Book of Common Prayer
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
2 நான் அமைதியாக இருக்கிறேன்.
என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்
132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
2 தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
3 தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
4 நான் தூங்கமாட்டேன்,
என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
5 கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.
6 எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
7 நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
8 கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
9 கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.
13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று
133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
மிகவும் நல்லதும் இன்பமுமானது.
2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2 ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
கர்த்தரைப் போற்றுங்கள்.
3 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
135 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
2 தேவனுடைய ஆலய முற்றத்தில்,
கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
நல்ல மனிதனாகிய யோபு
1 ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். 2 யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். 3 யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான்.
4 யோபுவின் மகன்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். 5 அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.
6 தேவதூதர்கள் [a] கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான்.
7 கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான்.
8 அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார்.
9 சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! 10 நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். 11 ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான்.
12 கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான்.
யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்
13 ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். 14 அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. 15 ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான்.
16 அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான்.
17 அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான்.
18 மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது மகன்களும் மகள்களும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். 19 அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது மகன்களின் மீதும், மகள்களின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான்.
20 யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான்.
21 “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.
22 இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.
எத்தியோப்பிய அதிகாரியும் பிலிப்புவும்
26 தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான்.
27 எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். 28 இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். 30 எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான்.
31 அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். 32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ,
“அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார்.
அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார்.
33 அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது.
அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” (A)
34 அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான். 35 பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.
36 அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான். 37 [a] 38 அதிகாரி இரதத்தை நிறுத்தக் கட்டளையிட்டான். பிலிப்புவும் அதிகாரியும் நீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான். 40 ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.
இயேசு தண்ணீர் மீது நடத்தல்(A)
16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.
மக்கள் இயேசுவைத் தேடுதல்
22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.
ஜீவ அப்பமான இயேசு
25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center