Beginning
தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்
31 எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.
2 ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார்.
3 எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார்.
அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். 5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.
6 இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். 7 பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.
8 அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். 9 அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள்.
கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.
தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்
32 நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு அரசன் நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2 இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங்கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும். 3 ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள். 4 குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள். 5 நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள்.
6 ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான். 7 அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது.
8 ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.
கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
9 உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும். 10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.
11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள். 12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன. 13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.
15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும். 17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். 18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.
19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும். 20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
33 பாருங்கள், நீங்கள் போரை உருவாக்குகிறீர்கள். ஜனங்களிடமிருந்து பொருளைத் திருடிக்கொள்கிறீர்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து எதையும் திருடமாட்டார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள். ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் திருடுவதை நிறுத்தும்போது. மற்ற ஜனங்கள் உங்களிடமிருந்து திருடத் தொடங்குவார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புவதை நிறுத்தும்போது, மற்ற ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவார்கள். பிறகு நீங்கள்
2 “கர்த்தாவே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் உமது உதவிக்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தாவே ஒவ்வொரு காலையிலும் பெலத்தைக் கொடும்.
நாங்கள் தொல்லைக்குட்படும்போது எங்களைக் காப்பாற்றும்.
3 உமது வல்லமையான குரல் ஜனங்களை அச்சுறுத்தும், அவர்கள் உம்மிடமிருந்து ஓடிப்போவார்கள்.
உமது மகத்துவம் நாடுகளை ஓடிப்போக வைக்கும்” என்பீர்கள்.
4 நீங்கள் போரில் பொருட்களைத் திருடினீர்கள். அப்பொருட்கள் உம்மிடமிருந்து எடுக்கப்படும். ஏராளமான ஜனங்கள் வந்து, உங்கள் செல்வங்களை எடுப்பார்கள். வெட்டுக்கிளிகள் வந்து உங்கள் பயிர்களை உண்ட காலத்தைப்போன்று இது இருக்கும்.
5 கர்த்தர் மிகப் பெரியவர். அவர் மிக உயரமான இடத்தில் வாழ்கிறார். கர்த்தர் சீயோனை நேர்மையாலும் நன்மையாலும் நிரப்புவார்.
6 எருசலேமே நீ செழிப்பாயிருக்கிறாய். நீ ஞானம் மற்றும் அறிவில் செழிப்புடையவள். நீ கர்த்தரை மதிக்கிறாய். அது உன்னைச் செல்வச் செழிப்புள்ளவளாகச் செய்கிறது. எனவே, நீ தொடர்ந்து இருப்பாய் என்பதை நீ அறிந்துகொள்ளலாம்.
7 ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள்.
சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள். 8 சாலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எவரும் தெருக்களில் நடந்துகொண்டிருக்கவில்லை.
ஜனங்கள் தாங்கள் செய்த உடன்படிக்கையை உடைத்துள்ளனர். சாட்சிகளிலிருந்து நிரூபிக்கப்படுவதை ஜனங்கள் நம்ப மறுக்கின்றனர். எவரும் மற்ற ஜனங்களை மதிக்கிறதில்லை. 9 நிலமானது நோயுற்று செத்துக்கொண்டிருக்கிறது. லீபனோன் வெட்கி வாடுகிறது. சாரோன் பள்ளத்தாக்கு வறண்டு காலியாக உள்ளது. பாசானும் கர்மேலும் ஒரு காலத்தில் அழகான செடிகளை வளர்த்தன. ஆனால் இப்போது அந்தச் செடிகள் வளருவதை நிறுத்தியிருக்கின்றன.
10 கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன். 11 நீங்கள் பயனற்ற செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அவை பதரைப்போலவும் வைக்கோலைப்போலவும் இருக்கும். அவை எதற்கும் பயனற்றவை. உங்கள் சுவாசம் நெருப்பைப்போன்றது. அது உங்களை எரிக்கும். 12 ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.
13 “வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப்பற்றி அறிந்துகொள்வீர்கள்.”
14 சீயோனில் உள்ள பாவிகள் பயந்துகொண்டிருக்கிறார்கள். தீயச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிற ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்கள், “எங்களில் எவரும் அழிக்கும் இந்த நெருப்பினூடே உயிர் வாழ முடியுமா? என்றென்றும் எரிந்துகொண்டிருக்கிற இந்நெருப்பின் அருகில் எவரால் வாழமுடியும்?”
15 நல்லதும் நேர்மையானதுமான ஜனங்கள், பணத்துக்காக மற்றவர்களைத் துன்புறுத்தாதவர்கள் அந்த நெருப்பிலிருந்து தப்பமுடியும். அந்த ஜனங்கள் லஞ்சம் பெற மறுக்கிறார்கள். மற்றவர்களைக் கொலை செய்வதற்குரிய திட்டங்களைக் கவனிக்க மறுக்கிறார்கள். தீயவற்றைச் செய்யத் திட்டம் போடுவதைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். 16 உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.
17 உங்கள் கண்கள் அரசரின் (தேவன்) அழகைப் பார்க்கும். நீங்கள் பெரிய தேசத்தைப் பார்ப்பீர்கள். 18-19 கடந்த காலத்தில் நீங்கள் பெற்றிருந்த தொல்லைகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். “வேறு நாடுகளிலிருந்து வந்த அந்த ஜனங்கள் எங்கே? நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியுடைய அந்த அதிகாரிகளும் வரி வசூலிப்பவர்களும் எங்கே? நமது பாதுகாப்புக் கோபுரங்களை எண்ணிய ஒற்றர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்”.
