Add parallel Print Page Options

10 கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை. 12 நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள். 13 அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார்.

14 மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் மகன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன். 15 கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் மகள். சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான்.

16 கர்த்தர் மோசேயிடம் 17 “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும். 18 அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் மகள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.

ஜனங்கள் கணக்கிடப்படுதல்

26 பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் மகனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார். அவர், “இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிடுங்கள். 20 வயதும் அதற்கு மேலுமுள்ள ஆண்களைக் குடும்ப வாரியாகக் கணக்கிட்டு பட்டியல் செய்யுங்கள். இவர்களே இஸ்ரவேல் படையில் சேர்ந்து பணியாற்றும் தகுதி உடையவர்கள்” என்றார்.

இந்த நேரத்தில் ஜனங்கள் மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள். இது, யோர்தான் ஆறு எரிகோவிலிருந்து வந்து கடக்கும் இடமாகும். எனவே மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஜனங்களிடம் இங்கே பேசினர். அவர்கள், “நீங்கள் 20 வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட வேண்டும். கர்த்தர் மோசேயிடம் இந்த ஆணையை அளித்திருக்கிறார்” என்றனர்.

எகிப்திலிருந்து வெளியேறி வந்த ஜனங்களின் பட்டியல் இதுதான்:

ரூபன் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்கள் தான்: (ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்.) அந்தக் குடும்பங்களாவன:

ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தந்தையான ஆனோக்,

பல்லூவியர் குடும்பத்துக்குத் தந்தையான பல்லூ,

எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தந்தையான எஸ்ரோன்,

கர்மீயர் குடும்பத்துக்குத் தந்தையான கர்மீ.

இவர்கள் ரூபனின் குழுவில் உள்ள குடும்பத்தினர். இவர்களில் மொத்தம் 43,730 ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.

பல்லூவின் மகன் எலியாப். எலியாப்புக்கு மூன்று மகன்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள். 10 அப்போது பூமி பிளந்து கோராகையும் அவனைப் பின்பற்றியவர்களையும் விழுங்கிவிட்டது. அதினால் 250 பேர் மரித்துப் போனார்கள்! அது இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாய் இருந்தது. 11 ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை.

12 சிமியோனின் கோத்திரத்திலும் பல குடும்பங்கள் இருந்தன:

நேமுவேல் குடும்பத்தின் தந்தையான நேமுவேல்,

யாமினியர் குடும்பத்தின் தந்தையான யாமினி,

யாகீனியர் குடும்பத்தின் தந்தையான யாகீன்,

13 சேராகியர் குடும்பத்தின் தந்தையான சேராகி,

சவுலியர் குடும்பத்தின் தந்தையான சவுல்.

14 இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.

15 காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர்.

சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன்,

ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி,

சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,

16 ஒஸ்னியர் குடும்பத்தின் தந்தையான ஒஸ்னி,

ஏரியர் குடும்பத்தின் தந்தையான ஏரி,

17 ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத்,

அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி,

18 இவர்களே காத்தின் குடும்பத்திலுள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 40,500 பேர் இருந்தனர்.

19-20 யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்:

சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி,

பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி,

சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர்.

(யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.)

21 பாரேசின் மகன்களின் குடும்பத்தில்,

எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும்,

ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர்.

22 இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.

23 இசக்காரின் கோத்திரத்தில்,

தோலாவியர் குடும்பத்தின் தந்தையாக தோலாவும்

பூவாவியர் குடும்பத்தின் தந்தையாக பூவாவும்.

24 யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும்

சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர்.

25 இவர்கள் இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,300 பேர் இருந்தனர்.

26 செபுலோனியர் கோத்திரத்தில்,

சேரேத்தியர் குடும்பத்தின் தந்தையாக சேரேத்தும்,

ஏலோனியர் குடும்பத்தின் தந்தையாக ஏலோனும்,

யாலேயேலியர் குடும்பத்தின் தந்தையாக யாலேயேலும் இருந்தனர்.

27 இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர்.

