Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 131-135

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
    நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
    எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
நான் அமைதியாக இருக்கிறேன்.
    என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
    என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
    அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்

132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
    நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
நான் தூங்கமாட்டேன்,
    என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
    யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.

எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
    கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
    தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
    கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
    உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
    நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
    தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
    உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.

13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
    அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
    நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
    ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
    என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
    நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
    ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று

133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
    மிகவும் நல்லதும் இன்பமுமானது.
அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
    கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
    வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
    ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
    இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
    கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

135 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
    கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
தேவனுடைய ஆலய முற்றத்தில்,
    கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
    இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
    சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
    தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
    தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
    எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
    பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
    தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
    பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
    கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
    ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
    அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
    சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
    சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
    ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
    அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 7

ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்

என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள். எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள். ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள். அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிற பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.

ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன். பல முட்டாள் இளைஞர்களையும் பார்த்தேன். அவர்களில் ஒரு இளைஞன் மிகவும் அறிவீனனாக இருந்தான். அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான். அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது. 10 அந்தப் பெண் அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் ஒரு வேசியைப்போன்று ஆடையணிந்திருந்தாள். அவள் அவனோடு பாவம் செய்யத் திட்டமிட்டாள். 11 அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை. 12 அதனால் அவள் தெருக்களில் நடந்து அலைவாள். பிரச்சனைக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள். 13 அவள் அந்த இளைஞனைத் தழுவி முத்தமிட்டாள். அவள் வெட்கமில்லாமல், 14 “என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக்கொடுத்துவிட்டேன். 15 இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன். 16 என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு. 17 நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன். 18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம். 19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான். 20 அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.

21 அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின. 22 அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான். 23 வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத் தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.

24 மகன்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். 25 ஒரு மோசமான பெண் உன்னை அழைத்துச் செல்லும்படி வைத்துக்கொள்ளாதே. அவளது வழிகளை பின்பற்றிச் செல்லாதே. 26 பல ஆண்கள் விழுவதற்குக் காரணமாக அவள் இருந்திருக்கிறாள். அவள் பல ஆண்களை அழித்திருக்கிறாள். 27 அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.

1 யோவான் 5:13-21

நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு

13 தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14 எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15 நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.

16 கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.

18 தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19 நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20 தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21 ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.

யோவான் 11:55-12:8

55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். 56 மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். 57 ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.

பெத்தானியாவில் இயேசு(A)

12 பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.

யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.

இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center