்லுகிற இது நடக்கும். ஜனங்கள் தம் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்டு பூமியின் கடைசி எல்லைகளில் இருந்தாலும் அங்கிருந்து அவர்களை நான் ஒன்றுசேர்ப்பேன். எனது நாமத்தை விளங்கும்படி நான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நான் அவர்களைத் திரும்பக்கொண்டுவருவேன்’ என்று கூறினீர்.

10 “இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர். 11 எனவே கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது அடியான். உமது நாமத்தில் மரியாதை வைத்திருக்கிற உமது அடியார்களின் ஜெபங்களைக்கேளும். கர்த்தாவே, நான் ராஜாவின் திராட்சைரசப் பணியாள்[b] என்பது உமக்குத் தெரியும். எனவே இன்று எனக்கு உதவும். ராஜாவிடத்தில் உதவி கேட்கிறபோது நீர் எனக்கு உதவும். என் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணும்.”

ராஜாவுக்கு நான் விருப்பமுடையவனாக இருக்கும்படி உதவும்.

அர்தசஷ்டா ராஜா நெகேமியாவை எருசலேமிற்கு அனுப்புகிறான்

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் ஆட்சியாண்டில், நிசான் மாதத்தில் கொஞ்சம் திராட்சைரசம் ராஜாவுக்கு கொண்டுவரப்பட்டது. நான் திராட்சைரசத்தை எடுத்து ராஜாவுக்கு கொடுத்தேன். நான் ராஜாவோடு இருக்கும்போது எப்பொழுதும் துக்கமாக இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது நான் துக்கமாய் இருந்தேன். எனவே ராஜா என்னிடம், “நீ நோயுற்றிருக்கிறாயா? ஏன் துக்கமாய் காணப்படுகிறாய்? உனது இதயம் துக்கத்தால் நிறைந்திருப்பது போன்று நான் எண்ணுகிறேன்” என்று கேட்டான்.

பிறகு நான் மிகவும் பயந்தேன். பயந்தாலும் கூட நான் ராஜாவிடம், “ராஜா என்றென்றும் வாழ்வாராக! நான் துக்கமாய் இருக்கிறேன். ஏனென்றால் எனது முற்பிதாக்களின் கல்லறைகள் உள்ள நகரம் பாழாயிற்று. அதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன” என்றேன்.

பிறகு ராஜா என்னிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகின்றாய்?” என்று கேட்டான்.

நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் பரலோகத்தில் இருக்கிற தேவனிடம் ஜெபம் செய்தேன். பிறகு நான் ராஜாவுக்கு, “இது ராஜாவுக்கு பிடித்தமானதாக இருந்தால், நான் உமக்கு நல்லவனாக இருந்திருந்தால், தயவுசெய்து எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள யூதாவிற்கு என்னை அனுப்பும். யூதாவில் நான் போய் எருசலேம் நகரத்தை மீண்டும் கட்ட விரும்புகிறேன்” என்று பதில் சொன்னேன்.

இராணி ராஜாவுக்கு அடுத்து அமர்ந்துக் கொண்டிருந்தாள். ராஜா என்னிடம், “நீ போய் வர எவ்வளவு காலம் எடுக்கும். நீ இங்கே எப்பொழுது திரும்பி வருவாய்?” என்று கேட்டான்.

ராஜா என்னை அனுப்புவதில் சந்தோஷப்பட்டான். எனவே நான் அவனுக்குக் குறிப்பிட்ட காலத்தைச் சொன்னேன்.

நான் ராஜாவிடம், “ராஜாவுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன்.

ராஜா எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், ராஜா இவற்றைச் செய்தான்.

