Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 29-31

யோபு அவனது பேச்சைத் தொடர்கிறான்

29 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.

யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது,
    பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன்.
அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது.
    தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.
நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன்.
    அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.
என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது.
    நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.

“நான் நகரவாயிலுக்குச் சென்று,
    பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்!
    நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள்.
    முதியோர் எழுந்து நின்றனர்.
    என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.
    பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகளை வாய்களில் வைத்தார்கள்.
10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள்.
    ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள்,
    என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன்.
    நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான்.
    உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன்.
    நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
15 குருடர்களுக்கு நான் கண்களானேன்.
    அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன்.
    முடவருக்கு நான் காலானேன்.
    அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன்.
    நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன்.
    நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன்.
    அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.

18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க
    வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல
    நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.
20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.
    என் கையிலுள்ள வில் புதுப்பெலன் கொண்டது.

21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள்.
    அவர்கள் எனது அறிவுரைக்காகக் காத்திருந்தபோது அமைதியாக இருந்தார்கள்.
22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை.
    என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள்.
    வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன்.
    அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
    என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன்.
    பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று,
    நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.

30 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
    அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
    அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
    எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
    மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
    அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
    மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
    முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
    தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!

“இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
    என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
    அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
    அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
    அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
    என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
    அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
    அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
    அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
    உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
    காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
    என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.

16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
    நான் விரைவில் மடிவேன்.
    துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
    என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
    என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
    நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.

20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
    நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
    என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
    புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
    ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.

24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
    மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
    ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
    நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
    இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
    நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
    நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
    என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
    துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.

31 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
    என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
    உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?
தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
    தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
    நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார்.

“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
    அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
    அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்!
நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
    என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால்,
    என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
    என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.

“நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
    அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
    பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
    அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
    நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!

13 “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
    அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,
14 நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
    நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?
15 என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
    நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார்.

16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
    விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
    நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
    என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
    மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
    என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
    நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. [a]
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
    என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
    நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
    அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.

24 “நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை.
    எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன்.
    தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
25 நான் செல்வந்தனாக இருந்தேன்.
    ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை!
நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன்.
    ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
26 நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ
    ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை.
27 சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு
    நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.
28 அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும்.
    நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.

29 “என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை.
    தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.
30 என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ
    என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
31 நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை
    என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள்.
32 அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி
    நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்.
33 பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள்.
    ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை.
34 ஜனங்கள் என்ன சொல்வார்களோ?
    என்று நான் அஞ்சியதில்லை.
அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை.
    நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை.
    என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை.

35 “ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்!
    நான் எனது நியாயத்தை விளக்கட்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன்.
    நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
36 அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன்.
    ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன்.
37 தேவன் அதைச் செய்தால்.
    நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும்.
    தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.

38 “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை.
    நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது.
39 நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன்.
    ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை.
40 நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால்
    அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான்.

யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center