Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

பலிகளும் காணிக்கைகளும்

தேவனாகிய கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டு ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து அவனிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள் மந்தையில் உள்ள பசுவாகவோ, ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ இருக்கலாம்.

“ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாக கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார்.

“அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு ஆசாரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும். பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.

10 “ஒருவன் தன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ நெருப்பிலிட்டு தகன பலியிட விரும்பினால் அது ஆண் மிருகமாக இருக்க வேண்டும். அதில் எவ்விதக் குறைபாடும் இருக்கக் கூடாது. 11 அதனை கர்த்தருக்கு முன்பு பலிபீடத்தின் வடக்குத் திசையில் வைத்துக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 12 பிறகு அம்மிருகத்தை ஆசாரியன் வெட்டித் துண்டாக்க வேண்டும். அவன் அந்தத் துண்டுகளை (தலை மற்றும் கொழுப்பு) பலிபீடத்திலுள்ள நெருப்பின் மேலுள்ள கட்டைகளின் மேல் வைக்க வேண்டும். 13 அதன் கால்களையும், உட்பாகத்தையும் ஆசாரியர்கள் தண்ணீரால் கழுவ வேண்டும். பிறகு துண்டாக வெட்டப்பட்ட மிருகத்தின் எல்லா பாகங்களையும் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பால் செய்யப்படுகிற தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.

14 “எவராவது ஒரு பறவையை கர்த்தருக்குப் பலியிட விரும்பினால் புறாவையாவது, இளம் புறாக்குஞ்சையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். 15 ஆசாரியன் அதனைப் பலிபீடத்திற்கு கொண்டு வந்து, அதன் தலையை கிள்ளி பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அப்பறவையின் இரத்தம் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த வேண்டும். 16 ஆசாரியன் அப்பறவையின் இரைப்பையையும், முடிகளையும் அகற்றி பலிபீடத்தின் கிழக்குப் பக்கமாக எறிய வேண்டும். அங்கேதான் பலிபீடத்தின் சாம்பலைப் போடுவார்கள். 17 ஆசாரியன் அதன் சிறகுகளை இரண்டாகப் பிளந்துவிடாமல் கவனமுடன் கிழிக்க வேண்டும். பிறகு அப்பறவையைப் பலிபீடத்தில் கட்டைகளின் மேல் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற தகன பலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.”

தானியக் காணிக்கைகள்

“ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப் போடவேண்டும். பிறகு அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடம் கொண்டு வரவேண்டும். எண்ணெயும் தூபவர்க்கமும் கலந்த அந்த மிருதுவான மாவில் இருந்து ஆசாரியன் கைப்பிடியளவு எடுத்து, பலிபீடத்தில் வைத்து அதனை எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற காணிக்கை ஆகும். இதன் வாசனை கர்த்தருக்குப் பிடித்தமானதாக இருக்கும். மிஞ்சின தானியமானது ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமாகும். கர்த்தருக்காக செய்யப்படுகிற இந்த தகன பலியானது மிகவும் பரிசுத்தமானது.

வேகவைத்த தானியக் காணிக்கைகள்

“ஒருவன் அடுப்பில் வேகவைத்த தானியப் பொருட்களை காணிக்கை செலுத்த விரும்பினால் அது புளிப்பில்லா அப்பமாக இருக்க வேண்டும். அதுவும் மிருதுவான மாவை எண்ணெயிலே பிசைந்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அப்பங்களாக இருக்க வேண்டும். தட்டையான சட்டியில் சமைத்துப் பக்குவம் செய்த பலகாரத்தை நீ தானியக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால் அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மிருதுவான மாவினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதைத் துண்டு துண்டாக உடைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும். இது தானியக் காணிக்கை ஆகும். நீ பொரிக்கும் சட்டியில் பாகம் செய்யப்பட்ட பலகாரத்தை தானியக் காணிக்கையாக செலுத்த விரும்பினால் அது மிருதுவான மாவிலே எண்ணெய் பிசைந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.

“இத்தகைய தானியக் காணிக்கையை நீ கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அதனை ஆசாரியனிடம் கொடுத்தால் அவன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் வைப்பான். பின்பு, ஆசாரியன் தானியக் காணிக்கையின் ஒரு பாகத்தை எடுத்து பலிபீடத்தில் ஞாபகக் காணிக்கையாக எரிப்பான். இக்காணிக்கை நெருப்பில் இடப்பட வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். 10 மீதியுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். கர்த்தருக்காக செய்யப்படும் தகனங்களில் இது மிகவும் பரிசுத்தமானதாகும்.

