Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 25-27

அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

25 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, அம்மோன் ஜனங்களை நோக்கி அவர்களுக்கு எதிராக எனக்காகப் பேசு. அம்மோன் ஜனங்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனது பரிசுத்தமான இடங்கள் அழிக்கப்பட்டபோது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோது அதற்கு விரோதமாக இருந்தீர்கள். யூதாவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு விரோதமாக இருந்தீர்கள். எனவே கிழக்கே உள்ள ஜனங்களிடம் உன்னைக் கொடுப்பேன். அவர்கள் உன் தேசத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது படைவீரர்கள் உனது நாட்டில் தம் கூடாரங்களை அமைப்பார்கள். அவர்கள் உங்களிடையே வாழ்வார்கள். அவர்கள் உங்கள் பழங்களைத் தின்று உங்கள் பாலைக் குடிப்பார்கள்.

“‘நான் ரப்பா நகரத்தை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும் நாட்டை ஆட்டுக் கிடையாகவும் ஆக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய். கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: இஸ்ரவேல் அழிக்கப்பட்டதற்காக நீ மகிழ்ச்சி அடைந்தாய். நீ உன் கைகளைத் தட்டி கால்களால் மிதித்தாய். நீ இஸ்ரவேல் தேசத்தை கேலி செய்து அவமதித்தாய். எனவே, நான் உன்னைத் தண்டிப்பேன். நீ, போரில் வீரர்கள் கைப்பற்றத்தக்க விலை மதிப்புள்ள பொருட்களாவாய். நீ உனது நிலத்தை இழப்பாய். தொலைதூர நாடுகளில் நீ மரித்துப்போவாய். நான் உனது நாட்டை அழிப்பேன்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

மோவாப் மற்றும் சேயீருக்கு எதிரான தீர்க்கதரிசனம்

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, ‘யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’ மோவாபின் தோள்களை நான் வெட்டுவேன். அதன் எல்லையோரங்களில் உள்ள நகரங்களை நான் எடுத்துக்கொள்வேன். தேசத்தின் மகிமையையும் பெத்யெசிமோத்தையும், பாகால் மெயோனையும் கீரியாத்தாயீமையும் எடுத்துக்கொள்வேன். 10 பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள். 11 எனவே, நான் மோவாபைத் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

ஏதோமிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்

12 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்.” 13 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் ஏதோமைத் தண்டிப்பேன். நான் ஏதோமிலுள்ள மனிதர்களையும் விலங்குகளையும் அழிப்பேன். நான் தேமான் முதல் தேதான் வரையுள்ள ஏதோம் நாடு முழுவதையும் அழிப்பேன். ஏதோமியர்கள் போரில் கொல்லப்படுவார்கள். 14 நான் இஸ்ரவேலர்களாகிய என் ஜனங்களைப் பயன்படுத்தி, ஏதோமைப் பழிவாங்குவேன். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் ஏதோமிற்கு விரோதமாக என் கோபத்தைக் காட்டுவார்கள், பிறகு ஏதோம் ஜனங்கள், அவர்களை நான் தண்டித்ததை அறிவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பெலிஸ்தியர்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பெலிஸ்தியர்கள் பழிவாங்க முயன்றனர். அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் தமக்குள் கோபத்தை நீண்ட காலமாக எரியவிட்டனர்!” 16 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன், ஆம், நான் கிரேத்தாவிலிருந்து வந்த அந்த ஜனங்களை அழிப்பேன். கடற்கரையோரமாக வாழ்கிற அனைவரையும் நான் அழிப்பேன். 17 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். நான் பழிவாங்குவேன். எனது கோபம் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்படி நான் செய்வேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!”

தீருவைப்பற்றிய துக்கச் செய்தி

26 பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமைப்பற்றி தீரு கெட்டவற்றைச் சொன்னது: ‘ஆ, ஆ! ஜனங்களைப் பாதுகாக்கிற நகரவாசல் அழிக்கப்பட்டது! நகரவாசல் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நகரம் (எருசலேம்) அழிக்கப்படுகிறது எனவே அதிலிருந்து எனக்கு ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்!’”

ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கடற்கரை அலைகளைப்போன்று வருவார்கள்.”

தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப்போன்று ஆக்குவேன். தீருவானது மீன் பிடிப்பதற்கான வலைகள் விரித்து வைப்பதற்குரிய இடமாக ஆகும். நான் இதைச் சொன்னேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு, போரில் வீரர்கள் எடுக்கத்தக்கதான விலைமதிப்புள்ள பொருளாகும். அவளது மகள்கள் (சிறு நகரங்கள்), முக்கிய பிராதான நிலத்தில் போரில் கொல்லப்படுவார்கள். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்று அறிவார்கள்.”

தீருவை நேபுகாத்நேச்சார் தாக்குவான்

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள். நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள மகள்களை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான். உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான். 10 அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும். 11 பாபிலோன் அரசன் நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 உனது செல்வங்களை நேபுகாத்நேச்சாரின் ஆட்கள் எடுத்துக்கொள்வார்கள். நீ விற்க விரும்புகிற பொருட்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன் சுவர்களை உடைத்தெறிவார்கள், கல்லாலும் மரத்தாலுமான இன்பமான வீடுகளை அழித்துக் குப்பையைப்போன்று கடலில் எறிவார்கள். 13 எனவே, நான் உனது மகிழ்ச்சியான பாடல் ஒலியை நிறுத்துவேன். ஜனங்கள் உனது சுரமண்டல ஒலியை இனிக் கேட்கமாட்டார்கள். 14 நான் உன்னை வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலையைப் பரப்புவதற்குரிய இடமாவாய்! நீ மீண்டும் கட்டப்படமாட்டாய். ஏனென்றால், கர்த்தராகிய நான் பேசினேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பிற நாடுகள் தீருக்காக அழும்

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும். 16 பிறகு அந்நாடுகளில் உள்ள தலைவர்கள் தம் சிங்காசனத்தை விட்டு இறங்கி தம் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தம் சிறப்பிற்குரிய ஆடைகளை அகற்றிவிடுவார்கள். அவர்கள் தம் அழகான ஆடைகளை அகற்றுவார்கள். பிறகு அவர்கள் தம் நடுக்கமாகிய ஆடையை (பயம்) அணிந்துகொள்வார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து அச்சத்தால் நடுங்குவார்கள். நீ இவ்வளவு விரைவாக அழிக்கப்பட்டதை எண்ணி அவர்கள் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்:

“‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய்.
    ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர்.
நீ புகழோடு இருந்தாய்.
    இப்போது நீ போய்விட்டாய்!
கடலில் நீ பலத்தோடு இருந்தாய்.
    உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள்.
முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.
18 இப்பொழுது நீ விழும் நாளில்
    தீவுகளில் உள்ள நாடுகள் அச்சத்தால் நடுங்குகின்றன.
நீ பல குடியிருப்புக் கூட்டங்களைக் கடலோரமாகத் தொடங்கினாய்.
    இப்பொழுது, நீ வீழ்ச்சியடையும் அன்று கடலோர நாடுகள் அச்சத்தால் நடுங்குவார்கள்.’”

19 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “தீரு, நான் உன்னை அழிப்பேன். நீ ஒரு பழைய வெறுமையான நகரமாவாய். அங்கு எவரும் வாழமாட்டார்கள். கடல் பொங்கி உன்மேல் பாயும்படி செய்வேன். பெருங்கடல் உன்னை மூடிவிடும். 20 நான் உன்னை மரித்த மனிதர்கள் இருக்கின்ற ஆழமான பாதாளத்திற்கு அனுப்புவேன். நீ நீண்ட காலத்திற்கு முன்னால் மரித்தவர்களோடு சேர்வாய். நீ குடியேறாமல் இருக்கும்படி தொடக்க காலம் முதல் பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடு நான் உன்னைத் தங்கச் செய்வேன். பிறகு உன்னில் எவரும் வாழமாட்டார்கள். உயிர்கள் வாழும் இடத்தில் நீ இருக்கமாட்டாய்! 21 பிற ஜனங்கள் உனக்கு ஏற்பட்டதைப் பார்த்து அஞ்சுவார்கள். நீ முடிந்துபோவாய். ஜனங்கள் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன்னை மீண்டும் காணமாட்டார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொல்வது இதுதான்.