எருசலேமை தேவன் காப்பாற்றுவார்
20 நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை. 21-23 ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது.உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களை கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது அரசர், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள். 24 அங்கே வாழ்கிற எவரும், “நான் நோயுற்றுள்ளேன்” என்று சொல்லமாட்டார்கள். அங்கே வாழ்கிற ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.
தேவன் தமது பகைவர்களைத் தண்டிப்பார்
34 அனைத்து நாடுகளே, அருகில் வந்து கவனியுங்கள் ஜனங்கள் அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும். பூமியும், பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் இவற்றைக் கவனிக்க வேண்டும். 2 எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார். 3 அவர்களின் உடல்கள் வெளியே எடுத்தெறியப்படும். உடல்களிலிருந்து நாற்றம் கிளம்பும், மலைகளில் இரத்தம் வடியும். 4 வானங்கள் புத்தகச் சுருளைப்போலச் சுருட்டப்படும். நட்சத்திரங்கள் திராட்சைக் கொடியின் இலைகள் அல்லது அத்திமர இலைகள்போல உதிரும். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் உருகிப்போகும். 5 “எனது வாளானது வானில் இரத்தத்தால் மூடப்படும்போது இது நிகழும்” என்று கர்த்தர் கூறுகிறார்.
பார்! கர்த்தருடைய வாள் ஏதோமை வெட்டிப்போடுகிறது. அந்த ஜனங்களை கர்த்தர் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். அவர்கள் மரிக்கவேண்டும்.
6 கர்த்தருடைய வாள் ஆட்டுக் குட்டிகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் பூசப்பட்டு, செம்மறியாட்டு கொழுப்பினால் வழுவழுப்பாக்கப்பட்டதாயும் இருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் போஸ்றாவிலும் ஏதோமிலும் கொல்வதற்கு இதுதான் நேரம் என்று முடிவு செய்தார். 7 எனவே, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள், பலமிக்க காளைகள் எல்லாம் கொல்லப்படும். அவற்றின் இரத்தத்தால் நாடு நிறைந்துவிடும். அதின் மண்ணானது கொழுப்பால் மூடப்படும்.
8 இவையனைத்தும் நிகழும். ஏனென்றால், கர்த்தர் தண்டனைக்கென்று ஒரு காலத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். கர்த்தர் ஒரு வருடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் சீயோனில் தாங்கள் செய்த பாவங்களுக்கு விலை தரவேண்டும்.
9 ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப்போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும். 10 இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். எவராலும் அதனை அணைக்க முடியாது. அதன் புகை ஏதோமிலிருந்து என்றென்றும் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்தப் பூமியானது சதாகாலமாக அழிக்கப்படும். மீண்டும் அந்த நாட்டின் வழியாக எந்த ஜனங்களாலும் பயணம் செய்யமுடியாது. 11 பறவைகளும் சிறு மிருகங்களும் அந்த நாட்டைச் சொந்தமாக்கும். ஆந்தைகளும் காக்கைகளும் அங்கே வாழும். “காலியான வனாந்திரம்” என்று அந்த நாடு அழைக்கப்படும்.
12 பிரபுக்களும் தலைவர்களும் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஆட்சி செய்ய அங்கே எதுவும் இருக்காது.
13 அங்குள்ள அழகான வீடுகளில் முட்செடிகளும் புதர்களும் வளரும். அந்த வீடுகளில் காட்டு நாய்களும், ஆந்தைகளும் வாழும். காட்டு மிருகங்கள் தம் வாழிடங்களை அங்கே அமைத்துக்கொள்ளும். அங்கு வளர்ந்துள்ள பெரிய புல்வெளிகளில் பெரிய பறவைகள் வாழும். 14 அங்கே காட்டுப் பூனைகள் ஓரிகளுடன் வாழும் காட்டு ஆடுகள் தம் நண்பர்களைக் கூப்பிடும். அங்கே சாக்குருவிகளும் ஓய்வெடுக்க இடம் தேடிக்கொள்ளும். 15 பாம்புகள் தங்கள் வீடுகளை அங்கே அமைத்துக்கொள்ளும். பாம்புகள் தங்கள் முட்டைகளை அங்கே இடும். அம்முட்டைகள் பொரித்து, சிறு பாம்புகள் இருட்டில் திரிந்துகொண்டிருக்கும். மரித்துப்போனவற்றைத் தின்னும் பறவைகள், பெண்கள் தம் நண்பர்களைப் பார்வையிடுவதுபோன்று சேர்ந்துகொள்ளும்.
16 கர்த்தருடைய புத்தகச்சுருளைப் பாருங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள். எதுவும் குறையாமல் இருக்கும். அந்த மிருகங்கள் சேர்ந்திருக்கும் என்று அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவற்றை ஒன்று சேர்ப்பதாகச் சொன்னார். எனவே தேவனுடைய ஆவி அவற்றை ஒன்று சேர்க்கும்.
17 அவர்களோடு என்ன செய்யவேண்டும் என்று தேவன் முடிவு செய்துவிட்டார். பிறகு அவர்களுக்காக தேவன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு கோடு வரைந்து, அவர்களின் நாட்டை அவர்களுக்குக் காட்டினார். எனவே என்றென்றைக்கும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொண்டு அவர்கள் ஆண்டாண்டு காலம் அங்கே வாழ்வார்கள்.
தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார்
35 வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும்.
2 வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந்திரமானது, லீபனோன் காடுகளைப்போலவும், கர்மேல் மலையைப்போலவும், சாரோன் பள்ளத்தாக்குபோலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள்.
3 பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். 4 ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். 5 குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். 6 முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். 7 இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.
8 அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.
9 அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது.
10 தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.
2008 by World Bible Translation Center