உபாகமம் 1:29-40
Tamil Bible: Easy-to-Read Version
29 “ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்! 30 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார், 31 அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் மகனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன்.
32 “ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை! 33 உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார்.
ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது
34 “நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து, 35 ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள். 36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.
37 “உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது. 38 ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார். 39 மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 40 ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
Read full chapter2008 by Bible League International