எனவே, நான் ஐபிராத்து நதியின் மேற்குப் பகுதியின் ஆளுநர்களிடம் சென்றேன். ராஜாவிடமிருந்து பெற்ற கடிதங்களை ஆளுநர்களிடம் கொடுத்தேன். ராஜா என்னுடன் படை அதிகாரிகளையும் குதிரை வீரர்களையும் அனுப்பியிருந்தான். 10 நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்பது பற்றி சன்பல்லாத்தும் தொபியாவும் கேள்விப்பட்டனர். அவர்கள் இடிந்து போனார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவ ஒருவன் வந்திருக்கிறான் என்று அறிந்து கோபமுற்றனர். சன்பல்லாத் ஓரோனியனிலிருந்தும் தொபியா அம்மோனியாவிலிருந்தும் வந்த அதிகாரிகள்.

நெகேமியா எருசலேம் சுவர்களைக் கண்காணிக்கிறான்

11-12 நான் எருசலேமிற்குப் போனேன். நான் அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். பிறகு இரவில் நான் சில மனிதர்களோடு புறப்பட்டேன். எருசலேமிற்காக என்ன செய்யவேண்டும் என்று தேவன் என் இதயத்தில் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நான் எவரிடமும் சொல்லியிருக்கவில்லை. நான் சவாரி செய்து வந்த குதிரையைத் தவிர வேறு குதிரைகள் என்னிடம் இல்லை. 13 இருட்டாக இருக்கும்போது நான் பள்ளத்தாக்கின் வாசல் வழியாகப் போய் வலுசர்ப்பத்துரவு மற்றும் குப்பைமேட்டு வாசலை நோக்கிச் சவாரி செய்தேன். உடைக்கப்பட்டிருந்த எருசலேமின் சுவர்களையும், நெருப்பால் எரிக்கப்பட்டிருந்த சுவர்களிலுள்ள வாசல்களையும் நான் பார்வையிட்டேன். 14 பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் ராஜாவின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது. 15 எனவே, இருட்டில் நான் பள்ளத்தாக்கிற்குச் சென்றேன். இறுதியாக நான் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல் வழியாகத் திரும்பி வந்தேன். 16 இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யப்போகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை.

17 பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன்பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன்.

18 நான் அந்த ஜனங்களிடம் தேவன் என்னிடம் கருணையோடு இருப்பதைப் பற்றியும் சொன்னேன். ராஜா என்னிடம் சொல்லியிருந்தவற்றைப் பற்றியும் நான் அவர்களிடம் சொன்னேன். பிறகு அந்த ஜனங்கள், “இப்பொழுது நாம் வேலையை ஆரம்பிக்கலாம்” என்று பதிலுரைத்தனர். எனவே இந்த நல்ல வேலையை நாங்கள் தொடங்கினோம். 19 ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் வேலைக்காரனும் அரபியனான கேஷேமும் நாங்கள் மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கேள்விப்பட்டனர். அவர்கள் மிக இழிவான வழியில் எங்களைக் கேலிச் செய்தனர். அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ராஜாவுக்கு எதிராகிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டனர்.

20 ஆனால் நான் அந்த மனிதர்களிடம், “பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.

சுவரைக் கட்டுபவர்கள்

தலைமை ஆசாரியரின் பெயர் எலியாசீப். எலியாசீபும் அவனது சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்துப் போய் ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அவர்கள் ஜெபம் செய்து அந்த வாசலைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள். அவர்கள் சுவரில் கதவுகளை வைத்தனர். அந்த ஆசாரியர்கள் எருசலேமின் சுவரில் நூறு என்னும் கோபுரம்வரையும் அனனெயேலின் கோபுரம்வரையும் வேலை செய்தனர். அவர்கள் ஜெபம் செய்து தங்கள் வேலையைக் கர்த்தருக்குரிய பரிசுத்தமானதாக ஆக்கினார்கள்.

எரிகோவிலிருந்து வந்த மனிதர்கள் ஆசாரியர்களுக்கு அருகில் சுவர்கள் கட்டினார்கள். இம்ரியின் குமாரனாகிய சக்கூர் எரிகோவின் மனிதர்களுக்கு அருகில் கட்டினான்.

செனாவின் குமாரர்கள் மீன்வாசலைக் கட்டினார்கள். சரியான இடத்தில் உத்திரம் வைத்தனர். அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு கதவுகளை வைத்தனர். பிறகு அந்த கதவிற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

உரியாவின் குமாரனான மெரெமோத் சுவரின் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். (கோசின் குமாரன் உரியா.)

