Añadir traducción en paralelo Imprimir Opciones de la página

யோபு பதில் கூறுகிறான்

21 அப்போது யோபு பதிலாக:

“நான் சொல்வதற்குச் செவிகொடும்.
    அதுவே, நீர் எனக்கு ஆறுதல் கூறும் வகையாயிருக்கும்.
நான் பேசும்போது பொறுமையாயிரும்.
    நான் பேசி முடித்தபின்பு, நீங்கள் என்னைக் கேலிச்செய்யலாம்.

“நான் ஜனங்களைப்பற்றிக் குறை கூறவில்லை.
    நான் பொறுமையாயிராததற்குத் தக்க காரணம் இருக்கிறது.
என்னைக் கண்டு அதிர்ச்சியடையும்,
    உம் கையை வாயில் வைத்து, அதிர்ச்சியால் என்னைப் பாரும்!
எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது,
    நான் அஞ்சுகிறேன், என் உடம்பு நடுங்குகிறது!
தீயோர் ஏன் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்?
    அவர்கள் ஏன் நீண்ட ஆயுளுடையவர்களாகவும் வெற்றிபெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்?
அவர்கள் பிள்ளைகள் தங்களோடு வளர்வதைத் தீயோர் பார்க்கிறார்கள்.
    அவர்களின் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும்படித் தீயோர் வாழ்கிறார்கள்.
அவர்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளது, அவர்கள் பயப்படுவதில்லை.
    தீயோரைத் தண்டிப்பதற்கு தேவன் ஒரு கோலையும் பயன்படுத்துவதில்லை.
10 அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை.
    அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.
11 ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
    அவர்கள் குழந்தைகள் சுற்றிலும் நடனமாடுகிறார்கள்.
12 தம்புறா, யாழ், குழல் ஆகியவற்றின் ஓசைக் கேற்ப அவர்கள் பாடி, நடனமாடுகிறார்கள்.
13 தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள்.
    பின்பு, அவர்கள் மடிந்து துன்பமின்றி அவர்களின் கல்லறைக்குப் போகிறார்கள்.
14 ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்!
    நாங்கள் செய்வதற்கென நீர் விரும்புவதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை!’ என்கிறார்கள்.
15 தீயோர், ‘சர்வ வல்லமையுள்ள தேவன் யார்?
    நாம் அவருக்கு சேவை செய்யத் தேவையில்லை!
    அவரிடம் ஜெபிப்பது உதவாது,’ என்கிறார்கள்!

16 “அது உண்மையே, தீயோர் அவர்களாக வெற்றிக் காண்பதில்லை.
    அவர்கள் அறிவுரையை நான் பின்பற்ற முடியாது.
17 ஆனால், தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்?
    எத்தனை முறை தீயோருக்குத் துன்பம் நேர்கிறது?
    எப்போது தேவன் அவர்களிடம் கோபங்கொண்டு அவர்களைத் தண்டித்தார்?
18 காற்று புல்லைப் பறக்கடிப்பதைப் போலவும்,
    பெருங்காற்று தானியத்தின் உமியைப் பறக்கடிப்பதைப்போலவும், தேவன் தீயோரைப் பறக்கடிக்கிறாரா?
19 ஆனால் நீங்கள், ‘தந்தையின் பாவத்திற்கென்று தேவன் ஒரு பிள்ளையைத் தண்டிக்கிறார்’ என்கிறீர்கள்.
    இல்லை! தேவன் தாமே தீயோனைத் தண்டிக்கட்டும். அப்போது அத்தீயோன், அவன் செய்த பாவங்களுக்குத் தண்டனை பெற்றதை அறிவான்!
20 பாவம் செய்தவன் தான் பெற்ற தண்டனையைப் பார்க்கட்டும்.
    சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபத்தை அவன் உணரட்டும்.
21 தீயவனின் வாழ்க்கை முடியும்போது, அவன் மடிகிறான்,
    அவன் தன் பின்னே விட்டுச் செல்லும் குடும்பத்தைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

22 “ஒருவனும் தேவனுக்கு அறிவைப் போதிக்க முடியாது.
    உயர்ந்த இடங்களிலிருக்கிற ஜனங்களையும் கூட தேவன் நியாயந்தீர்க்கிறார்.
23 ஒரு முழுமையும் வெற்றிகரமுமான வாழ்க்கைக்குப் பின் ஒருவன் மரிக்கிறான்.
    அவன் முழுக்க பாதுகாப்பான, சுகமான வாழ்க்கை வாழ்கிறான்.
24 அவன் உடல் போஷாக்குடையதாக உள்ளது.
    அவன் எலும்புகள் இன்னும் வலிவோடு காணப்படுகின்றன.
25 ஆனால், மற்றொருவன் கடின வாழ்க்கை வாழ்ந்து, கசப்பான ஆன்மாவோடு மரிக்கிறான்.
    அவன் நல்லவற்றில் களிப்படைந்ததில்லை.
26 இறுதியில், இருவரும் ஒருமித்து மண்ணில் கிடப்பார்கள்.
    அவர்கள் இருவரையும் பூச்சிகள் சூழ்ந்துக்கொள்ளும்.

27 “ஆனால், நீங்கள் நினைப்பதை நான் அறிவேன்,
    என்னைத் துன்புறுத்த நீங்கள் விரும்புகிறீர்கள் என அறிவேன்.
28 நீங்கள், ‘நல்லவன் ஒருவனின் வீட்டை எனக்குக் காட்டுங்கள்’
    இப்போது, தீயோர் வாழுமிடத்தை எனக்குக் காட்டுங்கள் என்கிறீர்கள்.

29 “நீங்கள் நிச்சயமாக பயணிகளிடம் பேசியிருக்கலாம்.
    நிச்சயமாக நீங்கள் அவர்களின் கதைகளை ஏற்கலாம்.
30 அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.
    தேவன் தமது கோபத்தைக் காட்டும்போது, அவர்கள் அதற்குத் தப்பியிருக்கிறார்கள்.
31 யாரும் தீயவனை அவன் செய்த தவறுகளுக்காக அவனெதிரே விமர்சிக்கிறதில்லை.
    அவன் செய்த தீமைகளுக்காக ஒருவரும் அவனைத் தண்டிக்கிறதில்லை.
32 அத்தீயவனைக் கல்லறைக்குச் சுமந்துச் செல்லும்போது,
    அவன் கல்லறையருகே ஒரு காவலாளி நிற்கிறான்.
33 எனவே பள்ளத்தாக்கின் மண்ணும் அத்தீயவனுக்கு இன்பமாயிருக்கும்.
    அவன் கல்லறையின் அடக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் செல்வார்கள்.

34 “நீங்கள் உங்கள் வெறுமையான வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் கூறமுடியாது.
    உங்கள் பதில்கள் எனக்கு உதவமாட்டாது!” என்றான்.