Add parallel Print Page Options

19 கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.

20-21 “ஒருவன் இன்னொருவனைத் தன் கையால் அடித்துக் கொலைசெய்து விடலாம் அல்லது ஒருவன் இன்னொருவனைத் தள்ளி விட்டுக் கொன்றுவிடலாம். அல்லது ஒருவன் இன்னொருவன் மீது எதையாவது வீசியும் கொன்றுவிடலாம். ஒருவன் இவற்றை வெறுப்பின் காரணமாகச் செய்தால் அவன் கொலைகாரனாகிறான். அவன் கொலை செய்யப்பட வேண்டியவன் ஆவான். கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.

22 “ஆனால் ஒருவன் எதிர்பாராத விதத்தில் ஒருவனைக் கொன்றுவிடலாம். கொன்றுவிட்ட மனிதனின் மேல் அவனுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. எதிர்பாராத விதத்தில் நடந்தது இது அல்லது ஒருவன் எதையோ வீச அது எதிர்பாராதவிதமாக இன்னொருவன் மீது பட்டு அவன் மரிக்கலாம். அவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. 23 அல்லது ஒருவன் ஒரு கல்லை வீச அது இன்னொருவன் மீது பட்டு அவன் மரித்துப் போகலாம். அவன் யாரையும் கொல்லத் திட்டமிடவில்லை. அவன் யாரையும் வெறுக்கவில்லை. எதிர்பாராத விதத்தில் கொலை செய்துவிட்டான். 24 இவ்வாறு நிகழ்ந்தால், பிறகு சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்குரிய வழக்குமன்றமே நிறைவேற்ற வேண்டியதைத் தீர்மானிக்கும். சமூக நீதிமன்றமே கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ள ஒருவன், கொலைகாரனை கொலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும். 25 சமுதாய நீதிமன்றமானது கொலைகாரனைத் தண்டிக்க வேண்டாம் என்று எண்ணினால் அவனை அடைக்கலப் பட்டணத்துக்கு அனுப்பிவிடலாம். அவன், அப்போதைய தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்த பட்டணத்தில் இருக்க வேண்டும்.

26-27 “அவன் பாதுகாப்பான நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு போனால், அப்போது கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவனைப் பிடித்துக் கொன்றால், அது கொலை குற்றம் ஆகாது. 28 எதிர்பாராத விதமாக இன்னொருவனைக் கொன்ற ஒருவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை பாதுகாப்பான நகரத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். தலைமை ஆசாரியனின் மறைவிற்குப் பின்னர் அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 29 உங்கள் ஜனங்கள் வாழும் நகரங்களில் எல்லாம் இந்த விதிகள் என்றென்றைக்கும் இருக்கும்.

30 “சாட்சிகள் இருந்தால்தான், ஒருவனைக் கொலைகாரன் என்று முடிவு செய்து கொன்றுவிட தீர்ப்பளிக்க முடியும். ஒரு சாட்சி மட்டும் இருந்தால் ஒருவனைக் கொலைக் குற்றவாளியாக்க முடியாது.

Read full chapter