பெரகியாவின் குமாரனான மெசுல்லாம் அதற்கு அடுத்த சுவரைப் பழுதுபார்த்து கட்டினான் (மெஷேசாபெயேலின் குமாரன் பெரகியா.)

பானாவின் குமாரனாகிய சாதோக் அருகிலுள்ள சுவரைப் பழுதுபார்த்து கட்டினான்.

தெக்கோவா ஊரார் அவர்கள் அருகே பழுதுபார்த்து கட்டினார்கள். ஆனால் அவர்களது தலைவர்களோ அவர்களின் ஆளுநரான நெகேமியாவிற்கு வேலை செய்ய மறுத்துவிட்டனர்.

யோய்தாவும் மெசுல்லாமும் பழைய வாசலை பழுதுபார்த்து கட்டினார்கள். யோய்தா, பசெயாகின் குமாரன். மெசுல்லாம், பேசோதியாவின் குமாரன். அவர்கள் அதற்கு தூண்கள் அமைத்தனர். அவர்கள் கதவுகளையும் அதற்குரிய பூட்டுகள் மற்றும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்கள்.

கிபியோன் மற்றும் மிஸ்பா ஊர்களின் மனிதர்கள் அடுத்த பகுதியைப் பழுதுபார்த்து கட்டினார்கள். அந்த வேலையை மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும் செய்தனர். மிஸ்பா மற்றும் கிபியோன் ஐபிராத்து நதியிடையே மேற்கு பகுதியின் ஆளுநரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

அராயாவின் குமாரனான ஊசியேல் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். ஊசியேல் ஒரு பொற்கொல்லனாய் இருந்தான். தைலக்காரர்களில் ஒருவரான அனனியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். அம்மனிதர்கள் அந்த அகன்ற மதில்வரைக்கும் எருசலேமைக் கட்டிப் பழுதுபார்த்தனர்.

ஊரின் குமாரனான ரெப்பாயா அவர்கள் அருகே பழுதுபார்த்துக் கட்டினான். ரெப்பாயா, எருசலேமின் பாதி பகுதிக்குரிய ஆளுநர்.

10 அருமாப்பின் குமாரனான யெதாயா அடுத்த சுவர் பகுதியைக் கட்டினான். யெதாயா தனது சொந்த வீட்டின் அருகிலுள்ளவற்றைப் பழுதுபார்த்து கட்டினான். ஆசாப் நெயாவின் குமாரனான அத்தூஸ் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 11 ஆரீமின் குமாரனான மல்கிஜாவும் பாகாத்மோவாபின் குமாரனான அசூபும் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். சூளைகளின் கோபுரத்தையும் அவர்கள் பழுதுபார்த்தார்கள்.

12 அலோகேசின் குமாரனான சல்லும் அடுத்த சுவர்பகுதியைப் பழுதுபார்த்தான். அவனது குமாரத்திகள் அவனுக்கு உதவினார்கள். சல்லூம் எருசலேமின் பாதி பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.

13 ஆனூனும் சானோவாகின் குடிமக்களும் பள்ளத்தாக்கின் வாசலைப் பழுதுபார்த்தனர். அவர்கள் அதனைக் கட்டி அதற்கு கதவுகளை அமைத்தனர். பிறகு அவர்கள் அதற்குப் பூட்டுகளையும் தாழ்ப்பாளையும் பொருத்தினர். அவர்கள் குப்பைமேட்டு வாசல் வரைக்கும் 500 கெஜம் சுவரைக் கட்டினார்கள்.

14 ரெக்காவின் குமாரனான மல்கியா, குப்பை மேட்டு வாசலைப் பழுதுபார்த்துக் கட்டினான். மல்கியா, பெத்கேரேமின் மாகாணத்து ஆளுநராக இருந்தான். அவன் வாசலைக் கட்டினான். அதற்குக் கதவுகளைப் பொருத்தினான். பிறகு அதற்குரிய பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் வைத்தான்.