11 “புளித்த மாவினால் செய்யப்பட்ட எந்த தானியப் பொருட்களையும், தேனால் செய்யப்பட்ட எந்தப் பொருட்களையும் கர்த்தருக்குக் காணிக்கையாக எரிக்கக் கூடாது. 12 நீ முதல் அறுவடையிலிருந்து புளிப்பில்லாத அப்பத்தையும் அல்லது தேனையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரலாம். ஆனால் அதனைப் பலிபீடத்தின் மேல் இனிய வாசனையாக எரிக்க கூடாது. 13 நீ கொண்டு வருகிற எல்லா தானியக் காணிக்கைப் பொருட்களிலும் உப்பு சேர்ந்திருக்கட்டும். உன் தேவனின் உடன்படிக்கையில் உப்பை உன் தானியக் காணிக்கையில் குறைய விடாமல் பார்த்துக்கொள். உன் எல்லாக் காணிக்கைகளோடும் நீ உப்பைக் கொண்டுவர வேண்டும்.

முதல் அறுவடையிலிருந்து தானியக் காணிக்கை

14 “நீ முதல் அறுவடையிலிருந்து தானியங்களை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரும்போது, புதிய பச்சையான கதிர்களை நெருப்பால் வாட்டி உதிர்த்து கொண்டு வரவேண்டும். இதுவே உன் முதல் அறுவடையின் தானியக் காணிக்கையாகும். 15 அதன் மேல் நீ எண்ணெயையும், சாம்பிராணியையும் போட வேண்டும். இது தானியக் காணிக்கை. 16 ஆசாரியன் இதில் ஒரு பகுதியை எடுத்து ஞாபகார்த்தக் காணிக்கையாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலி ஆகும்.

சமாதானப் பலிகள்

“ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து ஆசாரிப்புக் கூடார வாசலில் அதனைக் கொல்ல வேண்டும். அப்போது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். சமாதான பலி கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலியாகும். பிறகு ஆசாரியன் மிருகத்தின் உள்பாகங்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும் காணிக்கையாக அளிக்கவேண்டும். அந்த மனிதன் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் சிறு குடல்களிலுள்ள கொழுப்பையும் முதுகின் கீழ் தசையின் மேலுள்ள கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள கொழுப்பையும் செலுத்த வேண்டும். அவற்றை சிறுநீரகங்களோடு நீக்க வேண்டும். பிறகு அதனை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தில் வைத்து எரிக்கும்படி நெருப்பின் நடுவில் இருக்கும் தகனபலியின் கட்டைகளின் மேல் இதை வைப்பார்கள். இது ஒருவகை தகன காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாகும்.

“ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைப் படைக்க வேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டைக் கொண்டு வரலாம். அந்த ஆடு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் எவ்விதத்திலும் குறை இல்லாததாக இருக்க வேண்டும். அவன் பலியிடக்கூடிய ஆட்டுக்குட்டியுடன் வந்தால், அதை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்து, அவன் தன் மிருகத்தின் தலைமேல் தன் கையை வைக்க வேண்டும். பிறகு ஆசாரிப்புக் கூடாரத்தின் முன்னால் அதனைக் கொல்ல வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். அவன் சமாதானப் பலியின் ஒரு பாகத்தை எரிக்கப்பட்ட பலியாக கர்த்தருக்கு அளிக்க வேண்டும். அவன் மிருகத்தின் கொழுப்பையும் கொழுப்பான வால் முழுவதையும், மிருகத்தின் உறுப்புகளின் உள்ளேயும் மேலும் படர்ந்துள்ள கொழுப்பையும் கொடுக்க வேண்டும். (அவன் அதனுடைய முதுகெலும்புக்கு அருகிலுள்ள வாலை வெட்ட வேண்டும்.) 10 இரண்டு சிறுநீரகங்களையும், கொழுப்புத் தசைகளையும், கல்லீரலைச் சுற்றியுள்ள கொழுப்பு பகுதிகளையும் கொடுக்க வேண்டும். அவன் சிறுநீரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். 11 பிறகு இவை அனைத்தையும் ஆசாரியன் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இவ்வாறு கர்த்தருக்காகப் படைக்கிற காணிக்கையே சமாதானப் பலியாகும். மேலும் இது ஜனங்களுக்கும் உணவாகிறது.