28 யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு மகன்கள் இருந்தனர், இருவரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள். 29 மனாசேயின் குடும்பங்கள் பின்வருமாறு:

மாகீர்-மாகீரியர் குடும்பம் (மாகீர் கிலெயாத்தின் தந்தை)

கிலெயாத்-கிலெயாத்தின் குடும்பம்.

30 கிலெயாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

ஈயேசேர்-ஈயேசேரியரின் குடும்பம்.

ஏலேக்-ஏலேக்கியரின் குடும்பம். 31 அஸ்ரியேல்-அஸ்ரியேலரின் குடும்பம்.

சேகேம்-சேகேமியரின் குடும்பம்.

32 செமீதா-செமீதாவியரின் குடும்பம்.

ஏப்பேர்-ஏப்பேரியரின் குடும்பம்.

33 ஏப்பேரின் மகன் செலோப்பியாத். ஆனால் அவனுக்கு மகன்கள் இல்லை. மகள்கள் மட்டுமே இருந்தனர். மக்லாள், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவை அவர்களின் பெயர்களாகும்.

34 இவர்கள் மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 52,700 பேர் இருந்தனர்.

35 எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

சுத்தெலாகி-சுத்தெலாகியரின் குடும்பம்,

பெகேர்-பெகேரியரின் குடும்பம்,

தாகான்-தாகானியரின் குடும்பம்,

36 ஏரான் சுத்தெலாகியர் குடும்பத்தவன்.

இவனது குடும்பம் ஏரானியர் குடும்பம் ஆயிற்று.

37 இவர்கள் எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 32,500 பேர் இருந்தனர்.

இந்த ஜனங்கள் அனைவரும் யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்கள்:

38 பென்யமீனின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

பேலா-பேலாவியரின் குடும்பம்,

அஸ்பேல்-அஸ்பேலியரின் குடும்பம்,

அகிராம்-அகிராமியரின் குடும்பம்,

39 சுப்பாம்-சுப்பாமியரின் குடும்பம்,

உப்பாம்-உப்பாமியரின் குடும்பம்,

40 போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

ஆரேது-ஆரேதியரின் குடும்பம்,

நாகமான்-நாகமானியரின் குடும்பம்,

41 இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45, 600 பேர் இருந்தனர்.

42 தாணின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

சூகாம்-சூகாமியரின் குடும்பம்.

இது தாணின் கோத்திரத்திலிருந்து வந்த கோத்திரங்களாகும். 43 சூகாமியரின் கோத்திரத்தில் ஏராளமான குடும்பங்கள் இருந்தன. இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,400 பேர் இருந்தனர்.

44 ஆசேருடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

இம்னா-இம்னாவியரின் குடும்பம்,

இஸ்வி-இஸ்வியரின் குடும்பம்,

பெரீயா-பெரீயாவியரின் குடும்பம்,

45 பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்:

ஏபேர்-ஏபேரியரின் குடும்பம்,

மல்கியேல்-மல்கியேலியரின் குடும்பம்.

46 சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு மகள் இருந்தாள். 47 இவர்கள் அனைவரும் ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 53,400 பேர் இருந்தனர்.

48 நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்:

யாத்சியேல்-யாத்சியேலியரின் குடும்பம்,

கூனி-கூனியரின் குடும்பம்.

49 எத்சேர்-எத்சேரியரின் குடும்பம்.

சில்லேமின்-சில்லேமியரின் குடும்பம்.

50 இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர்.

51 எனவே மொத்தம் 601, 730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர்.

52 கர்த்தர் மோசேயிடம், 53 “இந்த நாடானது பங்கிடப்பட்டு இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோத்திரமும் போதுமான நிலத்தைப் பெற்றுக்கொள்ளும். 54 பெரிய கோத்திரம் மிகுதியான நிலத்தைப் பெறும். சிறிய கோத்திரம் குறைந்த அளவு நிலத்தைப் பெறும். அவர்கள் பெற்றுள்ள இந்த நாடானது சமமாகப் பங்கு வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும். 55 ஆனால் நீயோ சீட்டுக் குலுக்கல் முறை மூலமே எந்தப் பகுதி எந்தக் கோத்திரத்திற்கு உரியது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் தனது பங்கினைப் பெற வேண்டும். அப்பங்கானது கோத்திரத்தின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும். 56 சிறியதும் பெரியதுமான அனைத்து கோத்திரத்திற்கும் நிலங்கள் கொடுக்கப்படும். இதனை முடிவுசெய்ய சீட்டு குலுக்கல் முறையைக் கையாளவேண்டும்” என்றார்.