15 அவன் நீருற்று வாசலை பழுதுபார்த்தான். கொல்லோசேயின் குமாரனான சல்லூம் மிஸ்பா மாகாணத்து ஆளுநர், அவன் வாசலை அமைத்து அதற்குக் கூரையையும் போட்டான். பிறகு அதற்கு கதவுகளையும் வைத்தான். அதற்குரிய பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு வைத்தான். சல்லூம், சீலோவாவின் குளத்து சுவரையும் கட்டினான். அது ராஜாவினுடைய தோட்டத்தை அடுத்து இருந்தது. தாவீது நகரத்திலிருந்து இறங்குகிற படிக்கட்டுகளையும் அவன் கட்டிமுடித்தான்.

16 அஸ்பூகின் குமாரனான நெகேமியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். இந்த நெகேமியா பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். இவன் தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரையும் பழுதுபார்த்தான். அதோடு வெட்டப்பட்ட குளம் வரையிலும், பராக்கிரமசாலிகளின் வீடுவரையிலும் உள்ளவற்றைப் பழுதுபார்த்தான்.

17 லேவியின் கோத்திரத்தார் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தனர். லேவியர்கள் பானியின் குமாரனான ரேகூமிற்குக் கீழ் வேலைபார்த்தனர். அடுத்தப் பகுதியை அசபியா பழுதுபார்த்தான். அசபியா, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். அவன் தனது சொந்த மாவட்டத்திற்கே பழுதுபார்த்தான்.

18 அடுத்தப் பகுதியை அவனது சகோதரர்கள் பழுதுபார்த்தனர். அவர்கள் எனாதாதின் குமாரனான பின்னூவியின் கீழ் வேலை பார்த்தனர். பின்னூவி, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.

19 யெசுவாவின் குமாரனாகிய ஏசர் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்தான். ஏசர், மிஸ்பாவின் ஆளுநராக இருந்தான். அவன் ஆயுத அறையிலிருந்து சுவரின் மூலைவரையுள்ள சுவர்ப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். 20 சாபாயின் குமாரனான பாரூக் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்தான். பாரூக் மிகக் கடினமாக வேலை செய்தான். அவன் அந்த மூலையிலிருந்து தலைமை ஆசாரியனான எலியாசீபின் வீட்டின் நுழைவாயில் வரை சுவரைக் கட்டினான். 21 கோசின் குமாரன் உரியா. உரியாவின் குமாரன் மெரெமோத். அவன் எலியாசிபின் வாசற்படி முதல் அந்த வீட்டின் கடைசிவரையுள்ள சுவரைப் பழுதுபார்த்தான். 22 அடுத்தப் பகுதியிலுள்ள சுவர்கள் அந்தப் பகுதியில் வாழும் ஆசாரியர்களால் பழுதுபார்த்துக் கட்டப்பட்டன.

23 பென்யமீனும் அசூபும் தங்கள் வீட்டிற்கு எதிரேயுள்ள சுவரைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் குமாரன் அசரியா, அவனது வீட்டிற்கு அருகே இருந்த சுவரைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

24 எனாதாதின் குமாரனான பின்னூவி அசரியாவின் வீட்டிலிருந்த சுவரின் கோடி வளைவு வரைக்கும் உள்ள வேறொரு பங்கைக் கட்டினான்.

25 ஊசாயின் குமாரனான பாலால் வளைவுக்கு எதிரேயும் கோபுரத்திற்கு அருகேயும் உள்ளவற்றைக் கட்டினான். இந்த கோபுரம் ராஜாவின் உயரமான அரண்மனையில் இருந்தது. அது ராஜாவின் காவல் வீட்டின் முற்றத்தை அடுத்திருந்தது. பாலாலுக்கு அடுத்து (பிறகு) பாரோஷின் குமாரன் பெதாயா வேலைச் செய்தான்.

26 ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்கள் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்வரையிலும் கோபுரத்திற்கு அருகிலும் கட்டினார்கள்.