சமாதானக் காணிக்கையாக ஒரு வெள்ளாடு

12 “ஒருவன் சமாதானக் காணிக்கையாக வெள்ளாட்டைச் செலுத்த விரும்புவானேயானால் அவன் அதனை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வரவேண்டும். 13 அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்னால் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 14 அவன் சமாதானக் காணிக்கையாக ஒரு பகுதியை நெருப்பில் எரித்து கர்த்தருக்குக் காணிக்கையாக்க வேண்டும். குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின் மேலிருக்கிற கொழுப்பையும், 15 இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேல் உள்ள சிறு குடல்களில் உள்ள கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கூடக் கல்லீரலின் மேலுள்ள சதையையும் எடுத்து கர்த்தருக்குத் தகனபலியாகக் கொடுக்க வேண்டும். 16 பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அவற்றை எரிக்க வேண்டும். சமாதானப் பலி நறுமண வாசனையாக கர்த்தருக்கு எரிக்கப்பட்டக் காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். இது ஜனங்களுக்கு உணவாகவும் இருக்கும். ஆனால் சிறப்பான பாகம் முழுவதும் கர்த்தருக்குரியது. 17 கொழுப்பையும், இரத்தத்தையும் நீங்கள் உண்ணக்கூடாது. எங்கெங்குமுள்ள உங்கள் பரம்பரை முழுவதற்கும் இக்கட்டளை உரியது. நீங்கள் எங்கு வாழ நேர்ந்தாலும் கொழுப்பையோ, இரத்தத்தையோ, உண்ணக் கூடாது” என்றான்.

அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்

கர்த்தர் மோசேயிடம், “நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய நேர்ந்தாலும், ஒருவன் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.

“அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால் அந்த ஆசாரியன் தன் பாவத்துக்காக கர்த்தருக்குச் சில காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். அந்த ஆசாரியன் குறையற்ற ஒரு இளங்காளையைப் பாவப் பரிகாரப் பலியாகக் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு கர்த்தரின் சந்நிதானத்திற்கு அந்தக் காளையைக் கொண்டு வரவேண்டும். அவன் அதன் தலையின் மேல் தன் கையை வைத்து அதனைக் கொல்ல வேண்டும். பின் அந்த அபிஷேகம் பெற்ற ஆசாரியன் காளையின் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரவேண்டும். அவன் தன் விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு மகாபரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தரின் சந்நிதியில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். பின் ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து நறுமண பலிபீடத்தின் மூலைகளில் பூச வேண்டும். (இந்த பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருக்கு முன் இருக்கும்.) காளையின் எல்லா இரத்தத்தையும் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இப்பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) அதற்குப் பிறகு, பாவப்பரிகாரப் பலியாகத் தரப்பட்ட காளையின் கொழுப்பு அனைத்தையும் எடுக்க வேண்டும். காளையின் உட்பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து, அவன் அதன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றையொட்டி கீழ்ப்புறத்திலும், மேல்புறத்திலும் ஒட்டி இருக்கிற கொழுப்பையும் கல்லீரலில் இருக்கும் கொழுப்புப் பகுதிகளையும் சிறுநீரகங்களோடு சேர்த்து, 10 சமாதானப் பலியின் போது காளையிலிருந்து எடுப்பது போன்று இப்பாகங்களை எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். 11-12 ஆனால் ஆசாரியன் காளையின் தோலையும், அதன் குடல்களையும், கழிவுப் பொருட்களையும் தலையிலும் கால்களிலும் உள்ள மாம்சத்தையும் தனியே எடுக்க வேண்டும். அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டுபோய் சாம்பல் கொட்டுகிற சிறப்புக்குரிய இடத்தில் குவிக்க வேண்டும். பின்பு ஆசாரியன் இக்குவியலை விறகுகளின் மேல் அடுக்கி எரிக்க வேண்டும். சாம்பல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காளை எரிக்கப்பட வேண்டும்.

13 “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறியாமையால் பாவம் செய்து, கர்த்தர் எவற்றைச் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அவற்றை அவர்கள் தெரியாமல் செய்து பாவத்திற்குரியவர்களாகலாம். 14 அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்துகொள்ளும்போது, அதற்காக ஒரு இளங்காளையைப் பாவப்பரிகார பலியாக தங்கள் முழு நாட்டிற்காகவும் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பு கொண்டு வரவேண்டும். 15 இஸ்ரவேலின் மூப்பர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்கள் கைகளை அதன் தலையில் வைக்க வேண்டும். பின்னர் அதனை கர்த்தருடைய சந்நிதானத்தில் கொல்ல வேண்டும். 16 பின்னர் அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அக்காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வர வேண்டும். 17 ஆசாரியன் தனது விரலை இரத்தத்தில் தொட்டு கர்த்தருக்கு முன்னால் உள்ள திரையில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 18 பிறகு ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மூலைப்பகுதிகளில் பூச வேண்டும். (இப்பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் கர்த்தருக்கு முன்னால் இருக்கும்.) பின்பு ஆசாரியன் அக்காளையின் எல்லா இரத்தத்தையும் தகனபலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இது ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 19 பின் அக்காளையிடம் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். 20 பாவப்பரிகாரப் பலியைப் போலவே ஆசாரியன் இதன் பாகங்களையும் செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம், ஜனங்கள் அனைவரையும் சுத்திகரிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவன் மன்னிப்பார். 21 ஆசாரியன் மற்ற காளையைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டு சென்று முன்பு செய்தது போலவே இதையும் எரித்துவிடவேண்டும். இது முழு சமுதாயத்திற்கான பாவப்பரிகாரப் பலியாகும்.

