Add parallel Print Page Options

கர்த்தர் நேபுகாத்நேச்சாரை ஆளுபவனாக ஏற்படுத்தினார்

27 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் ராஜாவாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா ராஜாவின் குமாரன். இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, நீ பட்டையான வார் மற்றும் கம்பங்களையும்கொண்டு ஒரு நுகத்தடி செய். அதை உன் கழுத்தின் பின்னால் பூட்டிக்கொள். பிறகு நீ ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய ராஜாக்களுக்குச் செய்தியை (அதுபோன்று நுகத்தை) அனுப்பு. எருசலேமுக்கு வந்துள்ள இந்த ராஜாக்களின் தூதுவர்களிடம் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்க்கும்படி செய்திகள் அனுப்பு. அந்தத் தூதுவர்களிடம் அவர்களது எஜமானர்களிடம் செய்தியைக் கூறுமாறுச் சொல். அவர்களிடம் சொல்: சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் தேவன் சொல்கிறார்: ‘நான் பூமியையும் அதன் மேல் ஜனங்களையும் உண்டாக்கினேன் என்று சொல். நான் பூமியின் மேல் அனைத்து மிருகங்களையும் உண்டாக்கினேன். நான் இவற்றை எனது பெரும் வல்லமையாலும் பலமான கையாலும் செய்தேன். இந்தப் பூமியை நான் விரும்புகிற யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன். நான் இப்பொழுது பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் உங்கள் நாடுகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவன் எனது வேலையாள். அவனுக்குக் காட்டு மிருகங்கள்கூட பணியும்படிச் செய்வேன். அனைத்து நாடுகளும் நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்யும். அவனது குமாரனுக்கும் பேரனுக்கும் சேவைசெய்யும். பிறகு பாபிலோன் தோற்கடிக்கப்படக் கூடிய காலம் வரும். பல நாடுகளும் பெரும் ராஜாக்களும் பாபிலோனைத் தம் வேலையாளாக வைப்பார்கள்.

“‘ஆனால், இப்பொழுது சில நாடுகளும் இராஜ்யங்களும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்ய மறுக்கிறது. அவர்கள் நுகங்களைத் தம் கழுத்தில் மாட்டிக்கொள்ள மறுக்கலாம். அது நிகழந்தால், நான் செய்வது இதுதான். அந்த நாட்டை நான் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயால் தண்டிப்பேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அந்த நாட்டை அழித்து முடிக்கும்வரை இதனைச் செய்வேன். நேபுகாத்நேச்சாருக்கு எதிராகச் சண்டையிட்ட நாடுகளை அழிக்க நான் அவனைப் பயன்படுத்துவேன். எனவே, உங்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல மந்திரத்தைப் பயன்படுத்தும் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். தங்கள் கனவுகளுக்கு விளக்கங்கள் கூறுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். மரித்தவர்களோடும் மந்திரம் பயிற்சி செய்வோர்களோடும் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அந்த ஜனங்கள் எல்லாம் உங்களிடம், ‘பாபிலோன் ராஜாவுக்கு அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள். 10 ஆனால் அந்த ஜனங்கள் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தாய் நாட்டிலிருந்து தூர நாட்டிற்குக் கொண்டுப்போகப்பட அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். நான் உங்களை வீட்டிலிருந்து போகும்படி வற்புறுத்துவேன். நீங்கள் வேறு நாட்டில் மரிப்பீர்கள்.

11 “‘ஆனால் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குள் தங்கள் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிபவர்களாக வாழ்வர். நான் அந்நாட்டாரைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இருந்து பாபிலோன் ராஜாவுக்கு சேவைசெய்யச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘அந்நாடுகளில் உள்ள ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்ந்து பயிர் செய்வார்கள்.’”

12 நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிற்கு அதே செய்தியைக் கொடுத்தேன். நான், “சிதேக்கியா, நீ பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குள் உன் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து போக வேண்டும். நீ பாபிலோன் ராஜாவுக்கும் அவனது ஜனங்களுக்கும் சேவைசெய்தால், பிறகு நீ வாழ்வாய். 13 பாபிலோன் ராஜாவுக்கு சேவை செய்ய மறுக்கும் ஜனங்கள் பகைவரின் வாள், பசி, பயங்கரமான நோய் ஆகியவற்றால் மரிப்பார்கள். பாபிலோனிய ராஜாவுக்குப் பணிபுரிய மறுக்கும் ஜனங்களுக்கு இவை எல்லாம் நிகழும். கர்த்தர் இக்காரியங்கள் நடக்கும் என்று கூறினார். 14 ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகளோ, ‘பாபிலோன் ராஜாவுக்கு நீங்கள் என்றென்றும் அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள்.

“அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரச்சாரம் செய்கின்றனர். 15 ‘நான் அத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை!’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது ‘அவர்கள் பொய்களைப் போதிக்கிறார்கள். இது என்னிடமிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, யூதாவின் ஜனங்களாகிய உங்களை வெளியே அனுப்புவேன். நீங்களும் மரிப்பீர்கள். உங்களிடம் கள்ள தீர்க்கதரிசனம் உரைத்த அத்தீர்க்கதரிசிகளும் மரிப்பார்கள்.’”

16 பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். 17 அத்தீர்க்கதரிசிகளை கவனிக்காதீர்கள். பாபிலோன் ராஜாவுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வீர்கள். எருசலேம் நகரம் அழிக்கப்பட நீங்கள் காரணமாக இராதீர்கள். 18 அம்மனிதர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தால், கர்த்தரிடமிருந்து வார்த்தையைப் பெற்றிருந்தால், அவர்களை ஜெபிக்க விடுங்கள். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். ராஜாவின் அரண்மனையில் இன்னும் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்க விடுங்கள். எருசலேமில் இன்னும் இருக்கின்ற பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். இவ்வனைத்து பொருட்களும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லாமல் இருக்கும்படி அத்தீர்க்கதரிசிகளை ஜெபிக்கவிடுங்கள்.

19 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமில் இன்னும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றிக் கூறுகிறார். ஆலயத்தில் தூண்களும் கடல் தொட்டியும் ஆதாரங்களும் மற்ற பணிமுட்டுகளும் உள்ளன. பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமில் இவற்றை விட்டுவைத்தான். 20 நேபுகாத்நேச்சார், ராஜா யோயாக்கீமை சிறைக்கைதியாக வெளியே கொண்டு சென்றபோது, இப்பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. யோயாக்கீம் ராஜாவின் குமாரன் எகொனியாவையும் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் சில முக்கியமான ஜனங்களையும் நேபுகாத்நேச்சார் கொண்டு சென்றான். 21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றி கூறுகிறார்: ‘அப்பொருட்கள் அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லப்படும். 22 அவற்றைப் பெறுவதற்காக நான் போகும் காலத்தில் அப்பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பிறகு நான் அப்பொருட்களைத் திரும்ப கொண்டுவருவேன். இந்த இடத்தில் அப்பொருட்களை மீண்டும் வைப்பேன்.’”

பொய்த் தீர்க்கதரிசி அனனியா

28 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் குமாரன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்: “சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன். இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்ற எல்லாப் பொருட்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். ஆனால் நான் அப்பொருட்களை இங்கே எருசலேமிற்குக் கொண்டு வருவேன். நான் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவையும் இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவேன். எகொனியா யோயாக்கீமின் குமாரன், நேபுகாத்நேச்சார் பலவந்தப்படுத்தி வீட்டைவிட்டு அழைத்து பாபிலோனுக்குச் சென்ற ஜனங்கள் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘எனவே யூதாவின் ஜனங்கள் மீது பாபிலோன் ராஜாவால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்!’”

பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசிக்கு பதில் சொன்னான். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கொண்டிருந்தனர். எரேமியாவின் பதிலை ஆசாரியர்களும் அங்குள்ள அனைத்து ஜனங்களும் கேட்க முடிந்தது. எரேமியா அனனியாவிடம் “ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியை கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.

“ஆனால் நான் சொல்லவேண்டியதை கவனி, அனனியா, ஜனங்கள் அனைவருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனி. நீயும் நானும் தீர்க்கதரிசிகளாக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு சில தீர்க்கதரிசிகள் இருந்தனர். போர், பசி, பயங்கரமான நோய் ஆகியவை பல நாடுகளுக்கும், பெரும் இராஜ்யங்களுக்கும் ஏற்படும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”

10 எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான். 11 பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான்.

அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான்.

12 பிறகு கர்த்தருடைய செய்தி எரேமியாவிற்கு வந்தது. இது, அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை எடுத்து உடைத்தப் பிறகு நிகழ்ந்தது. 13 கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார், “போய் அனனியாவிடம் சொல். ‘இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நீ ஒரு மரநுகத்தை உடைத்து விட்டாய். நான் மரநுகத்தின் இடத்தில் இரும்பாலான நுகத்தை வைப்பேன்.’ 14 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’”

15 பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம் சொன்னான், “அனனியா, கவனி! கர்த்தர் உன்னை அனுப்பவில்லை. ஆனால் நீ யூதாவின் ஜனங்களைப் பொய்யை நம்பச்செய்தாய். 16 எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”

17 அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.