57 அவர்கள் லேவியின் கோத்திரத்தையும் எண்ணிக் கணக்கிட்டனர். லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

கெர்சோன்-கெர்சோனியரின் குடும்பம்.

கோகாத்-கோகாத்தியரின் குடும்பம்.

மெராரி-மெராரியரின் குடும்பம்.

58 ஆகிய இவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

லிப்னீயரின் குடும்பம்,

எப்ரோனியரின் குடும்பம்,

மகலியரின் குடும்பம்,

மூசியரின் குடும்பம்,

கோராகியரின் குடும்பம்

அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் 59 அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். இவளும் லேவியின் கோத்திரத்தில் உள்ளவள். அவள் எகிப்திலே பிறந்தவள். யோகெபேத்தும் அம்ராமும் ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். அவர்களுக்கு மிரியம் என்ற மகளும் உண்டு.

60 ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தந்தை. 61 ஆனால் நாதாபும் அபியூவும் மரித்துப்போனார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அக்கினியால் கர்த்தருக்கு பலியைச் செலுத்தினார்கள்.

62 லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்கு கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை.

63 மோசேயும் எலெயாசாராகிய ஆசாரியனும் சேர்ந்து அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்தபோது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். இந்த இடம் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் அருகில் இருந்தது. 64 பல ஆண்டுகளுக்கு முன்னால், சீனாய் பாலைவனத்தில் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். ஆனால் அவர்கள் மரித்துவிட்டனர். அவர்களில் யாரும் உயிரோடு இல்லை. 65 ஏனென்றால் அவர்கள் அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போவார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் அவர்கள் மரித்தார்கள். அவர்களில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். ஒருவன், எப்புன்னேயின் மகனான காலேப். இன்னொருவன் நூனின் மகனாகிய யோசுவா.

செலோப்பியாத்தின் மகள்கள்

27 செலோப்பியாத் ஏபேரின் மகன். ஏபேர் கிலெயாத்தின் மகன். கிலெயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். மனாசே யோசேப்பின் மகன். செலோப்பியாத்திற்கு ஐந்து மகள்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என் பவையாகும். இந்த ஐந்து பேரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று அங்கே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், தலைவர்கள் மற்றும் ஜனங்கள் முன்னால் நின்றனர்.

அந்த ஐந்து பேரும், “நாங்கள் பாலை வனத்தின் வழியாகப் பயணம் செய்தபோது எங்கள் தந்தை மரித்துப்போனார். அவரது மரணம் ஒரு இயற்கை மரணம். அவர் கோராவின் குழுவைச் சேர்ந்தவரல்ல. (கோரா கர்த்தருக்கு எதிராக மாறியவன்.) ஆனால் எங்கள் தந்தைக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் சொல்ல ஆண் வாரிசுகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் தொடர்ந்து வழங்கப்படாதது சரியல்ல. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் அவரது பெயர் முடிந்து போகிறது. ஆகையால் எங்கள் தந்தையின் சகோதரர்கள் பெற்ற நிலங்களில் ஒரு பங்கை எங்களுக்கும் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று முறையிட்டார்கள்.

இதனால் என்னச் செய்யலாம் என்று மோசே கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர் மோசேயிடம், “செலோப்பியாத்தின் மகள்கள் கூறுவது சரிதான். அவர்கள் தம் தந்தையின் சகோதரர்களோடு தங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவர்களின் தந்தைக்குரிய நிலத்தை இவர்களுக்கே கொடுக்கவும்.

“இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தச் சட்டத்தையும் ஏற்படுத்து: ‘ஒருவேளை ஒருவனுக்கு ஆண்பிள்ளை இல்லாவிடில் அவன் மரித்தபின் அவனுக்குரிய அனைத்தும் அவனது பெண் பிள்ளைகளுக்கு உரியதாகும். ஒருவனுக்கு பெண் குழந்தைகளும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது சகோதரர்களுக்கு உரியதாகும். 10 ஒருவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது தந்தையின் சகோதரர்களுக்கு உரியதாகும். 11 ஒருவனது தந்தைக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால் பிறகு அவன் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினருக்கு அவனுக்குரிய அனைத்தும் உரியதாகும். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு சட்டமாக வேண்டும்’” என்றார்.

புதிய தலைவராக யோசுவா

12 பிறகு கர்த்தர் மோசேயிடம், “யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மலைகள் ஒன்றின் மீது ஏறிச்செல். அங்கே நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்த பூமியை நீ பார்க்கலாம். 13 நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய். 14 சீன் என்னும் பாலைவனத்தில் தண்ணீர் விஷயமாக இஸ்ரவேல் ஜனங்கள் கலகம் செய்ததை நினைத்துப்பார். நீயும் உனது சகோதரன் ஆரோனும் நான் கூறியபடி செய்யவில்லை. நான் பரிசுத்தமானவர் என்பதை ஜனங்களுக்குக் காட்டி என்னை கனப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள்.” (இது சீன் என்னும் பாலைவனத்தில், காதேஸ் என்ற இடத்தில் மேரிபா தண்ணீருக்காக நிகழ்ந்தது.)

15 மோசே கர்த்தரிடம், 16 “ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது கர்த்தராகிய உமக்கு நன்கு தெரியும். கர்த்தாவே! இந்த ஜனங்களுக்கு ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்து விட வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்கிறேன். 17 இந்த ஜனங்களை இந்த நாட்டிலிருந்து அழைத்துப் போய் புதிய நாட்டில் சேர்க்கும் புதிய தலைவனை கர்த்தர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அதற்குப் பின்பு இந்த ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்று ஆகமாட்டார்கள்” என்றான்.

18 எனவே கர்த்தர் மோசேயிடம், “நூனின் மகனான யோசுவாவே புதிய தலைவன். அவன் மிகவும் ஞானம் உள்ளவன். அவனைப் புதிய தலைவனாக்கு. 19 முதலில் அவனை ஆசாரியனாகிய எலெயாசார் முன்பும் மற்ற ஜனங்கள் முன்பும் நிறுத்து. பிறகு அவனைத் தலைவனாக ஏற்படுத்து.

20 “நீ அவனைத் தலைவனாக்குவதை ஜனங்கள் காணும்படி செய். அப்போது ஜனங்கள் அவனுக்கு அடங்கி நடப்பார்கள். 21 யோசுவா எதைப்பற்றியாவது முடிவு எடுக்க வேண்டுமானால், அவன் ஆசாரியனாகிய எலெயாசார் முன் நிற்கவேண்டும். எலெயாசார் ஊரிமைப் பயன்படுத்தி கர்த்தருடைய பதிலை அறிந்துகொள்வான். பின் கர்த்தர் சொல்வதை யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் செய்ய வேண்டும். அவன், ‘போருக்குப் போங்கள்’ என்று சொன்னால் அவர்கள் போருக்குப் போவார்கள். அவன் ‘வீட்டிற்குப் போங்கள்’ என்று சொன்னால், அவர்கள் வீட்டிற்குப் போவார்கள்” என்றார்.

22 கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மோசே கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் முன்பு நிறக்குமாறு யோசுவாவிடம் மோசே கூறினான். 23 பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனை கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.