22 “ஒரு ஆட்சியாளன் அசம்பாவிதமாக தன் தேவனாகிய கர்த்தர் செய்யவேண்டாம் என்று கூறியவற்றை மீறி செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்குரியவனாயிருக்கலாம். 23 அந்த ஆட்சியாளன் தனது பாவத்தைத் தெரிந்துகொண்டதும் அவன் எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆண் வெள்ளாட்டைக் கொண்டு வரவேண்டும். அதுவே அவனது காணிக்கை. 24 ஆட்சியாளன் தன் கையை ஆட்டின் தலைமேல் வைத்து, அதனை கர்த்தருக்கு முன்பு தகன பலியிடக் கூடிய இடத்தில் கொல்ல வேண்டும். அந்த வெள்ளாடுதான் பாவப்பரிகார பலியாகும். 25 ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைத் தன் விரலால் எடுத்து தகனபலிபீடத்தின் மூலைப் பகுதிகளில் பூச வேண்டும். மிச்சமுள்ள இரத்தத்தைத் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 26 ஆசாரியன் அந்த ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். சமாதானப் பலியில் செய்தது போன்றே இதிலும் கொழுப்பை எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆசாரியன் ஆட்சியாளனைப் பரிசுத்தப்படுத்திவிடலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

27 “பொது ஜனங்களில் ஒருவன் அசம்பாவிதமாக பாவம் செய்துவிடலாம். இப்படி அவன் கர்த்தர் சொன்னதை மீறி செய்யத் தகாததைச் செய்துவிடுகிறான். 28 அவன் தான் செய்தது பாவம் என்பதைத் தெரிந்துகொண்டவுடனே அவன் பழுதற்ற பெண் ஆட்டைக் கொண்டு வர வேண்டும். அதுவே அவனுடைய பாவப்பரிகாரப் பலி ஆகும். அவன் செய்த பாவத்திற்காக அவன் அதைக் கொண்டுவர வேண்டும். 29 அவன் தன் கையை அதன் தலைமீது வைத்து, தகன பலிக்குரிய இடத்தில் அதனைக் கொல்ல வேண்டும். 30 பிறகு ஆசாரியன் தன் விரல்களில் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். பின் அவன் மிச்சமுள்ள இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 31 சமாதானப் பலியில் செய்தது போன்று ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரித்துவிட வேண்டும். கர்த்தருக்கு இனிய நறுமணம் தரும்படி ஆசாரியன் அதனைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இம்முறையில் ஆசாரியன் அம்மனிதனைச் சுத்தப்படுத்தலாம். தேவன் அவனை மன்னித்துவிடுவார்.

32 “அவன் பாவப்பரிகாரப் பலியாக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொண்டு வருவானாகில், அது பழுதற்ற பெண் குட்டியாக இருக்க வேண்டும். 33 அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலிகளை வழங்கும் இடத்தில் அதனை பாவப்பரிகாரப் பலியாகக் கொல்ல வேண்டும். 34 ஆசாரியன் அதன் இரத்தத்தைத் தன் விரலில் எடுத்து தகன பலிபீடத்தின் மூலைகளில் தடவ வேண்டும். பின் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 35 சமாதானப் பலிகளில் செய்தது போலவே ஆட்டின் கொழுப்பை தகனபலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். மற்ற பலி முறைகளில் செய்தது போலவே பலிபீடத்தில் வைத்ததை எரிக்க வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவன் செய்த பாவத்திலிருந்து சுத்தப்படுத்தலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள்

“ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.

“ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.

“ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.

“ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப்பார்க்கும்போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை. ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியை கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.

“ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும். அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது. பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும். 10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது. 12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலிபீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும். 13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.

14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும். 16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.

17 “செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால் ஒருவன் பாவியாகிறான். அவன் அறியாமல் செய்தாலும் அது பாவமே. அவன் குற்றவாளியாகிறான். அவன் தன் பாவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 18 அவன் ஆசாரியனிடம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். எவ்வித குறைகளும் இல்லாததாக அந்த ஆடு இருக்கவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்ற நிவாரண பலி ஆகும். இந்த முறையில் ஆசாரியன் அவன் அறியாமல் செய்த பாவத்திலிருந்து அவனை சுத்தமாக்குவான், தேவனும் அவனை மன்னித்துவிடுவார். 19 ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.