27 தெக்கோவா ஊரார், பெரிய கோபுரத்திலிருந்து ஓபேலின் மதில்வரைப் பழுதுபார்த்து கட்டினார்கள்.

28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் தம் பகுதியை பழுதுபார்த்தார்கள். ஒவ்வொரு ஆசாரியரும் அவரது சொந்த வீட்டிற்கு முன்னுள்ள சுவரைக் கட்டினார்கள். 29 இம்மேரின் குமாரனான சாதோக் தன் வீட்டிற்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்தான். அவனுக்கு பின்னாக, செக்கனியாவின் குமாரனான செமாயா பழுதுபார்த்துக் கட்டினான். செமாயா, கிழக்கு வாசலின் காவல்காரனாக இருந்தான்.

30 செல்மீயாவின் குமாரனான அனனியாவும் சாலாபின் குமாரனான ஆனூனும் வேறொரு பங்கைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். (ஆனூன், சாலாபின் ஆறாவது குமாரன்)

பெரக்கியாவின் குமாரன் மெசுல்லாம் அவனது வீட்டின் முன்னால் ஒரு பகுதியை கட்டினான். 31 மல்கியா, ஆலய வேலைக்காரர்களும் வணிகர்களும் குடியிருப்புகள் வரையுள்ள அடுத்த பாகத்தை பழுதுபார்த்தான். அது சோதனை வாசலுக்கு எதிரேயுள்ளது. மல்கியா, பொற்கொல்லனாய் இருந்தான். 32 கோடியின் மேல்வீட்டிற்கும் ஆட்டு வாசலுக்கும் இடையே இருக்கிறதைப் பொற்கொல்லர்களும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

சன்பல்லாத்தும் தொபியாவும்

நாங்கள் எருசலேம் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பதை சன்பல்லாத் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபம்கொண்டான், எரிச்சல் அடைந்தான். அவன் யூதர்களைக் கேலிச்செய்யத் தொடங்கினான். சன்பல்லாத் அவனது நண்பர்களோடும் சமாரியாவிலுள்ள படைவீரர்களோடும் பேசி, “பலவீனமுள்ள இந்த யூதர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை தனியாக விடுவோம் என்று நினைக்கிறார்களா? அவர்கள் பலியிடலாம் என்று நினைக்கிறார்களா? ஒரே ஒரு நாளிலேயே கட்டி முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? சாம்பல் மேடுகளிலும் புழுதிமேடுகளிலும் உள்ள கற்களுக்கு உயிர்கொடுக்க அவர்களால் முடியாது. இவை சாம்பல் மற்றும் புழுதிக் குவியல்களே” என்றான்.

அம்மோனியனாகிய தொபியா சன்பல்லாத்தின் பக்கத்தில் நின்றான். அவன், “இந்த யூதர்கள் எதைக் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறு நரி இதன் மேல் ஏறினாலும் சுவரிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடும்” என்று சொன்னான்.

நெகேமியா தேவனிடம் ஜெபம் செய்தான். அவன், “எங்கள் தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேளும். அந்த மனிதர்கள் எங்களை வெறுக்கிறார்கள். சன்பல்லாத்தும் தொபியாவும் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கே அந்தத் தீயச்செயல்கள் ஏற்படும்படி செய்யும். அவர்களை கைதிகளாக கொண்டு போகப்பட்டவர்களைப் போல வெட்கமுறும்படிச் செய்யும். அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம், அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்” என்றான்.

நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம்தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழுமனதோடு வேலைச் செய்தனர்.

ஆனால் சன்பல்லாத், தொபியா, அரபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் அஸ்தோத்தியரும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். அவர்கள், எருசலேம் சுவர்களில் ஜனங்கள் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டனர். சுவர்களில் உள்ள துவாரங்களை ஜனங்கள் அடைக்கின்றனர் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிட்டனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர். ஆனால் நாங்கள் எங்கள் தேவனிடம் ஜெபம் செய்தோம். நாங்கள் சுவர்களில் இரவும் பகலும் கண்காணிக்க காவலர்களை ஏற்பாடு செய்தோம். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம்.