அனுதின பலிகள்

28 கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவர், “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தக் கட்டளையையும் கொடு. எனக்குரிய தானியக் காணிக்கையையும், பலிகளையும் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல். அவற்றில் தகனபலியும் ஒன்று. அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். கர்த்தருக்கு ஜனங்கள் கொடுக்க வேண்டிய பலிகளில் நெருப்பில் இடப்படும் தகன பலியும் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட வேண்டும். இவற்றில் ஒன்றைக் காலையிலும், மற்றொன்றைச் சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் பானங்களின் காணிக்கையோடு கொடுக்க வேண்டும். பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும். (சீனாய் மலையில் அவர்கள் இவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் இதனை நெருப்பில் தனகபலியாகச் செய்தனர். அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது.) அவர்கள் தகனபலியோடுச் சேர்த்து பானங்களின் காணிக்கையையும் கொடுத்தனர். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் அவர்கள் காற்படி திராட்சை ரசத்தையும் அளிக்க வேண்டும். பலிபீடத்தின் பரிசுத்தமான இடத்தில் பானங்களின் காணிக்கையை ஊற்ற வேண்டும். இது கர்த்தருக்குத் தரும் அன்பளிப்பாகும். மாலையில் சூரியன் அஸ்தமித்த பிறகு இன்னொரு ஆட்டுக்குட்டியைப் பலியிட வேண்டும். காலையில் செய்தது போலவே மாலையிலும் செய்ய வேண்டும். அதோடு பானங்களின் பலியையும் கொடுக்க வேண்டும். இந்தப் பலியானது நெருப்பின் மூலம் செலுத்தப்பட வேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்குப் பிடிக்கும்.”

ஓய்வு நாள் பலிகள்

“ஓய்வு நாளுக்கு, நீங்கள் ஒரு வயதான 2 ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும். அவை பழுதற்றதாக இருக்க வேண்டும். அதோடு தானியக் காணிக்கையையும் கொடுக்க வேண்டும். மெல்லிய மாவிலே பத்தில் இரண்டு பங்கினை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து தரவேண்டும். பானங்களின் காணிக்கையையும் தரவேண்டும். 10 இது ஓய்வு நாளுக்குரிய சிறப்பான பலியாகும். இது, வழக்கமான தினப் பலிகளோடு சேர்த்து கொடுக்க வேண்டிய பலியாகும் பானங்களின் காணிக்கையும் இதோடு சேரவேண்டும்.

மாதாந்தர கூட்டங்கள்

11 “ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கர்த்தருக்கு விசேஷமான ஒரு தகனபலி கொடுக்க வேண்டும். இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதுடைய ஏழு பழுதற்ற ஆட்டுக் குட்டிகளையும் பலி தரவேண்டும். 12 ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். 13 ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் தரப்படும் தானியப்பலியில் பத்திலே ஒரு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். இவற்றை நெருப்பில் தகன பலிகயாகக் கொடுக்கவேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். 14 பானங்களின் காணிக்கையானது ஒவ்வொரு காளையோடு அரைப்படி திராட்சைரசமாக இருக்க வேண்டும். செம்மறி ஆட்டுக்கடாவோடு ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சை ரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் அரைப்படி திராட்சைரசமும் கொடுக்க வேண்டும். இவை தகன பலியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அளிக்க வேண்டும். 15 வழக்கமாக நாள் தோறும் தரப்படும் தகன பலியோடும், பானபலியோடும் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்க வேண்டும்.

பஸ்கா

16 “முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும். 17 அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும். 18 இதன் முதல் நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 19 கர்த்தருக்கு தகனபலி தர வேண்டும். அதில் 2 காளைகள், 1 ஆட்டுக்கடா, ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகள் இருக்க வேண்டும். இவற்றில் எந்தக்குறையும் இருக்கக் கூடாது. 20-21 தானியக் காணிக்கையாக ஒவ்வொரு காளையோடும் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடாவோடு பத்தில் இரண்டு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும்; ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும். 22 அத்தோடு நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அது உங்களை சுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலியாகும். 23 இதனை நீங்கள் வழக்கமாகக் காலையில் கொடுக்கும் பலியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

24 “இதுபோலவே, ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளிலும் இவற்றை நெருப்பில் தகன பலியாகக் கொடுக்க வேண்டும். அதனோடு பானங்களின் காணிக்கையும் சேரும். கர்த்தருக்கு இம்மணம் மிகவும் பிடிக்கும். இப்பலிகள் ஜனங்களுக்கு உணவாகும். நீங்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பலியோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.