கடல் வியாபாரத்தின் மையமாக இருந்த தீரு

27 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார். “மனுபுத்திரனே, தீருவைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. தீருவைப்பற்றி இவற்றைக் கூறு: ‘தீரு, நீ கடல்களுக்குக் கதவாக இருக்கிறாய், பல நாடுகளுக்கு நீ வியாபாரி. கடற்கரையோரமாக உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறாய். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘தீருவே, நீ மிக அழகானவள் என்று எண்ணுகிறாய்.
    நீ முழுமையான அழகுடையவள் என்று எண்ணுகிறாய்!
உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல்
    எல்லையாக இருக்கிறது.
உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும்
    கப்பலைப்போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால்
    உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள்.
லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால்
    பாய்மரங்களைச் செய்தார்கள்.
பாசானின் கர்வாலி மரங்களினால்
    உன் துடுப்புகளைச் செய்தார்கள்.
சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால்
    உன் கப்பல் தளத்தை செய்தார்கள்.
    அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.
உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள
    சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள்.
    அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது.
உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது.
    அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.
உனது படகுகளை சீதோன் அர்வாத் என்னும் நகரங்களின் ஜனங்கள் உங்களுக்காக ஓட்டினார்கள்.
    தீரு, உன் ஞானிகள் உனது கப்பலில் மாலுமிகளாக இருப்பார்கள்.
கேபாரின் நகரத்து மூப்பர்களும் ஞானிகளும்
    கப்பலில் உள்ள பலகைகளை ஒன்றோடொன்றை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் அவற்றிலுள்ள மாலுமிகளும்
    உன்னுடன் வியாபாரம் செய்வதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.

10 “‘உனது படையில் பெர்சியரும் லூதியரும் பூத்தியரும் இருந்தனர். அவர்கள் உனது போர் வீரர்கள். அவர்கள் தமது கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உன் நகரத்திற்கு பெருமையும், மகிமையும் கொண்டுவந்தனர். 11 அர்வாத் மற்றும் சிலிசியாவின் ஆண்கள் உனது சுவரைச் சுற்றிலும் காவல் காத்தார்கள். கம்மாத் ஆண்கள் உன் கோபுரங்களில் இருந்தனர். அவர்கள் தம் கேடயங்களை உனது நகரைச் சுற்றியுள்ள சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உனது அழகை முழுமையாக்கினர்.

12 “‘தர்ஷீஸ் ஊரார் உன்னுடைய சிறந்த வாடிக்கையாளர்கள். அவர்கள் வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் மற்றும் நீ விற்பனை செய்த சிறந்த பொருட்களை வியாபாரம் செய்தனர். 13 கிரீஸ், துருக்கி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதி ஜனங்கள் உன்னோடு வணிகம் செய்தனர். அவர்கள் அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் வியாபாரம் செய்தனர். 14 தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர். 15 தேதான் ஜனங்கள் உன் வியாபாரிகளாய் இருந்தார்கள். நீ உன் பொருட்களைப் பல இடங்களில் விற்றாய். ஜனங்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவந்தனர். 16 அராம் உன்னோடு வியாபாரம் செய்ய வந்தது. ஏனென்றால், உன்னிடம் பல நல்ல பொருட்கள் இருந்தன. அராம் ஜனங்கள் மரகதங்களையும். இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும், உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.

17 “‘யூதா ஜனங்களும், இஸ்ரவேல் ஜனங்களும் உன்னுடன் வியாபாரம் செய்யவந்தனர். கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம் ஆகியவற்றை உன்னிடம் வாங்க வந்தனர். 18 தமஸ்கு சிறந்த வாடிக்கையாளர். உன்னிடமிருந்த அற்புதமான பொருட்களுக்காக உன்னோடு வியாபாரம் செய்ய வந்தார்கள். கெல்போனின் திராட்சைரசத்தையும், வெண்மையான ஆட்டு மயிரையும் உனக்கு விற்றார்கள். 19 தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள். 20 தேதானின் ஆட்கள் நல்ல வியாபாரம் செய்தனர். அவர்கள் இரதங்களுக்குப் போடுகிற இரத்தினக் கம்பளங்களை உன்னோடு வியாபாரம் பண்ணினார்கள். 21 அரபியரும் கேதாரின் எல்லா தலைவர்களும் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளையும், ஆட்டுக் கடாக்களையும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 22 சேபா, ராமா நகரங்களில் உள்ளவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தனர். மேல்தரமான எல்லா மணப்பொருட்களையும், எல்லா இரத்தினக் கற்களையும், பொன்னையும் உன் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். 23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தார்களும் சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 24 இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத் தையலாடைகளும் அடங்கிய புடவைக் கட்டுக்களையும் விலை உயர்ந்த துணிகள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப் பெட்டிகளையும் கொண்டுவந்து உன்னோடு வியாபாரம் செய்தனர். இவைகளையே அவர்கள் உன்னோடு வியாபாரம் செய்தனர். 25 தர்ஷீசின் கப்பல்கள் நீ விற்றப் பொருட்களைக் கொண்டுபோனார்கள்.

