Add parallel Print Page Options

கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள்

21 கர்த்தர் மோசேயிடம், 22 “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு. 23 படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.

24 “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்: 25 பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும். 26 அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும். 27 கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 28 ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன்.

மெராரி குடும்பத்தின் வேலைகள்

29 “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும். 30 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும். 31 நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும். 32 பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். 33 இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.

லேவியர் குடும்பங்கள்

34 கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். 35 படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.

36 கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். 37 எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.

38 கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். 39 படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 40 கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். 41 எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.

42 மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். 43 அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 44 மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். 45 எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.

46 எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். 47 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். 48 அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. 49 எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.

சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்

கர்த்தர் மோசேயிடம், “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.

எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.

தவறுக்குச் செலுத்தும் அபராதம்

கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.

“இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. 10 ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.

சந்தேகம்கொள்ளும் கணவர்கள்

11 கர்த்தர் மோசேயிடம், 12 “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். 13 அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம். 14 ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம். 15 இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.

16 “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி, 17 பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும். 18 ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும்.

19 “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது. 20 ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல. 21 இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும்.

“பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும். 22 நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும்.

23 “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும். 24 பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.

25 “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். 26 ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 27 அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள். 28 ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.

29 “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும். 30 ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். 31 அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.

நசரேயர்கள்

கர்த்தர் மோசேயிடம், “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிந்து வாழ வேண்டும் என்று விரும்பலாம். இந்த விரதகாலம் ஒருவன் தன்னையே முழுக்க கர்த்தருக்கு சில காலம் ஒப்படைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இத்தகையவனை ‘நசரேயன்’ என அழைப்பார்கள். இக்காலக் கட்டத்தில், அவன் திராட்சைரசமோ, போதை தரும் வேறு பானமோ குடிக்கக் கூடாது. அவன் திராட்சைரசம் மற்றும் மதுபானத்தின் காடியையோ குடிக்கக் கூடாது. திராட்சைரசத்தால் செய்த எவ்வித பானத்தையோ திராட்சைப் பழங்களையோ, காய்ந்த திராட்சைகளையோ உண்ணாமல் இருக்க வேண்டும். இந்த விரத காலத்தில் அவன் திராட்சைச் செடியின் எந்த உணவுப் பொருட்களையும், உண்ணக் கூடாது, அவன் திராட்சைப் பழத்தின் தோலையும் விதைகளையும் கூட உண்ணக்கூடாது.

“இந்த விரதகாலத்தில் அவன் தனது தலை முடியைக் கூட வெட்டிக் குறைத்துக்கொள்ளக் கூடாது. தனது விரத நாட்கள் முடியும் வரையில் அவன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அவன் தன் தலைமுடியை வளரவிட வேண்டும். அவனது தலை முடியானது அவன் தேவனுக்குச் செய்த பொருத்தனையின் ஒரு பகுதியாகும். அவன் அந்த முடியை வெட்டாமலிருப்பது தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதின் அடையாளம். எனவே விரதகாலம் முடிகிறவரை தனது தலைமுடியை நீளமாக வளரவிட வேண்டும்.

“இவ்விரதக் காலத்தில் ஒரு நசரேயன் பிணத்தின் அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறான். ஒரு வேளை அவனது தாயோ, தந்தையோ, அல்லது சகோதரனோ, சகோதரியோ கூட மரித்து போயிருக்கலாம். எனினும் அவன் அவர்களைத் தொடக் கூடாது. அது அவனைத் தீட்டு உள்ளவனாக ஆக்கும். அவன் தன்னைத் தனிப்பட்டவன் என்றும், தன்னை தேவனுக்கு முழுமையாகக் கொடுத்திருக்கிறான் என்பதையும் காட்ட வேண்டும். விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான். நசரேய விரதம் கொள்பவன், இன்னொருவனோடு இருக்கும்போது, தீடீரென்று அந்த மற்றவன் மரித்துப் போனதாக வைத்துக்கொள்வோம். அவனையறியாமலேயே மரித்தவனைத் தொட்டிருப்பானேயானால், அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு நிகழ்ந்தால் அவன் தலைமுடியை முழுக்க மழித்துக்கொள்ள வேண்டும். (அந்தத் தலை முடியானது அவனது விசேஷ அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.) ஏழாவது நாள் தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அன்றைக்குத்தான் அவன் தீட்டு இல்லாதவனாகிறான். 10 எட்டாவது நாள், நசரேய விரதம் கொள்ளும் அவன், இரண்டு புறாக்களையும் இரண்டு புறாக் குஞ்சுகளையும் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். அவன் இவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 11 பிறகு ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகாரப் பலியாகவும் இன்னொன்றைத் தகன பலியாகவும் தரவேண்டும். இந்த தகனபலியானது நசரேய விரதத்தில் அவன் செய்த பாவத்திற்குரிய காணிக்கையாகும். (அவன் பிணத்தின் அருகில் இருந்ததால் பாவம் செய்தவனாகக் கருதப்படுகிறான்.) அந்த வேளையில், அவன் தன் தலைமுடியை மீண்டும் தேவனுக்கு தருவதாக வாக்களிக்க வேண்டும். 12 அவன் மீண்டும் ஒருமுறை கர்த்தருக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து தனியாக சில காலம் நசரேய விரதம் இருக்க வேண்டும். அவன் ஓராண்டான ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்து அதை குற்ற பரிகார பலியாகக் கொடுக்க வேண்டும். அவன் விரதம் இருந்த நாட்களெல்லாம் மறக்கப்படும். எனவே, அவன் புதிதாக விரதம் அனுசரிக்க வேண்டும். அவன் முதலில் விரதம் இருக்கும்போது, பிணத்தைத் தொட்டதினால் தீட்டானதே இதற்குக் காரணம்.

