Add parallel Print Page Options

மோசேயின் பாட்டு

15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்:

“நான் கர்த்தரைப் பாடுவேன்!
    அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார்,
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்.
கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார்.
    நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன்.
    நான் அவரை மதிப்பேன்.
கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர்,
    கர்த்தர் என்பது அவரது பெயர்.
பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார்.
    பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர்.
ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது.
    அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.

6-7 “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது.
    கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது.
உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர்.
    உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது.
உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று.
    ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது.

“நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன்.
    எனது வாளால் அவற்றை அபகரிப்பேன்.
    நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான்.
10 ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர்.
    ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்.

11 “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
    இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை!
    நீர் மேலான பரிசுத்தமானவர்!
    நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்!
    நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்!
12 வலதுகரத்தை உயர்த்தி உலகத்தை அழிக்க உம்மால் முடியும்.
13 ஆனால் உமது இரக்கத்தால்
    நீர் மீட்ட ஜனங்களை வழிநடத்துகிறீர்.
உமது வல்லமையால் அவர்களைப் பரிசுத்தமும்,
    இன்பமுமான நாட்டிற்குள் நடத்துகிறீர்.

14 “பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள்.
    பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.
15 ஏதோமின் தலைவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
மோவாபின் தலைவர் பயத்தால் நடுங்குவார்கள்.
கானானின் ஜனங்கள் துணிவிழப்பார்கள்.
16 அவர்கள் உமது ஆற்றலைக் காண்கையில் அச்சத்தால் நிரம்புவார்கள்.
    கர்த்தரின் ஜனங்கள் செல்லும்மட்டும், உம்மால் உண்டாக்கப்பட்ட உமது ஜனங்கள் கடந்து செல்லும்மட்டும் அவர்கள் உறுதியான பாறையைப் போல ஸ்தம்பித்து நிற்பார்கள்.
17 கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர்.
    உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே,
    நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்!

18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”

19 ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாக கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.

20 அப்போது, தீர்க்கதரிசினியும், ஆரோனின் சகோதரியுமாகிய மிரியாம் ஒரு தம்புருவை எடுத்தாள். மிரியாமுடன் பெண்கள் பாடவும் நடனம் ஆடவும் செய்தனர். மிரியாம்,

21 “கர்த்தரைப் பாடுங்கள்!
    அவர் பெரிய செயல்களைச் செய்தார்.
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்தினார்” என்று பாடினாள்.

இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திற்குள் செல்லுதல்

22 செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 23 மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது)

24 மோசேயிடம் வந்து ஜனங்கள், “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.

25 மோசே கர்த்தரை வேண்டினான், கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை தண்ணீருக்குள் போட்டான். அவன் அவ்வாறு செய்தபோது, அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று.

அவ்விடத்தில், கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்த்து அவர்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார். ஜனங்களின் நம்பிக்கையையும் சோதித்துப் பார்த்தார். 26 கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார்.

27 பின்பு ஜனங்கள் ஏலிமுக்குப் பயணமாயினர். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே தண்ணீர் இருந்த இடத்தினருகே ஜனங்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.