“‘தீரு, நீயும் ஒரு சரக்குக் கப்பலைப்போன்றவள்.
    நீ கடலில் செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்.
26 கப்பலைச் செலுத்துகிறவர்கள் ஆழமான தண்ணீரில் உன்னை அழைத்துக்கொண்டு போனார்கள்.
    ஆனால் கடலில் உன் கப்பலை பலமான கிழக்குக் காற்று அழித்தது.
27 உனது செல்வங்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கும்.
    நீ விற்க வைத்திருந்த செல்வமும் வாங்கிய செல்வமும் கடலுக்குள் மூழ்கும்.
உனது கப்பலாட்களும், மாலுமிகளும், கப்பலைச் செப்பனிடுகிறவர்களும் உன் வியாபாரிகளும்
    உன்னில் உள்ள எல்லாப் போர் வீரர்களும்
கடலுக்குள் மூழ்குவார்கள்.
    இது, நீ அழியும் நாளில் நிகழும்!

28 “‘நீ உனது வியாபாரிகளைத் தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினாய்.
    அந்த இடங்கள் உனது மாலுமியின் அழுகுரலைக் கேட்டு அச்சத்தால் நடுங்கும்!
29 கப்பலைச் செலுத்தும் முழுக் குழுவும் கப்பலை விட்டுக் குதிக்கும்.
    கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தம் கப்பல்களை விட்டுக் குதித்து கரையை அடைவார்கள்.
30 அவர்கள் உன்னைப்பற்றி துக்கப்படுவார்கள்.
    அவர்கள் அழுவார்கள்.
    அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்.
    அவர்கள் சாம்பலில் புரளுவார்கள்.
31 அவர்கள் உனக்காகத் தம் தலையை மொட்டையடிப்பார்கள்.
    அவர்கள் துக்கத்தின் ஆடையை அணிவார்கள்.
அவர்கள் உனக்காக மரித்துப்போனவர்களுக்காக அழுவதுபோன்று அழுவார்கள்.

32 “‘அவர்கள் தம் பலத்த அழுகையில், உன்னைப்பற்றிய இந்தச் சோகப் பாடலைப் பாடி உனக்காக அழுவார்கள்.

“‘தீருவைப்போன்று யாருமில்லை!
    தீரு கடல் நடுவில் அழிக்கப்படுகிறது!
33 உன் வியாபாரிகள் கடல் கடந்து போனார்கள்.
    உனது பெருஞ்செல்வம் மற்றும் உன் சந்தையின் மூலம் நீ பலரைத் திருப்திப்படுத்தினாய்.
    நீ பூமியின் அரசர்களைச் செல்வர்கள் ஆக்கினாய்!
34 ஆனால் இப்பொழுது கடல் அலைகளால்
    ஆழங்களில் உடைக்கப்பட்டாய்.
நீ விற்ற அனைத்துப் பொருட்களும்
    உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!
35 கடலோரங்களில் வாழும் ஜனங்கள்
    உன்னைப்பற்றி அறிந்து திகைக்கிறார்கள்.
அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள்.
    அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.
36 பிற நாடுகளில் உள்ள வியாபாரிகள்
    உனக்காக பரிகசிப்பார்கள்.
உனக்கு நிகழ்ந்தவை ஜனங்களைப் பயப்படச் செய்யும், ஏனென்றால்,
    நீ முடிந்துபோனாய்.
    நீ இனி இருக்கமாட்டாய்.’”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center