13 “அவனது விரதகாலம் முடிந்தபிறகு, ஒரு நசரேயன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் போக வேண்டும். 14 அவன் தனது காணிக்கையை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். அவன்:

தகன பலிக்காக ஒரு வயதான, எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆட்டுக்குட்டியையும்;

பாவப்பரிகார பலிக்காக ஒரு வயதான, குறைபாடுகளற்ற ஒரு பெண் ஆட்டுக்குட்டியையும்,

சமாதான பலிக்காக குறைபாடுகளற்ற ஆட்டுக் கடாவையும்,

15 தானிய காணிக்கைக்காக கூடை நிறைய எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவில் செய்த அதிரசங்களையும்,

எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் காணிக்கையாக செலுத்த வேண்டும்.

16 “இவை அனைத்தையும் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்கவேண்டும். பிறகு, அவன் பாவப் பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்த வேண்டும். 17 புளிப்பில்லாத அதிரசங்கள் நிறைந்த கூடையை கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்க வேண்டும். சமாதான பலிக்காக அவன் ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். பிறகு அவன் தானிய காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் அளிக்க வேண்டும்.

18 “நசரேய விரதம் கொண்டவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் செல்ல வேண்டும். அவன் அங்கே கர்த்தருக்காக வளர்த்த தலை முடியை மழித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சமாதானப் பலிக்குக் கீழ் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.

19 “நசரேய விரதம் கொண்டவன், தன் தலை முடியை மழித்தபிறகு ஆசாரியன் வேகவைத்த ஆட்டுக்கடாவின் தோள்பாகத்தையும், கூடையில் உள்ள புளிப்பில்லாத அதிரசம் மற்றும் அடையையும் அவனுடைய உள்ளங்கையில் வைக்க வேண்டும். 20 பின்னர் ஆசாரியன் இவற்றை கர்த்தருக்கு முன் அசைவாட்டும் பலியாக ஏறெடுக்க வேண்டும். அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும் ஆசாரியனுக்கு உரியதாகும். ஆட்டுக் கடாவின் மார்க்கண்டத்தையும், தொடையையும் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலி செய்வார்கள். அவைகளும் ஆசாரியனுக்கு உரியதாகும். அதற்குப் பிறகு நசரேய விரதம் கொண்டவன், திராட்சை ரசம் குடிக்கலாம்.

21 “நசரேய விரதம் கொள்ளும் ஒருவன், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவையாகும். அவன் அனைத்து அன்பளிப்புகளையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் மிக அதிக அளவில் கர்த்தருக்கு அன்பளிப்பு தரும் வசதியைக் கொண்டிருக்கலாம். ஒருவன் அவ்வாறு மிகுதியாக அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குத்தந்தால் பிறகு அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவன் குறைந்தபட்சமாக நசரேய விதிகளில் சொல்லியபடியாவது காணிக்கை செலுத்த வேண்டும்” என்றார்.

ஆசாரியனின் ஆசீர்வாதங்கள்

22 கர்த்தர் மோசேயிடம், 23 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், சொல்ல வேண்டியதாவது: நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது,

24 “‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!
25 கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து
    அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!
26 உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக!
    அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!’ என்று சொல்லுங்கள்” என்றார்.

27 “இவ்வாறு ஆரோனும், அவனது மகன்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று கூறினார்.