25 “இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது.

வாரங்களின் விழா (பெந்தெகோஸ்தே)

26 “முதல் கனிகளைச் செலுத்தும் பண்டிகையின் போதும் (பெந்தெகோஸ்தே என்னும் வாரங்களின் பண்டிகை) புதிய அறுவடையின்போது கர்த்தருக்கு தானியக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 27 நீங்கள் ஒரு தகன பலியைக் கொடுக்க வேண்டும். இது நெருப்பின் மூலம் அளிக்கப்பட வேண்டும். இந்த வாசனை கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நீங்கள் 2 காளைகளையும், 1 செம்மறி ஆட்டுக்கடாவையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தர வேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதுடையதாய் பழுதற்றதாய் இருக்க வேண்டும். 28 ஒவ்வொரு காளையோடும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்; ஒவ்வொரு செம்மறி ஆட்டுக் கடாவோடும், 16 கிண்ணம் மெல்லியமாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 29 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும், 8 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். 30 ஒரு வெள்ளாட்டுக் கடாவை உங்களைச் சுத்தப்படுத்த பாவப்பரிகார பலியாகத் தர வேண்டும். 31 நீங்கள் இந்தப் பலிகளை வழக்கமாகத்தரும் தினப் பலிகளோடு சேர்த்துத் தர வேண்டும். மிருகங்களில் எவ்வித குறையும் இல்லாதவாறு எச்சரிக்கையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பானங்களின் காணிக்கைகளிலும் குறையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

எக்காளங்களின் பண்டிகை

29 “ஏழாவது மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்நாளில் எக்காளம் ஊதவேண்டும். அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும். அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். அதோடு பாவப்பிரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் உங்களை சுத்தப்படுத்த கொடுக்க வேண்டும். இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.

பாவப்பரிகார நாள்

“ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது. நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும். இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 10 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 11 அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

அடைக்கல கூடாரப் பண்டிகை

12 “ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். இது அடைக்கல கூடாரப் பண்டிகை எனப்படும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. கர்த்தருக்காக அந்நேரத்தில் ஏழு நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாகக் கொண்டாடவேண்டும். 13 நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 14 இதோடு உணவுப்பலியும் தரவேண்டும். ஒவ்வொரு காளைக்கும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கும் 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 15 ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 16 ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.

17 “இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும். 18 நீங்கள் இந்த மிருகங்களுக்கு ஏற்ற சரியான தானியக் காணிக்கையையும் தரவேண்டும். அதோடு பானங்களின் காணிக்கையும் காளையோடும், ஆட்டுக்கடாவோடும், ஆட்டுக்குட்டிகளோடும் தரவேண்டும். 19 பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.

20 “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 21 நீங்கள் இந்தக் காளை, கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 22 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேரவேண்டும்.

23 “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 24 இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 25 பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையுடன் கூடுதலான ஒன்றாகச் செலுத்த வேண்டும்.

26 “இந்த விமுறையின் ஐந்தாவது நாளில் நீங்கள் 9 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுகுட்டிகளையும் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக் குறைகளும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 27 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 28 நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

29 “இந்த விடுமுறையின் ஆறாவது நாளில் நீங்கள் 8 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்விதக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 30 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 31 நீங்கள் இவற்றில் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாக செலுத்த வேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

32 “இந்த விடுமுறையின் ஏழாவது நாளில் நீங்கள் 7 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், குறை இல்லாததாகவும் இருக்க வேண்டும். 33 நீங்கள் இதற்கு ஏற்ற சரியான அளவுடையதாக தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக் கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் தர வேண்டும். 34 நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.

35 “இந்த விடுமுறையின் எட்டாவது நாளில் ஒரு மிகச் சிறப்பான கூட்டம் நடைபெறும். அந்நாளில், நீங்கள் எவ்வித வேலையும் செய்ய வேண்டாம். 36 நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும் 37 இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 38 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

39 “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றை கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.

40 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கர்த்தர் ஆணையிட்ட அனைத்தையும்பற்றி கூறினான்.