10 எனவே அந்த நேரத்தில் யூதாவின் ஜனங்கள், “வேலைக்காரர்கள் சோர்வாக இருக்கிறார்கள். வழியில் எல்லாம் மண்ணும் மேடுமாயும் இருக்கிறது. எங்களால் தொடர்ந்து சுவரைக் கட்ட முடியாது. 11 எங்கள் பகைவர்கள், ‘யூதா ஜனங்கள் அறிந்துக் கொள்வதற்கும் எங்களைப் பார்ப்பதற்கும் முன்னால் நாங்கள் அவர்கள் மத்தியில் இருப்போம். நாங்கள் அவர்களைக் கொல்வோம். அது வேலையை நிறுத்தும்’ என்கிறார்கள்” என்று கூறினர்.

12 பிறகு எங்கள் பகைவர்களின் மத்தியில் வாழும் யூதர்கள் வந்து எங்களிடம் பத்துமுறை, “எங்களைச் சுற்றிலும் எங்கள் பகைவர்கள் உள்ளனர். நாங்கள் திரும்பினாலும், அங்கேயும் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

13 எனவே நாம் கொஞ்சம் பேரைச் சுவரோடுள்ள பள்ளமான இடங்களில்விட்டேன். சுவர்களில் உள்ள துவாரங்களில் அவர்களை நிற்க வைத்தேன். நான் அவர்களைக், அவர்களது குடும்பங்களோடு அருகில் வாள்கள், ஈட்டிகள், மற்றும் வில்லுகளோடு நிறுத்தினேன். 14 நான் மொத்த சூழ்நிலையையும் பார்த்தேன். பிறகு நான் எழுந்து நின்று முக்கியமான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “நமது பகைவர்களுக்குப் பயப்படவேண்டாம். நமது ஆண்டவரை நினைவு கொள்ளுங்கள். கர்த்தர் பெரியவராயும் வல்லமை உடையவராயும் இருக்கிறார். நீங்கள் உங்கள் சகோதரர்கள், குமாரர்கள், குமாரத்திகள் ஆகியோருக்காகச் சண்டையிடவேண்டும். உங்கள் மனைவிகளுக்காகவும் வீடுகளுக்காகவும் போரிடவேண்டும்” என்று கூறினேன்.

15 பிறகு நாங்கள் அவர்களின் திட்டங்களை அறிந்துகொண்டதை எங்கள் பகைவர்கள் கேள்விப்பட்டனர். அவர்களது திட்டங்களைத் தேவன் அழித்துவிட்டதை அவர்கள் அறிந்தனர். எனவே நாங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்குத் திரும்பிப்போனோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் தங்கள் வேலையைச் செய்தனர். 16 அந்த நாளில் இருந்து, எனது பாதி ஜனங்கள் சுவர்வேலை செய்தனர். மீதி பாதி ஜனங்கள் ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றோடு காவல் காத்தனர். படை அதிகாரிகள் சுவரைக்கட்டும் யூதாவின் ஜனங்களுக்குப் பின்னால் நின்றனர். 17 கட்டிடம் கட்டுவோரும் அவர்களது உதவியாளர்களும் ஒரு கையில் கருவியையும், இன்னொரு கையில் ஆயுதத்தையும் வைத்திருந்தனர். 18 கட்டிடம் கட்டும் ஒவ்வொருவரும் வேலை செய்யும்போது தன் இடுப்பில் வாளை அணிந்திருந்தனர். எனக்கு அடுத்திருந்தவன் எச்சரிக்கை செய்வதற்கு எக்காளம் ஊதுபவனாக இருந்தான். 19 பிறகு நான் பிரதான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “இது மிகப் பெரிய வேலை. நாம் சுவர் முழுவதும் பரவியிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம். 20 எனவே, நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்டால் அந்த இடத்திற்கு ஓடிப்போங்கள். அங்கே நாம் அனைவரும் கூடுவோம். தேவன் நமக்காக போரிடுவார்” என்று சொன்னேன்.