பரிசுத்தக் கூடாரத்தை அர்ப்பணித்தல்

மோசே பரிசுத்தக் கூடாரத்தை அமைத்து முடித்தான். அந்நாளிலேயே அதனை கர்த்தருக்கு அர்ப்பணித்தான். மோசே கூடாரத்தையும் அதிலுள்ள பொருட்களையும், பலிபீடத்தையும் அதற்குரிய அனைத்து பொருட்களையும் அபிஷேகம் செய்தான். இவையனைத்துப் பொருட்களும் கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இது காட்டியது.

பிறகு இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இவர்கள் அவர்களது குடும்பத்தின் தலைவர்களும் கோத்திரங்களின் தலைவர்களும் ஆவார்கள். இவர்களே இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிடும் பொறுப்புடையவர்கள். இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றை கர்த்தருக்குக் கொடுத்தனர்.

கர்த்தர் மோசேயிடம், “தலைவர்களிடமிருந்து இந்த அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்திற்கான வேலைகளுக்கு இக்காணிக்கைகள் உதவியாயிருக்கும்படி இவற்றை லேவியர்களிடம் கொடு” என்று கூறினார்.

எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான். அவன் அவற்றில் இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு அந்த வண்டிகளும், மாடுகளும் தேவையாய் இருந்தன. பிறகு நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரி குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு இந்த வண்டிகளும் மாடுகளும் தேவையாய் இருந்தன. ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இவர்களின் வேலைக்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும்.

10 மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளை கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர். 11 கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.

12-83 பன்னிரெண்டு தலைவர்களில் ஒவ்வொரு வரும் தங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவை பின்வருமாறு:

ஒவ்வொரு தலைவனும் மூன்றேகால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளித் தட்டுக்களையும், ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளிக் கோப்பைகளையும் கொண்டு வந்தனர். இவ்விரண்டு காணிக்கைகளும் அதிகாரப்பூர்வமான அளவால் நிறுக்கப்பட்டன. வட்டமான கிண்ணங்களும், தட்டுகளும் எண்ணெயில் கலக்கப்பட்ட மெல்லிய மாவால் நிரப்பப்பட்டு இருந்தன. இது தானியக் காணிக்கைக்குப் பயன்படுவதாக இருந்தது. ஒவ்வொரு தலைவனும் பெரிய தங்கக் கரண்டியையும் கொண்டு வந்தனர். அது 4 அவுன்ஸ் எடையுள்ளதாய் இருந்தது. இக்கரண்டி நறுமணப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.

ஒவ்வொரு தலைவனும் ஒரு இளம் காளையைக் கொண்டு வந்தனர். அதோடு ஒரு ஆட்டுக் கடா, ஒரு வயதான ஒரு ஆண் ஆட்டுக்குட்டி ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். இம்மிருகங்கள் தகன பலிக்கு உரியவை. ஒவ்வொரு தலைவனும் பாவ பரிகார பலிக்குரியதாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தனர். அதோடு அவர்கள் 2 பசுக்களையும் 5 ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான 5 வெள்ளாட்டுக் கடாக்களையும், 5 ஆண் ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சமாதான பலிக்காகக் கொல்லப்பட்டன.

முதல் நாளில், யூதா கோத்திரத்தின் தலைவனான அம்மினதாபின் மகனான நகசோன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

இரண்டாம் நாளில், இசக்கார் குழுவின் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் அன்பளிப்புகளைச் கொண்டு வந்தான்.

நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவனான சேதேயூரின் மகனான எலிசூர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலுமியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவனான தேகுவேலின் மகன் எலியாசாப் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவனான பெதாசூரின் மகன் கமாலியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவனான கீதெயோனின் மகன் அபீதான் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவனான அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

பதினோறாம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவனான ஓகிரானின் மகன் பாகியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

பன்னிரெண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவனான ஏனானின் மகன் அகீரா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.

84 இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்களிடமிருந்து இவ்வாறு பல்வேறு அன்பளிப்புகள் வந்து சேர்ந்தன. அவர்கள் இவற்றை மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்து அர்ப்பணித்த நாட்களில் கொண்டு வந்தனர். அவர்கள் 12 வெள்ளிக் தட்டுகளையும், 12 வெள்ளிக் கோப்பைகளையும், 12 தங்கக் கரண்டிகளையும் கொண்டு வந்தனர். 85 ஒவ்வொரு வெள்ளித்தட்டும் முன்றே கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கோப்பையும் ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஆக மொத்தம் தட்டுகளும் கோப்பைகளும் சேர்ந்து 60 பவுண்டு அதிகாரப்பூர்வமான அளவு எடையுள்ள வெள்ளியாய் இருந்தது. 86 நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன.

87 ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன. 88 சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர்.

89 கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.