21 எனவே, நாங்கள் எருசலேம் சுவரில் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருந்தோம். பாதிபேர் ஈட்டிகளை வைத்திருந்தார்கள். நாங்கள் காலை வெளிச்சம் வந்தது முதல் இரவில் நட்சத்திரம் வரும்வரை வேலைச் செய்தோம்.

22 அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், “கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்” என்று சொன்னேன். 23 எனவே நானாகிலும் எனது சகோதரராகிலும் எனது வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல் காக்கிற சேவகராகிலும் எங்கள் ஆடைகளைக் கழற்றிபோடாமல் இருந்தோம். எல்லா நேரமும் எங்களிடம் ஆயுதம் தயாராக இருந்தது. நாங்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது கூட ஆயுதம் தயாராக இருந்தது.

நெகேமியா ஏழை ஜனங்களுக்கு உதவுகிறான்

ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள். சிலர், “எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தானியங்களைப் பெறவேண்டும்” என்றனர்.

மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு ராஜாவிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் குமாரர்களும் அவர்களது குமாரர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் குமாரத்திகளையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.

நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன். நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன். நான் அந்த ஜனங்களிடம், “நமது யூத சகோதரர்கள் மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். நாங்கள் அவர்களைத் திரும்ப விலைகொடுத்து வாங்கி, அவர்களை விடுதலைச்செய்ய எங்களால் இயன்றதைச் செய்தோம். இப்பொழுது, மீண்டும் நீங்கள் அவர்களை அடிமைகளைப்போன்று விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.

அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நான் தொடர்ந்து பேசினேன். நான் அவர்களிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பது சரியில்லை. நீங்கள் தேவனுக்குப் பயந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற ஜனங்கள் செய்வதுபோன்ற வெட்கப்படத்தக்கச் செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. 10 எனது ஜனங்களே, எனது சகோதரர்களே, நானும் கூட அந்த ஜனங்களுக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கடன்களுக்கு வட்டி கொடுக்குமாறு பலவந்தப்படுத்துவதை விட வேண்டும். 11 நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன்.

12 பிறகு அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும், “நாங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் அவர்களிடம் மேலும் எதையும் கேட்கமாட்டோம். நெகேமியா, நீ சொன்னபடியே நாங்கள் செய்வோம்” என்றனர்.

பிறகு நான் ஆசாரியர்களை அழைத்தேன். நான் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தேன். 13 பிறகு நான் எனது ஆடைகளின் மடிப்புகளை உதறிப்போட்டேன். நான், “தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத எவரையும் தேவன் இவ்வாறே உதறிப்போடுவார். தேவன் அவர்களைத் தமது வீடுகளிலிருந்து உதறுவார். அவர்கள் தமது சம்பாத்தியத்தை எல்லாம் இழப்பார்கள். அம்மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்” என்றேன்.

நான் இவற்றைச் சொல்லி முடித்தேன். அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் “ஆமென்” என்றனர். அவர்கள் கர்த்தரை துதித்தனர். எனவே ஜனங்கள் அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.

14 அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். 15 ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. 16 நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.

17 நான் ஒழுங்காக 150 யூதர்களை எனது பந்தியில் உண்ண வைத்தேன். சுற்றியிருந்த தேசங்களிலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்தேன். 18 ஒவ்வொரு நாளும் நான் இவ்வளவு உணவு தான் எனது பந்தியில் பரிமாறவேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு பசு, ஆறு நல்ல ஆடு, பல வகை பறவைகள் ஆகியவை. பத்து நாட்களுக்கு ஒருமுறை எனது பந்தியில் எல்லாவகை திராட்சைரசமும் கொண்டு வரவேண்டும். எனினும் நான் ஆளுநருக்கு ஒதுக்கப்படவேண்டிய உணவே வேண்டுமென வற்புறுத்தியதில்லை. எனது உணவுக்காகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துமாறு நான் ஜனங்களை எப்பொழுதும் வற்புறுத்தியதில்லை. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். 19 தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center